03. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி
மதுரனைக் காணப் போவதற்கான ஆவலே ஆனந்த அலைகழிப்பாய் அன்று காலை நல்லிசையை இழுக்காத குறையாய் இழுத்து வந்திருந்தது கல்லூரிக்கு. வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே கல்லூரியை அடைந்திருந்தாள். ஆனால் அவளுக்கும் முன்னதாக வந்திருந்த சிலர் வளாகத்தின் மரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய ஹோர்டிங்கைப் பார்த்துக் கொண்டிருக்க இவளும் அதில் ஒன்றை கவனித்தாள்.
மதுரன் இவள் முன் முழங்காலிட்டு மன்றாடுவது போல் மாபெரும் சைஸில் புகைப் படம்.
பல்லவியில் தொடவில்லை நீ நடன ஆபரணம்
பாவை குரலில் பாடலில் அடைந்தேன் பூரணம்
இசையால் இசைக்குள் ஒரு மரணம்.
பாதியில் மெட்டாய் சலங்கை இட்டாய்
இடையில் நிறுத்த இயலவில்லை
இனிய பாடலை, இதுவே காரணம்.
இசையே மன்னிப்பாய்
இவன் சரணம் சரணம் சரணம்.
அவன் இவளை பாட அனுமதித்து முடிவில் தகுதி நீக்கம் செய்ததற்கான காரணத்தை விளக்க மன்றாடுவது போல் ஹோர்டிங்ஸ்.
வளாகம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஏராள எண்ணிக்கையில். அதில் சொல்லப் பட்டிருப்பது நியாயமான காரணமாக இருக்கலாம். ஆனால் சொல்லும் முறை இதுவா?
இவளை இழிவு படுத்தும் வார்த்தைகள் கருத்துக்கள் எதுவும் இல்லை என்ற போதும் மனம் அவமானத்தில் கூசுகிறது.
அதோடு உடன் பயிலும் ஒவ்வொருவரின் துக்க விசாரிப்புகள். அனுமானங்கள். கசப்பும் வெறுப்பும் குன்றலுமாய் இவளை குறுக்குகிறது.
மதுரன் இப்படிப் பட்டவனா?
ஈகோயிஸ்ட்….அவன் இவளிடம் பேச வந்ததை இவள் தவிர்த்தற்கா இப்படி செய்துவிட்டானா???
அல்லது இதை செய்தது வேறு யாருமோவா?
ஆனால் ஏன்??
மதுரன் இவளிடம் வந்து இதைப் பற்றி பேசுவான் என எதிர்பார்த்தாள் நல்லிசை. அவன் சொல்லும் எதையும் சந்தேகமின்றி நம்பவும் அவள் தயார்தான். ஆனால் அன்று அவன் அவள் கண்ணில் தட்டுப் படவே இல்லை.
அதோடு விசாரணை என கல்லூரி நிர்வாகம் இவளை அழைத்து இவளையே குற்றம் சாட்டிய போது அவன் அங்கு மௌனமாக நின்றிருந்தான். ஒரு வார்த்தை மறுக்கவில்லை.
ஆம் நிர்வாகம் இதை செய்தது இவள் தான் என இவளையே எச்சரித்தது. இவள் பணக்கார வீட்டு ஸ்பாய்ல்ட் கிட்….பொழுது போக்கிற்கு படிக்க வந்திருக்கிறாள்…..போட்டியில் இவள் தோற்கடிக்கப்பட்டதால் மதுரனை பழி வாங்க அவன் இவள் காலில் விழுந்து மன்றாடுவது போல் இப்படி ஹோர்டிங் வைத்து அவமான படுத்துகிறாள்…என்ற ரீதியில் இவளை காரணபடுத்தியது.
இப்படி அவர்கள் எண்ண கூடும் என்று கூட அதுவரை அவளுக்குத் தோன்றவே இல்லை.
இவளது எந்த வார்த்தைகளையும் அவர்கள் காதில் வாங்கவே தயாராக இல்லை. மதுரனை அவர்களுக்கு நன்றாக தெரியுமாம். யூஜியில் இருந்து அங்குதான் படிக்கிறானாம். அவன் மீது இதுவரை எந்த ப்ளாக் மார்க்கும் இல்லையாம்…மிகவும் பொறுப்பானவனாம்…அதோடு இந்த அளவு செலவு செய்ய கூடிய வசதியற்ற மிடில் க்ளாஸ் பின்புலம் அவனதாம்….இவளை அவர்கள் எச்சரித்த விதத்தில் கூனி குறுகிவிட்டாள் நல்லிசை.
அதோடு விசாரணை முடிந்து இவள் அறையைவிட்டு வெளியே வந்த பொழுது இவளுக்குப் பின்னாகத்தான் வந்தான் மதுரன்.
அப்பொழுது கூட ஒரு வார்த்தை “இதல்லாம் பெருசா எடுத்துக்காத இசை” என அவன் சொல்ல மாட்டானா என ஏங்கியது இவள் மனது. ஆனால் அவன் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை நிர்வாகத்தினர் போல் நீ தான் இப்படி செய்துவிட்டாய் எனபது போன்று அவன் குற்றம் சட்டி இருந்தாலும் கூட இவள் மனதிற்கு அவன் விலகத்திற்கு ஒரு நியாயமான காரணம் கிடைத்திருக்கும்.
ஆனால் அவன் இதை எதையும் செய்யாமல் விலகிப் போனான். அதுவும் கோபமான விலகல் கூட இல்லை. ஒருவித தர்ம சங்கடமான, தவிப்பான விலகல். ஏன்?
குற்றமனப்பான்மையா? அல்லது அவன் செயலை இவள் கண்டுபிடித்துவிடுவாள் என்ற பயமா? செய்தது அவன் தான் என அறிவு நம்ப, அதை ஏற்காத மனம் கசந்து காய்ந்தது.
இருந்த மன நிலையில் ஹாஸ்டலுக்கு கிளம்ப வேண்டும் என்று தோன்றிவிட்டது அவளுக்கு. கார் பார்க்கிங் சென்றால் அந்த சதீஷ்.
“இதெல்லாம் பெருசா நினச்சு ஃபீல் செய்யாதீங்க இசை…மது சார்க்கும் உங்களுக்கும் எதோ சண்டைனு தான் எல்லோரும் நினைப்பாங்களே தவிர வேற மாதிரி எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க…”
“ம்”
“இப்படி ஒரு மூட்ல டிரைவ் பண்ணாதீங்க….டாக்ஸி வரச் சொல்லிப் போங்க….” மதுரனிடமிருந்து இவள் கேட்க தவித்த வார்த்தைகளை சதீஷ் சொல்லிக்கொண்டு இருந்தான்.
அவனை ஆழமாக ஒரு பார்வை.
“என்னமோ தெரியலை மிஸ்டர்.சதீஷ்….ஆரம்பத்துல இருந்து நீங்க என்ட்ட நடிக்ற மாதிரியே ஒரு ஃபீல்…..என் காரை பங்க்சர் செய்தது நீங்க தான் இல்லையா….? என்னால உங்களுக்கு எதோ காரியம் ஆக வேண்டி இருக்குதுன்னு தோணுது….பட் ஐ மேக் இட் க்ளியர்….நியாயத்துக்கு புறம்பான எந்த உதவியும் என்ட்ட இருந்து உங்களுக்கு கிடைக்காது……நியாயமான உதவிதான்னா……ஃப்ரெண்டானாத்தான் செய்வேன்னு இல்லை…..எனிமிக்கு கூட செய்து கொடுப்பேன்……சோ ஃஸ்டாப் ஆக்டிங்……என்ன ஹெல்ப் வேணும்…?”
அவன் முகத்தில் இவளை உறுத்திக் கொண்டிருந்த நடிப்பு காணாமல் போயிருந்தது.
“ஸ்மார்ட்…..வெரி ஸ்மார்ட்…இவ்ளவு கண்டு பிடிச்ச நீ என் மோடிவ் என்னங்கிறதையும் கண்டு பிடியேன்….பட் நானும் ஒரு விஷயத்தை க்ளியரா சொல்லிடுறேன்…..உன்னால எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருக்குது….அதை உன்னை வச்சு கண்டிப்பா சாதிச்சுப்பேன்….நீ விரும்பினாலும் விரும்பலைனாலும்…பை த வே ஸேஃபா ஹாஸ்டல் போ……” சட்டென இவள் கார் கீயை இவளிடமிருந்து பிடுங்கியவன், தன் காரைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.
என்ன செய்கிறது என வார்த்தையால் வரையறுக்க முடியவில்லை ஆனால் எதோ உள்ளத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் உபாதையாய் இருந்தது. கண்ணெல்லாம் ஒருவித எரிச்சல் வேறு. ஆட்டோ எடுத்து தன் ஹாஸ்டலை அடைந்து தன் அறையில் மெத்தையில் விழுந்தது வரை அவளுக்கு தெளிவாக பிரஞ்சை இருந்தது.
மனமெல்லாம் ஒரே ஆராய்ச்சி…..மதுரன் ஏன் விலகிப் போகிறான்? அப்படியானால் இதை செய்தது அவன் தானா? சுபாவத்தில் நல்லவனான மதுரன் வில்லன் வேலை பார்க்க,
வில்லன் சதீஷ் இவளிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?
ஒருவாறு மன நிலை சற்று இயல்பாகி இவள் கண் திறக்க முயன்றால்…கண் திறக்க மறுக்கிறது. நாசியில் விதமான வாசம்.
மருத்துவமனையில் இருக்கிறாளா?
இவள் நெற்றியில் பாசமான ஒரு கர ஸ்பரிசம். அப்பா வந்துருக்காங்களோ?
ஐயோ….விஷயம் தெரிஞ்சா இவளை ஹாஸ்டலோட பெயர்த்து தூக்கிட்டு போயிடமாட்டாங்களா? உண்மையிலேயே இப்போ என்ன நடந்துட்டுன்னு நான் இவ்ளவு சிக்கா ஃபீல் பண்றேன்….ஐ அ ஸ்ட்ராங் கேர்ள்… தன்னை தானே நினைவுகளில் உற்சாகபடுத்தி எழும்ப முயல்கிறாள்.