நான் ஆதர்ஷ்… என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவனை நேருக்கு நேராக பார்த்தான் தினேஷ்… சொல்லுங்க என்ன விஷயம் என்று கேட்டவனிடம், முகிலன்-மயூரி விஷயத்தை சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்… முகிலன் என் தம்பி என்பதற்காக சொல்லவில்லை… உண்மையிலேயே அவன் திறமைசாலி… நல்லவன்… அவனுக்கு நீங்கள் மயூரியை திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் சந்தோஷமாக இருப்பான்… வீட்டில் அப்பா-அம்மாவிற்கும் சம்மதம் தான்… ஆனால் அதில் … என்றவன் பொறுமையாக அனைத்தையும் கூற, தினேஷின் முகத்தில் ஈயாடவில்லை…
இதில் இவ்வளவு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை… சரி முதலில் அப்பாவிடம் தங்கைகள் இருவருக்கும் நல்ல வரன் வந்திருக்கின்றது, அதுவும் அண்ணன்-தம்பி மாப்பிள்ளைகள் என்று கூறியிருக்கின்றேன் சரிதானா ஆதர்ஷ்??? என்று கேட்க…
மாப்பிள்ளை…. நான்…. என்று இழுத்தவனிடம்… நீங்களும்-சாகரியும் ஒருவரை ஒருவர் விரும்புவது எனக்கு தெரியும்… மேலும் என் நண்பன் ஷ்யாமின் குடும்பத்தில் இருந்து வந்திருக்கின்றீர்கள்… உங்களை நான் எப்படி மறுப்பேன்?...
மாமாவை உங்களுக்கு… எப்படி… ஓ… உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதென்று நினைத்தேன்… இப்போது தான் புரிகிறது… அக்கா-மாமாவின் திருமணத்தில் பார்த்திருக்கின்றேன்.. இப்போது தான் நினைவு வருகிறது… என்று சொல்லியவனிடம்…
ஒரு நாள் உன்னை கோவிலில் பார்த்தேன்… அப்போது தான் உன்னைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்… உன் பூர்வீகம் ஊட்டி என்பது தெரிய வந்தது… அப்போது தான் ஷ்யாமிடம் உதவி கேட்க சென்றேன்… அங்கு அவனிடம் பொதுவாக வேலை சம்மந்தமாக பேசி கொண்டிருந்துவிட்டு நான் திரும்பும் போது அங்கு மேஜையில் உங்களின் குடும்பப்படம் இருந்தது…… நான் உங்கள் இருவரையும் கைகாட்டி இவர்கள் யார் என்று கேட்டேன்… அனுவின் தம்பிகள் என்றும், திருமணத்தில் நீ அவர்களைப் பார்த்திருப்பாய்… இப்போது மறந்திருப்பாய் என்றான்…
நிறைவான திருப்தியுடன் அப்பாவிற்கு அன்றே தகவல் தெரிவித்தேன் உங்கள் இருவரையும் பற்றி… ராசுவிடம் பேசிவிட்டு சொல்வதாக அப்பாவும் சொன்னார்… அவரின் பதிலுக்காக நான் காத்திருக்கும்போது தான் நீ வந்து எல்லா விஷயத்தையும் சொல்கிறாய்…
ஹ்ம்ம்… அப்பா ஊருக்கு நாளை வருகிறார்… அவரிடமும் பேசிவிட்டு நல்ல முடிவை எதிர்நோக்கி காத்திருப்போம் ஆதர்ஷ்… சரிதானா??? என்று கேட்டவனிடம் என்ன சொல்வது ஏது பேசுவது என்று தெரியாதிருந்தான் ஆதர்ஷ்…
தம்பியின் திருமணத்திற்காக போராடுகிறாய்… முதலில் அவர்களின் திருமணம் பற்றி பேசுகிறாய்… உன் நலத்தை பெரிதாய் நினைக்காது அடுத்தவருக்காக உதவும் இந்த குணம் எனக்கு பிடித்திருக்கின்றது ஆதர்ஷ்…
ஆனால்… உன் உயரம் தான் கொஞ்சம் அஞ்ச வைக்கின்றது… மலைக்கும் மடுவிற்கும் ஒட்டுமா என்ற கேள்வி எழுகிறது ஆதர்ஷ்…
என்னவள் இல்லையென்றால் அனைத்தும் இருந்தும் நான் இல்லாதவன் தான்… அவளுக்காக எனது அடையாளத்தை நான் அழித்துவிடுகின்றேன்… என் தம்பிகளுக்கு முழு பொறுப்பு கொடுத்து அவர்களை இந்த துறையில் கால் ஊன்ற செய்து அவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்ட பின் தங்களின் தங்கையை பெண் கேட்கின்றேன்… அப்போது அச்சமில்லாமல் எங்கள் திருமணத்திற்கு சம்மதிப்பீர்கள் தானே???
காதல் தான் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கின்றது???... விரும்பும் ஒருத்திக்காக தனது நிலையை தாழ்த்திக்கொள்ள விரும்பும் இவனை அடைய அவள் கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும்…
காதல் அடையாளத்தை கொடுக்கணுமே தவிர, அழிக்கக்கூடாது ஆதர்ஷ்… உன்னை விட நல்லவன் திறமையானவன் என் தங்கைக்கு கிடைக்க மாட்டான்.. நீ தான் சாகரிக்கு கணவன்... என்ற தினேஷிடம் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன் நிச்சயம் என்றான் ஆதர்ஷ் நன்றியுடன்…
அதே நேரம், ஊரில், வா ஜனா… வாங்க அண்ணா… என்று வரவேற்ற ராசு-செல்வியிடம் சுற்றி வளைக்காது நேரடியாக வந்த விஷயத்தை சொன்னவர், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்…
எனக்கு சம்மதம் ஜனா…. நீ மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை பார்… ஒரே வீட்டில் நம் இரு பெண்களும் வாழ விதி இருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்???... என்றபடி எழுந்து சென்றவனை பார்த்துக்கொண்டிருந்த ஜனாவிடம், அண்ணா அவர் தான் சொல்லிவிட்டாரே இன்னும் என்ன யோசனை என்று கேட்டார் செல்வி…
இல்லம்மா… அவன் மாப்பிள்ளைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் போகின்றானே அதான்… யோசிக்கின்றேன்… என்றவரிடம், அவர் வேறொன்று நினைத்திருந்தார் இப்போது வேறொன்று நடக்கின்றது… அதனால் தான் அப்படி எதுவும் பேசாது செல்கிறார்… விடுங்கள்… இறைவன் விதித்தது தானே நடக்கும்… நீங்கள் தினேஷிடம் நம் சம்மதத்தை தெரிவித்துவிடுங்கள்… அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது நீங்களும் அவரும் மாப்பிள்ளைகளை பார்த்துவிட்டு வாருங்கள்… என்று செல்வி சொன்னதை கேட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவர் தனது மனைவியிடம் அனைத்தையும் சொல்லி அவரின் பதிலுக்காக காத்திருந்தார்…
செந்தாமரையின் யோசனைப்படி தினேஷிடம் தங்கள் நால்வருக்கும் சம்மதம் என்று தெரியப்படுத்தினார் ஜனா…
அன்று தான் தினேஷ் காவ்யாவிடம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான்… ஆதர்ஷும் தன்னவளின் கரம் பற்றினான் சாகரியின் தாய் தந்தையருக்கு சம்மதம் என்ற தினேஷின் வார்த்தையில் நிறைவு கொண்டு…
பிறகு ஒரு நாள் சென்னைக்கு வந்த ஜனா ஆதர்ஷை சந்தித்தார்… அவருக்கு அவனைப் பிடித்துவிட, முகிலனையும் தூரத்தில் இருந்து காண்பித்தான் ஆதி… மயூரிக்கு ஏற்ற ஜோடி தான் முகிலன் என்றெண்ணிக்கொண்டார் அவரும்…
மெல்ல தினேஷும், ஆதர்ஷும் ஒருவர் மாறி ஒருவர் விஷயத்தைக்கூற, இப்போது புரிந்து போனது அவருக்கு ராசு ஏன் விரக்தியாக அன்று பதில் அளித்தான் என்பது….
அவரும் அன்று ராசுவிடம் பேசியதை சொன்னபோது, பிரச்சினை இனி தான் ஆரம்பிக்க போகிறது போலும் என்று நினைத்துக்கொண்டனர் சிறியவர்கள் இருவரும்…
அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்தார் போல், ஜனாவும், நான் ராசுவிடம் பேசி சரி செய்கிறேன்… கொஞ்ச நாள் போகட்டும்… முகிலன்-மயூரிக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொள்ள, நிச்சயம் தெரியாது மாமா… என்றான் ஆதர்ஷும்…
மாமா என்ற அழைப்பில் குளிர்ந்து தான் போனார் அவரும்… உறவுகள் கொடுக்கும் அர்த்தத்திற்கும், அது கொடுக்கும் திருப்திக்கும் ஈடே உலகில் இல்லை…
சிறிய வார்த்தை தான்… எனினும் அது அள்ளித்தரும் மகிழ்ச்சிக்கு மட்டும் எல்லையே இல்லை எந்த தேசத்திலும்…
பல வருடம் கழித்து பிறந்த தன் மகளை மணமுடிப்பவன் நல்லவனாக இருக்க வேண்டும், அவன் குடும்பம் அவளை பெற்றவர்கள் போல் அரவணைத்திட வேண்டும் என்று வேண்டியவரின் கனவு இன்று ஆதர்ஷின் மூலம் நிறைவேறிடும் என்றே அவருக்கு தோன்றியது…
தன்னைப்போல் என்ன தன்னைவிடவும் தன் மகளை நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையை அவருக்கு ஆதர்ஷின் நடவடிக்கையும் பேச்சும் ஏற்படுத்திக்கொடுத்தது…
இது தானே வேண்டும் பெண்ணைப் பெற்றவருக்கு?... இந்த நிம்மதி தானே கேட்கின்றனர் பெண்ணைப் பெற்றவர்கள் தங்களது வருங்கால மாப்பிள்ளையிடம்…
செடியைப் பிடுங்கி வேறிடம் நடுவது போல் தான் பெண்களின் திருமணம்… புது இடத்தில் இருக்கும் சூழ்நிலை அந்த பெண்ணிற்கு சாதகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை… ஆனால் பாதகமாக இருக்க கூடாதென்று தான் பெண்ணைப் பெற்றவர்கள் விரும்புகின்றனர்…
எல்லாம் நல்லபடியாக நடக்க அருள் செய் இறைவா என்று வேண்டிக்கொண்டவர் ராசுவிடம் எப்போது பேச வேண்டும் என்று சிந்தித்தவாறு ஊருக்கு கிளம்பினார் மகனிடமும், வரப்போகும் மருமகனிடமும்…
நானும் கிளம்புகிறேன் என்ற ஆதர்ஷிடம்… ஹ்ம்ம்… சரி சரி… கோவிலில் தானே சந்திப்பு… ஹ்ம்ம்.. போய் வாருங்கள் என்றான் தினேஷ்…
மௌனமாக சிரித்தவன், இல்லை நான் போகவில்லை என்றால் வருத்தப்படுவாள்… என்றான்…
போய் வா ஆதர்ஷ்… என்று தினேஷும் வழியனுப்பி வைத்தான் அவனை…
அப்படி அங்கு சென்றவன்தான் தான் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து இன்று அவளை தன் சரி பாதி ஆக்கிவிட்டான்…
அவள் கொடுத்த ஓவியத்தை அவன் மனதில் எண்ணியபடி செய்ய சொல்லிவிட்டு வந்தவன் அவளுக்காக ஒரு ஓவியம் வரைந்தான்….