“உன்னைக் கண்டுபிடித்த பிறகு குழந்தையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அவனுடைய பிறந்த தேதியைப் பார்த்த போதுதான் அன்று ஒருநாள் எனக்கு ஏற்பட்ட வேதனை நம் மகன் பிறந்த தினம் என்றும் அன்று உன்னுடைய வேதனையை என் உள்ளுணர்வு அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்.
எனக்கு ஜெர்மன் அலுவலகத்தைச் சீர்படுத்தி மீண்டும் அங்கே அதிக நாட்கள் தங்காதவாறு ஏற்பாடுகள் செய்யவும், ஸ்ருதியின் திருமணம் முடிவாகவும் இத்தனை நாட்கள் தேவைப்பட்டன.
நீ என்னுடைய வார்த்தைகளால் காயப்பட்டிருப்பதை உணர்ந்ததால் உன்னை மீண்டும் சந்திக்கும் போது எதனால் நமக்குள் சண்டை ஏற்பட்டதோ அதைச் சரி செய்திருக்க வேண்டும் என்று எண்ணினேன்.
முதலில் உன்னிடம் மன்னிப்பு கேட்டு உன்னை அழைத்து வரவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் உன்னை நேரில் சந்தித்த போது உன்னிடத்தில் ஒரு விலகலை உணர்ந்தேன். நீ சண்டை போடாவிட்டாலும் என்னை உன் மனதிலிருந்து விலக்கி விட்டாய் என்று தோன்றியது. அதனால்தான் உன்னை கிட்டத்தட்ட மிரட்டி என்னோடு அழைத்து வந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஏற்றுக் கொள்ள வைக்கலாம் என்று எண்ணினேன்.
ஆனால் உன் உறவினர்களை நீ தேடியிருக்கிறாய் என்ற போதுதான் நான் ஒரு பாதுகாப்பான வாழக்கையை உனக்குக் கொடுக்க வில்லையோ என்று எண்ணினேன். அதுவரை உனக்கு கோபமும், வெறுப்பும் என் மீது. அதனால் உன்னை சமாதானபடுத்தி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஷ்யாமின் பிறந்த நாள் ஏற்பாடு குறித்துப் பேசிய போது கதறினாயே அன்றுதான் நீ எவ்வளவு வேதனைகளை அடக்கி வைத்திருக்கிறாய் என்று புரிந்து கொண்டேன். மேலும் உனக்கு என் அன்பைக் குறித்து பயமும், நிச்சயமற்ற தன்மையும் இருப்பது புரிந்தது. அதற்குப் பிறகே நீயாக என்னைத் தேடி வராவிட்டாலும் நான் உன்னை நெருங்க ஆரம்பித்தேன்.
நீ நினைத்தது போல் என் மனதில் உன் மீது காதல் இல்லாமலில்லை. என் தாத்தாவின் சதாபிஷேகத்தன்று உன்னைப் புடவையில் பார்த்ததும் தோன்றிய உணர்வுகள் அதுவரை மட்டுமல்ல இன்றுவரை எனக்கு யாரிடமும் தோன்றியது கிடையாது. அதனால்தான் நான் உனக்கு யோசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் நம் திருமணத்தை நடத்தினேன்.
உன்னை விட ஜெர்மன் செல்வது அவ்வளவு முக்கியமா என்று நீ யோசிக்கலாம். இந்த ஜெர்மன் ஒப்பந்தம் நம் திருமணத்திற்கு பிறகு வந்த முதல் வெற்றி. மேலும் அது கையெழுத்தானது நம் மகன் உருவான தேதியன்று. அதனால்தான் அது தோற்கக் கூடாது என்று எண்ணிச் சென்றேன். என் தொழிலில் இது கிட்டத்தட்ட ஒரு மைல் கல் என்று சொல்லாம். இதை எல்லாம் நான் தனிமையில் இருந்தபோது யோசித்துத் தெளிந்தேன்.
ஸ்ருதியின் திருமணத்தின் போது நான் எல்லா விஷயங்களையும் உன்னிடம் சொல்கிறேன் என்று கூறியபடி இதை எல்லாம் உன்னிடம் இன்று சொல்லிவிட்டேன்.
மிது, இன்று வரை உன்னைத் தவிர வேறு யாரையும் மனைவியாக எண்ணிப்பார்த்தில்லை. மேலும் நம் திருமணத்திற்கு பின் உன்னிடம் என்னைப் பற்றி எதையும் புரியவைக்கவில்லை. உன்னையும் நான் புரிந்து கொள்ளவில்லை. அந்தப் புரிதல் இல்லாததால் தான் உன் மனதில் ஓடும் எண்ணங்களை எண்ணிப் பார்க்கவில்லை.
உறவுகளைப் பிரிக்கக் கூடாது என்று மட்டும் எண்ணிய நான், தாலி கட்டி மனைவி என்ற உறவை அளித்த உனக்கு உரிய அன்பை நான் குடுக்க வில்லை. என் அன்பை மட்டுமல்ல, என் மீதான நம்பிக்கையையும் உனக்கு காட்டவில்லை. உன் வாழ்க்கையில் உறவு, பாசம், அன்பு இவையெல்லாவற்றையும் காண்பித்து விட்டு மீண்டும் உன்னை தனிமையில் வாடவிட்டேன். ஆனால் உன்னைப் பிரிந்த பிறகுதான் உன்மீதான காதலை உணர்ந்தேன். இனி ஒருமுறை உன்னை எந்தவிதத்திலும் கஷ்டப்பட விடமாட்டேன் மிது. ஐ லவ் யூ மிது. ஐ லவ் யு சோ மச்;” என்று முடித்தான் ராம்.
தொடரும்
{kunena_discuss:887}