(Reading time: 15 - 30 minutes)

12. காதல் உறவே - தேவி

மிது, ஸ்ருதி சந்தோஷின் அத்தை பெண். சந்தோஷ் பிறந்த போது அவன் அப்பாவிற்கும், அவன் மாமாவிற்கும் ஏதோ சொத்து பிரிப்பதில் தகராறாகி விட்டது. அதனால் இரு வீட்டாருக்கும் இடையே போக்குவரத்துக் கிடையாது.

நான் படித்து முடித்து விட்டு நம் தொழிலைப் பார்க்க ஆரம்பித்த சமயம், என் நெருங்கிய நண்பனுக்குத் திருமணம் முடிந்தது. எங்கள் ஸெட்டில் அவனுக்குத்தான் முதலில் திருமணம் ஆனது. எல்லாரும் சந்தோஷத்தோடு அவனை வாழ்த்தினோம். அவர்களும் இதே ஊரில் தான் இருந்தார்கள். எங்கள் நண்பர்கள் எல்லோரும் மாதத்திற்கொரு முறை அனைவரும் கூடி ஒரு அரை நாளை செலவழிப்போம்.

அவனும் ஒரு மூன்று மாதம் வழக்கம் போல் வந்தான். அவனிடம் பழைய துறுதுறுப்பு இல்லையெனக் கேட்டபோது அது கல்யாணமாகி விட்டதால் வந்த பொறுப்பு என்று பதில் வந்தது. பிறகு அவன் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்க மாட்டான். ஆறு மாதத்திற்குப் பிறகு அவன் வருவதேயில்லை. 

Kathal urave

ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருமுறை அவனை எதேச்சையாக ஒரு கஸ்டமர் வீட்டுத் திருமண விழாவில் சந்திக்க நேர்ந்தது. அதற்கு அவன் மனைவி வரவில்லை. அவனிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் பெற்றோர், உடன்பிறந்தவர்களைப் பற்றி விசாரித்தபோது

“டேய் ராம், என் மனைவி ஒரு பிசாசுடா. ஒருவரையும் அண்ட விட மாட்டாள். நான் இப்போது தனிக் குடித்தனம் இருக்கிறேன். அவளுக்கு அவள் அப்பா, அம்மா, அவள் கூடப்பிறந்தோர் மட்டும் தான் சொந்தம். என் சொந்தங்களையோ, நண்பர்களையோ மதிப்பதில்லை. நான் கல்லூரியில் படிக்கும்போதெல்லாம், என் திருமணத்திற்குப் பிறகு எல்லோரும் குடும்பத்தோடு பழக வேண்டும் என்று எண்ணியவன். ஆனால் அவளோ ஒரு உடம்பு முடியாமல் படுத்தால் கூட யாரும் வந்து பார்க்கக் கூடாது என்கிறாள். என் கூடப்பிறந்தவர்கள் யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது. ஏன் அவர்களோடு பேசவே கூடாது.

நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு என் பெற்றோரைப் பார்ப்பேன். இத்தனைக்கும் அவர்கள் அவள் நோக்கம் புரிந்து திருமணமான மூன்று மாதத்திலேயே சொத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டனர். என் தங்கையின் திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட என்னிடம் எதிர்பார்க்கவுமில்லை. ஒரு அண்ணனாக என்னை எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்கு கூட என்னை போக விடவில்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு ஏதாவது நான் செய்தால் அது இன்னும் அவளை வெறியேற்றுவதைப் பார்த்து நானே அவர்களின் நிம்மதிக்காக விலகி விட்டேன்.” என்றான்

எனக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டது. இத்தனைக்கும் அவள் சாதாரண கிராமத்துப் பொண்ணுதான். அவளே இப்படியென்றால் நகரப் பெண்களெல்லாம் எப்படியிருப்பார்கள் என்று திகைத்து விட்டேன் மிது. “

ஏதோ கேட்க வந்த மைதிலி பிறகு நிறுத்தவும், ராம் “மிது, இதற்கும் ஸ்ருதிக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றித் தானே கேட்கப் போகிறாய். நான் சொல்கிறேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு கூட சரி அவன் மனைவி சரியில்லை என்று மட்டும் தான் நினைத்தேன். நாளை எனக்குத் திருமணம் ஆனாலும் என் மனைவி என்றும் இந்த உறவுகளை வளர்க்க வேண்டும் என்று மட்டும் எண்ணினேன்.

சபரியும், சைதன்யாவும் ஒரு வருடம் மட்டுமே வயது வித்தயாசம். சபரி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்தபோது சைதன்யா அவள் சேர்ந்த அதே கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்தாள். அவளோடு சேர்ந்தவள் தான் ஸ்ருதியும். அவள் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள். சபரி, சைதன்யா, ஸ்ருதி மூவரும் நல்ல பிரெண்ட்ஸ். சபரி அவர்களுக்கு சீனியர் என்பதால் பாடங்கள் படிக்க மூவரும் நம் வீட்டிற்கு வருவார்கள். ஸ்ருதி அப்பா, அம்மா அண்ணா என்று தான் அழைப்பாள். அப்போது சந்தோஷ{ம் சில சமயம் வருவான்.

இந்த நிலையில் தான் ஒரு நாள் அத்தையின் திருமண ஆல்பம் பார்த்துக் கொண்டிருந்த போது ஸ்ருதி எங்கள் மாமாவை அடையாளம் கண்டு கொண்டாள். அதன் பின்பு அவள் அதிகமாக இங்கே வந்ததோடல்லாமல் அவள் சந்தோஷிடம் பழகுவதில் வித்தியாசம் தெரிந்தது. இந்த மாற்றமும் என் கண்ணில் மட்டுமே பட்டது.

நான் அவளை தனியாக விசாரித்தபோது “அண்ணா, சைதன்யாவின் அப்பா எனக்கு சொந்த தாய் மாமா. எனக்கும் முதலில் தெரியாது. அன்றைக்கு அந்த திருமண ஆல்பத்தில் என் அம்மாவைப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். என் அப்பா வழிப் பாட்டிக்கு என் அத்தையின் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதுள்ள பொறாமையால் என் அப்பாவிற்கும் மாமாவிற்கும் தகராறை ஏற்படுத்தி குடும்பத்தைப் பிரித்து விட்டார்கள். என் அம்மாவும் அவர்கள் பிறந்த வீட்டைப் பற்றி பேசியதில்லை. இந்த ஆல்பம் பார்த்துவிட்டு நான் கேட்டபோது என் அப்பா, பாட்டியைப் பற்றி நான் வெறுக்கமாலிருக்க இதைப் பற்றிப் பேசியதில்லை என்றார்கள். ஆனால் முதலிலேயே எனக்கும் சைதன்யாலிற்கும் உள்ளுர ஒரு பிரியம் ஏற்பட்டு விட்டது. மேலும் எனக்கு என் அம்மாவின் சொந்தங்களை அவர்களிடம் சேர்க்க வேண்டும் என்றும் ஆசை. அதனால்தான் நான் சந்தோஷ் அத்தானிடம் பேச ஆரம்பித்தேன். ஆனால் இது உள்@ர காதலாக வளர்ந்து விட்டது. நான் இதை எப்படிக் கையாள்வது என்று நினைத்தேன் நல்லவேளை நீங்களே கண்டுபிடித்து கேட்டீர்கள். என் காதலை நிறைவேற்றுங்கள்” என்றாள்.

எனக்கு பெரும் அதிர்ச்சியாகி இருந்தது மிது. பிறகு மெதுவாக மாமாவிடம் அவர்கள் தங்கையைப் பற்றிப் பேசினால் அவர் வெட்டு குத்து ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் ஸ்ருதி தன் காதலைச் சேர்த்து வைக்கக் கூறி பிரஷர் கொடுத்தாள். அம்மாவிற்கும் அத்தைக்கும் நான் ஸ்ருதியின் அம்மாவைப் பற்றிப் பேசியது சந்தேகத்தைத் தரவே அவர்கள் என்னிடம் விசாரித்த போது உண்மையைச் சொல்லி விட்டேன். இது வேறு யாருக்கும் தெரியாது. அப்பொழுது எனக்கு அத்தையிடம் அம்மாவிற்கு உள்ள அன்பும், அம்மாவை அத்தை தன் சகோதரியாக பார்க்கும் அன்பும்தான் அவர்களின் உறவை பலப்படுத்துகிறது என்று தோன்றியது. இப்படி இருந்தும் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறதே என்று எண்ணி, ஒன்று அம்மா, அத்தை போல் அனுசரித்துப் போகும் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும். அது இந்தக் காலப் பெண்களிடம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இல்லை உறவென்று யாருமில்லாத பெண்ணைப் பார்க்க வேண்டும். அவளுக்கு இவர்களின் அன்பே பிராதானமாகத் தோன்றும் என்று மனதில் அழுந்தப் பதித்தேன்.

இந்த நிலையில் தான் நான் உன்னை;ப் பார்த்தேன். என் மனநிலைக்கு ஏற்றவளாகத் தோன்றினாய். நம்முடைய கல்யாணம் முடிந்தது. அந்த சமயம் ஸ்ருதி காலேஜ் முடித்து விட்டதால் நம் கல்யாணத்திற்கு வரவில்லை. நம் பிரச்சினை நடந்த போது தனக்கு கல்யாணத்திற்கு பார்ப்பதாகவும், தன் காதலைச் சேர்த்து வைக்கவும் கேட்டு போன் செய்தாள். நான் சரிவராது என்று மறுத்துக் கூறிய போது “நீங்கள் மட்டும் பார்த்த இரண்டே நாளில் யாரென்று தெரியாத மைதிலியை காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நான் என் மாமா பையனை விரும்புவது தவறா?” என்று கேட்டுக் குடைய ஆரம்பித்தாள். தினம் அவளது டார்ச்சரால் எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருந்த போது தான் நீ ஸ்ருதியைப் பற்றிக் கேட்கவும் என்ன சொல்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேசி விட்டேன். நீ கேட்ட விதத்தில் உனக்கு என்மேல் சந்தேகம் என்று நினைத்தேன். என்னிடம் உள்ள கெட்ட குணம் என்னை நம்பவில்லை தோன்றினால், அவர்கள் முகத்தில் கூட முழிக்க மாட்டேன். ஆனால் என்னால் உன்னிடம் அப்படி இருக்க முடியவில்லை.

நீ தூங்கிய பிறகு தினமும் உன்னைப் பார்த்து விட்டுதான் செல்லேன். இது உனக்குத் தெரியாது. அம்மா ஒருநாள் உன்னிடம் கோபமாக பேசியதாகச் சொன்ன போது ஏன் அப்படி பேசினீர்கள் என்றேன். அப்போது “அம்மா, அவளைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நானே ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று நொந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு” என்று கூறினாயே. நீ உன் வாழ்வில் மகிழ்ச்சியாயில்லை. அதற்கு மைதிலிதான் காரணம் என்று எண்ணி ஏதேதோ பேசிவிட்டேன் என்றார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.