ஒவ்வொரு வளைவிலும் அவனை யாரோ ஒருவன் மறை முகமாக பின் தொடர்கிறான். இவன் உள்ளுணர்வில் உணர்ந்து திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை.
இருள் கவிழ்ந்து முழு இருட்டு. ஆங்காங்கே தீப் பந்தங்கள். கடை பொருட்களை மூடை கட்டி கழுதை மீது சில வியாபாரிகள் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.
சிலர் அதை சிறு அறைகளில் வைத்து பூட்டிக் கொண்டிருக்கின்றனர். இவன் பயணம் தொடர்கிறது. இவனைத்தொடர்பவனும் தொடர்கிறான்.
காட்சி மாறுகிறது.
நவ நாகரீகமான ஒருவன் தன் காரிலிருந்து இறங்குகிறான். நேரமாகி விட்டதா என அவசரமாக தன் வாட்ச்சைப் பார்த்துக் கொள்கிறான். அவன் முகம் அருகில் தெரிகின்றது. அதில் அபிஷேக்கின் சாயல்.ஆனால் அவன் அபிஷேக்கிற்கு பரிச்சயமற்றவன்.
எதிரிலிருந்த அந்த கட்டிடத்திற்குள் நுழைகிறான். யாரோ ஒருவனுடன் உள்ளே நுழைந்தவன் பேசுகின்றான். அவன் முகம் தெரியவில்லை. ஆனால் உள்ளே இருந்தவன் தனக்கு பரிச்சயமானவன் என அபிஷேக்கிற்கு தோன்றுகிறது. யார்????
உள்ளிருந்தவனும் அபிஷேக் சாயல் கொண்டிருந்தவனும் கட்டி தழுவுகின்றனர். மகிழ்ச்சி. ஆனால் எதிர்பாராத விதமாக கொடூரமாக அபிஷேக்கின் சாயலிலிருந்தவனின் கைகளை வெட்டித் தள்ளுகிறான் உள்ளிருந்தவன். தனித்து விழுந்து துடித்த கைகளை எடுத்து தன் கோர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தரையில் கிடந்து துடித்தவனைத் திரும்பிப் பாராமல் செல்கிறான் வெட்டியவன்.
“அண்ணா....இப்படி செய்துவிட்டாயே, உன்னை நம்பினேனே....” அபிஷேக் சாயல் கொண்டவன் கதறல்.
மீண்டும் முதல் காட்சி தொடர்கிறது.
இப்பொழுது அபிஷேக் நடந்து கொண்டிருப்பது ஒரு ஒத்தையடிப் பாதை. ஒரு புறம் தென்னை மரம். இது தெரிந்த இடமாக தெரிகிறது. மறு புறம் பெரும் பள்ளமாய் இருக்க வேண்டும். இருட்டு மாத்திரம் தெரிகிறது.
திடீரென இவன் மேல் பாய்ந்தான் இவனைத் தொடர்ந்தவன். இவனை பக்கவாட்டிலிருந்த பெரும் பள்ளத்திற்குள் தள்ள முயன்றான். பெரும் போராட்டம்.
காட்சி மாறுகிறது.
சாக்கை உடையாய் அணிந்து ஒருவன் எங்கோ அலைகிறான். ஏழ்மை உடை எங்கும். பசி அவன் முகத்தில். வெயில் காயும் ஒரு கடைத் தெருவில் கை வண்டிக்கு அருகில் சென்று அமர்கிறான். பிச்சை எடுக்க தொடங்குகிறான். அவனது கைகள் வெட்டப்பட்டிருந்தன. முகத்தில் அபிஷேக்கின் சாயல்.
காட்சி மாறுகிறது.
.இங்கு போராட்டம் தொடர்கிறது. பள்ளத்திற்குள் அபிஷேக் விழப்போகும் நொடி தற்காத்துக் கொள்ள கிடைத்ததைப் பற்றிக் கொள்ளப் பார்க்கிறான். இவனுக்கு இரு கைகளும் இல்லை.
“அண்ணா இப்படி பண்ணாதே....”கத்துகிறான் அபிஷேக்.
விழித்து எழுந்தான் அபிஷேக். இன்னும் அரை மணி நேரத்தில் விடியும் என்றது கடிகாரம்.
தொடரும்
{kunena_discuss:762}