(Reading time: 13 - 26 minutes)

 

ள்ளிரவு 12 மணி காட்டியது ஆதர்ஷின் கைக்கடிகாரத்தில்…

அந்த விசாலமான அறையின் குறுக்கே நடந்து கொண்டிருந்த ஆதியிடம், என்னடா… இதுதானா?... யாரையும் காணோமேடா… நாம நாளைக்கு காலையில் வரலாமா?... என்று ஹரி கேட்க…

இல்லடா… இன்னைக்கு நான் சந்திப்பேன்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…. என்று ஆதி முடிக்கும் முன்,

உன் நம்பிக்கை வீண் போகவில்லை ஆதர்ஷ் ராம்… என்னுடைய இடத்திற்கு உன்னை உளமாற வரவேற்கிறேன்… நீ வருவாய் என்று தெரியும்…. ஆனால், இத்தனை சீக்கிரத்தில் நான் உன்னை எதிர்பார்க்கவில்லைதான்…. என்றான் அந்த புதியவன்….

ஆறடிக்கும் குறைவான உயரம் இல்லை அவனுடையது… மாநிறத்திலே இருந்தான்… முகத்தில் களையுடன் காணப்பட்டான் அந்த புதியவன்… தோற்றத்தில் அழகானவனாகவே இருந்தான் அவன்… ஆனால், அவன் கண்களில் மட்டும் பழி வாங்கும் உணர்வு தாண்டவமாடியது….

எதிர்பார்க்கவில்லையா?... ஏன் இன்னும் ரிகாவை கொடுமை பண்ண திட்டமிட்டிருக்கிறாயா?... என்றபடி கோபக்கனலுடன் புதியவனை ஏறிட்டான் ஹரி…

கொடுமையா?.... நானா?... ஹரி புரிந்து தான் பேசுகிறாயா?... சரி விடு… ஆமாம் ஆதி, எப்படி இருக்கிறாள் என் காதலி?... என்றதும் ஹரி அவனை நோக்கி பாய்ந்தான்…

ஆதி இடையிட்டு அவனை தடுத்தான்… கண்களில் தெரிக்கும் அக்னியுடன் புதியவனை பார்த்தான் ஆதர்ஷ்…

இலங்கேஷ், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு…. போதும்…. - ஆதி

பரவாயில்லையே… என் பெயர் கூட தெரிந்திருக்கிறதே உனக்கு… -இலங்கேஷ்…

ஏன் உன்னால் மட்டும் தான் மற்றவரைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமா?.....

நிச்சயம் இல்லை தான்… அது தான் நிரூபித்து விட்டாயே… நீ புத்திசாலி என்று… எனில் எனக்கு வேலை சுலபம் தான்… நீயே தேடி வந்த பிறகு இன்னும் நான் ஏன் தாமதிக்க வேண்டும்… சொல்…?

பச்….வீண் வார்த்தைகள் பேசி நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை… நீ செய்த மாபெரும் தவறுக்கு பிராயசித்தம் செய்யும் எண்ணம் உனக்கு இருக்கிறதா இல்லையா?... -ஆதி

முதலில் நீ செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்… பிறகு நானே வழிய வந்து செய்கிறேன் நீ சொன்னபடி… -இலங்கேஷ்…

நான் உனக்கு உதவி தான் செய்தேன்… அது தவறென்று இப்போது நீ சொல்லித்தான் தெரிகிறது….

நீ செய்த உதவி நீ முதலில் செய்த தவறுக்கான பிராயசித்தம்… ஆனால், அதன் பின் நீ இன்று வரை இழைத்துக்கொண்டிருக்கும் தவறுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?...

உன்னைக்கொன்று புதைக்க போகிறேன்… என்றவாறு ஹரி அவனை நோக்கி அடியெடுத்து வைக்க, ஆதர்ஷ் கையமர்த்தி ஹரியை தடுத்தான்…

விடுடா… இவனை பேசவிட்டு வேடிக்கை பார்க்க என்னால முடியாது… இவனை இப்போவே இங்கேயே கொன்றால் தான் என் ஆத்திரம் அடங்கும்…

ஹரி… சொல்வதைக்கேள்… இப்போது நமக்கு ஆத்திரம் முக்கியமல்ல… கொஞ்சம் பொறுமையாக இரு… என்று ஆதி ஹரிக்கு அறிவுரை கூற,

என்ன ஆதி எடுத்து சொல்லிவிட்டாயா அவனிடத்தில்… அவசரப்பட்டு வார்த்தைகளை சிந்தவிட்டால், பின் நீங்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுவீர்கள்… முக்கியமாக சாகரிகா… அவனிடம் அதை தெளிவாக கூறிவிடு…  என்று இலங்கேஷ் சொன்னதும் தான், ஆதியின் பொறுமைக்கான காரணம் ஹரிக்கு விளங்கிற்று…

பற்களைக் கடித்துக்கொண்டு, சாரிடா மச்சான்…. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்… நீ பேசு… என்றபடி சற்று அகன்றான் ஹரி…

அவன் அகன்றதும், அந்த அறையே அதிரும் வண்ணம், உரக்க நகைத்தவன், நீங்கள் என்னைத்தேடி வந்த காரணம் எனக்குத்தெரியும்… நீங்கள் வரவேண்டும் என்று தான் இத்தனை நாட்கள் நானும் காத்திருந்தேன்… ஆனால், நான் எதிர்பார்க்காதது, உங்களுக்கு உண்மை அனைத்தும் தெரிந்திருப்பது தான்… அதற்காக தான் ஆதியை நான் புத்திசாலி என்று கூறினேன் வந்தவுடன்…

ஹ்ம்ம்.. உங்களுக்கு வேண்டியது உண்மை எனும் பட்சத்தில், எனக்கும் ஒன்று வேண்டும்… என்று நிறுத்தினான் இலங்கேஷ்….

ஆதி கல்லென நின்றிருக்க, இலங்கேஷின் பார்வையை அவன் தவிர்த்தான்…

நீ புத்திசாலி என்று நான் அறிவேன்… நானே என் வாயால் அதை சொல்ல வேண்டுமா ஆதி?.... என்று அவனிடத்தில் கேட்க… அவன் அசையாதிருந்தான்…

ஆதர்ஷ்… சொல்… உன் முடிவு என்ன?.... என் நிபந்தனைக்கு சம்மதம் என்று சொல்… என்றதும்

அது நான் செத்தாலும் நடக்காது என்றான் ஆதி தீர்க்கமாக….

அப்போ, உண்மையும் வெளி வராது என்னால்… என்றான் இலங்கேஷும்…

டேய்…. ஏண்டா இப்படி சாகடிக்குற?...

நீதாண்டா சாகடிச்சிட்டிருந்த இத்தனை நாளா… இனியாச்சும் சில பேரோட வாழ்க்கை நல்லாயிருக்கட்டுமேன்னு நினைச்சேன்… உனக்கு அது பிடிக்கலை போல… சரி விடு… பார்த்துக்கலாம் என்ற இலங்கேஷ் ஆதி கோபத்தோடு நிற்பதை பார்த்துவிட்டு,

சரி, உனக்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன்… யோசித்து நல்ல பதிலை சொல்… என்று ஆதியிடத்தில் கூறியவன், ஹரியிடம், நீயாவது எடுத்து சொல் ஹரி இவனுக்கு… நல்ல முடிவை எடுக்க வை… உங்களுக்கு அதிக நாள் அவகாசமும் நான் கொடுக்கவில்லை… அதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது… புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் என்றவன் சென்றுவிட்டான் சட்டென்று….

தியை அழைத்துக்கொண்டு வீடு வந்த ஹரி அவனை உலுக்க, அவன் அசையாதிருந்தான்…

பேசித்தொலைடா… என்னாச்சுன்னு தான் சொல்லித்தொலையேன்…. ஏன் இப்படி அமைதியா இருக்குற?...

ஹரி அண்ணா… ஆதி அண்ணாவை திட்டாதீங்க… ப்ளீஸ்…

திட்டாம எப்படிடா இருக்க சொல்லுற?... இப்படி சிலையாட்டம் இருக்கிறான்… நான் என்னடா நினைக்கிறது?...

இருங்க அண்ணா… நான் பேசிப் பார்க்குறேன்… என்றவனிடத்தில் நீ பேசிப் பழகினதால தானே அத்தனைப் பிரச்சினையும் என்றான் மெல்ல…. அவன் நினைவும் காலையில் நடந்ததை நினைவு கூர்ந்தது…

அவ்னீஷ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன ஆதியை சற்று வினோதமாகப் பார்த்தான் ஹரி….

அவ்னீஷைத் தேடி சென்ற ஹரி அவனது சட்டையை கொத்தாகப் பிடித்தான்… அவ்னீஷ் புரியாமல் பார்க்க,

டேய்… பாவி… நீயெல்லாம் மனிதனாடா… அவளைக் காப்பாற்றிக்கொண்டு வந்து சேர்த்தாய் என்று நினைத்தேனே… இப்போதல்லவா தெரிகிறது…. அவளை இந்நிலைக்கு ஆளாக்கியதே நீதான் என்று…

அண்ணா… என்ன சொல்லுகிறீர்கள்… எனக்கு எதுவும் புரியவில்லையே…

புரியாது தாண்டா… புரியாது தான்… செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது நடிக்கிறாயா?... என்ற ஹரியை ஆதி மேற்கொண்டு பேசவிடாமல் செய்தான்… அவ்னீஷை நேருக்கு நேராக பார்த்தான்…

ஆதி அண்ணா, நான் எந்த தவறும் செய்யவில்லை… நீங்களாவது நம்புங்கள்… என்று அவ்னீஷ் சொல்லிய போது,

அவ்னீஷ், மும்பையில் நள்ளிரவில் ஒரு பெண்ணை மருத்துமனையில் இருந்து கடத்திச் செல்வதற்கு உதவினாயா?... என்று ஆதி கேட்டதும்,

ஆமாம் அண்ணா… நான் உதவி பண்ணினேன்… என்றவன் அன்று நடந்ததை தன் இரு அண்ணன்களிடத்திலும் உரைத்தான்…

என் அண்ணனுக்கு அவசரக்கல்யாணம், பொண்ணு வீட்டில் சம்மதிக்கலை… ஆனா, பொண்ணுக்கு ரொம்ப இஷ்டம் என் அண்ணன் மேல…. கொஞ்சம் தயங்குறாங்க…. வீட்டை மீறி வெளியே வருவதற்கு…

இங்கே மருத்துமனையில் அவங்க உறவினரைப் பார்க்க இப்போ வந்திருக்காங்க… இந்த சமயம் பார்த்து அவங்களை நாம கடத்திட்டு போயிடலாம்… அப்புறம் எல்லாம் என் அண்ணன் பார்த்துப்பார்… ப்ளீஸ் அவ்னீஷ்… இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு… நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட நமக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு சொல்லியிருக்காங்க… ப்ளீஸ்டா… சரின்னு சொல்லுடா…ன்னு என்னை ரொம்ப கெஞ்சி கேட்டா என் கூட படிச்ச என் பிரெண்ட்…. அதான் அண்ணா அன்னைக்கு நான் ஹெல்ப் பண்ணினேன்… ஏன் அண்ணா, அதனால எதும் பிராப்ளமா?... அன்னைக்கு நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு அப்புறம் உடனேயே கிளம்பிட்டேன்… வேற என்ன நடந்துச்சுன்னு கூட எனக்கு தெரியாது… பின்னாளில் ஒருநாள் நான் கேட்டப்போ அவங்க சந்தோஷமா இருக்குறாங்கன்னு சொன்னா….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.