மூங்கில் குழலானதே – 07 - புவனேஸ்வரி
மனது எத்தனை விசித்திரமானது .மனதின் குரு யார் ? நாம் தானா ?
மனதிற்கு வெறுக்கவும் நேசிக்கவும் கற்று தந்த அதிமேதாவி யார் ? நாம் தானா ?
அது எப்படித்தான் நேசிப்பவரை ஒதுக்கிவிட்டு , ஒதுங்கி போகும் உறவை நேசிக்கிறது இந்த மனம் . மனதிற்கு , மனமே குரு ..!
அல்லும் பகலும் மனமானது யாரோ ஒருவரின் அன்புக்காக துடியாய் துடிக்கிறது ..!
பல நேரங்களில் கற்பனையிலேயே வாழவும் துணிந்து விடுகிறது ..! கற்பனை எனும் உலகில் மனம் வடிக்கும் கதையை இறைவனால் கூட அத்தனை அழகாய் வடிக்க முடியாது ..
அன்னையாக இருக்கட்டும் , மனைவியாக இருக்கட்டும் , நண்பனாக இருக்கட்டும் ,எந்த உறவாகினும் கற்பனையில் தத்தம் அன்பிற்கு இனியவர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்து தான் கற்பனை கொள்கின்றனர் .. எந்த ஒரு காதலியும் தனது காதலன் தன்னை பிரிவது போல கற்பனை செய்வதில்லை .. எந்த ஒரு அன்னையும் தனது மகனின் தோல்வியை கற்பனையாய் காண்பதில்லை ..
எந்த ஒரு நண்பனும் தனது நண்பன் வீழ்வதை நினைத்து பார்க்கவே விரும்புவதில்லை ..
வாழ்க்கை அத்தனை இலகுவானது என்று அனைவருக்குமே தெரியும் ! மேடு பள்ளம் வாழ்வில் சகஜம் என்று அனைவரும் உணர்ந்து அறிந்ததே ! எனினும் கற்பனை என்று வந்துவிட்டால் அதில் மகிழ்ச்சியை மட்டும்தான் நிரப்புகிறோம் .. நாம் மட்டும் கடவுளாய் இருந்திருந்தால் மனிதன் மகிழ்ச்சியின் விளிம்பில் நின்று பித்துப்பிடித்தவன் ஆகி இருப்பான் .. வாழ்வின் நெளிவு சுளிவுகள் தான் நம்மை இன்னும் உற்சாகமாய் வைத்து இருக்கிறது ..
இதையெல்லாம் சந்திக்கும் திறனாளி நமது மனம் .. மனமானது ,ஏமாற்றங்களை தாங்கி , அவமானங்களை பொறுத்து , கண்ணீரில் நனைந்து ஒவ்வொருநாளும் மூழி முத்தெடுக்கிறது ..
உண்மையான அன்பு நிராகரிக்க படும்போது , அதன் வலியை மனிதன் அனுபவத்தால் உணர்கிறான் .. கண்ணீர் வடிக்கிறான் .. துவண்டு போகிறான் .. ஆனால் , ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவருக்கு , அவனும் அதே வலிகளை தருகிறான் ..
" நான் நேசிப்பவன் என்னை நேசிக்கவில்லை .. அதனால் என்னை நேசிக்கும் உன்னை நான் நேசிக்க முயற்சிக்கிறேன் " என்ற முடிவை யாருமே விரும்பி எடுப்பது இல்லை .. ஒவ்வொரு இணைதலுக்கு பின்னாலும் ஒரு ஏக்க பெருமூச்சு இருக்கிறது , நிராசை இருக்கிறது , இடிந்து போன கனவு கோட்டைகள் இருக்கிறது ..ஏன் இப்படி ஒரு நிலை ? நாம் விரும்பும் இதயம் நம்மை விரும்புவது அத்தனை அசாத்தியமா ? விரும்பிய இதயத்துடன் இணைவது அத்தனை கடினமான செயலா ? சிந்திக்கிறேன் சகிதீபன் ..
அவனை அறைந்த வேகத்தில் கையை பின்னிழுத்து கொண்டாள் சதீரஞ்ஜினி .. அறைந்த அவளுக்கே உள்ளங்கை சுரீர் என்று எரிந்தது .. அப்படி என்றால் அவனுக்கு எவ்வளவு வலிக்கும் ? ஏற்கனவே அவள் இதயத்தில் அறைந்து விட்டாள் , நானும் கன்னத்தில் அறைந்துவிட்டேனே என்று மனதிற்குள் புலம்பியவள் அழத் தொடங்கினாள் .. தன்னை அறைந்து விட்டு அவள் அழவும் ஒரு பக்கம் கோபம் , ஒரு பக்கம் சிரிப்புமாய் அமர்ந்திருந்தான் கெளதம் ..
எல்லோரது பார்வையும் தங்கள் மீது படிவதை உணர்ந்து
" வா ஜீரோ போகலாம் " என்றான் .. வரமாட்டேன் என்பதுபோல மறுப்பாய் தலையசைத்தவள் , நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்து , அங்கு நின்று கொண்டிருந்த அந்த உணவு விடுதியின் பணியாளரை செய்கையால் அழைத்தாள் .. அவள் விட்ட அறையில் கொஞ்சம் அதிர்ந்து நின்றிருந்தவன் " நானா ?" என்று செய்கை காட்டவும்
" உங்களைத்தான் அண்ணா " என்றாள் ரஞ்ஜினி.. யாரை இவ்வளவு பாசமாய் கூப்பிடுறா என்று கௌதமும் திரும்பி பார்த்தான் . விஷ்வாநிகாவை பற்றி யோசிக்காமல் சதீயின் செயலை கவனிக்கும் அளவிற்கு அவள் விட்ட அறை வேலை செய்தது .. ( ஹீ ஹீ பாவம் கெளதம் நீ ) ..
" அண்ணா ரெண்டு காபி .. ஸ்ட்ரோங் ஆ " என்று ஆர்டர் கொடுக்க , நீ கொடுத்த அறையை விடவா ? என்று அந்த புதியவனும் கௌதமும் ஒன்று போல மனதில் நினைத்து கொண்டு அவளுக்கு தெரியவில்லை .. காபி வரும்வரை கொஞ்சம் அழுதாள் , கொஞ்சம் வேறு புறம் பார்த்தாள் , கொஞ்சம் கௌதமை முறைத்தாள் சதீரஞ்ஜினி .. கெளதமோ , அரை வாங்கியதையே மறந்தவன் போல கன்னத்தில் கை வைத்து கொண்டு அவளையே ரசித்து பார்த்தான் ..
மனதிற்குள் அவனை தாளித்தாள் ரஞ்ஜினி .. " என்னமோ பெரிய கோபக்காரன்ன்னு தான் பேரு ..ஆனா என்கிட்ட உனக்கு கோபப்பட முடியுதா டா ? இதோ அந்த பெண்ணை விரட்டி விரட்டி காதலிச்ச , ஆனா அவ வேற ஒருத்தரை நினைக்கிறேன்னு சொல்லி நிராகரிச்சதும் , அவளையே கெட் லாஸ்ட்ன்னு திட்டின .. இத்தனை பேரு முன்னாடி அறைஞ்சவளை மட்டும் கன்னத்தில் கை வெச்சு கிட்டு ரசிக்கிற ? உன்னை பாராட்டுறதா இல்லை திட்டுறதா ? உன் சோகத்துக்கு நான் வேணும் , சந்தோஷத்தை கேட்க நான் வேணும் , சில நேரம் மத்தவங்க மேல உள்ள கோபத்தை வார்த்தையால் கொட்டி தீர்க்க மட்டும் நான் வேணும் .. உன்னை விட்டா யாரு டீ என்னை புரிஞ்சுப்பான்னு டைலாக் விடு .. ஆனா காதல் மட்டும் ??" மனதிற்குள் எழுந்த ஆதங்கத்தை பாதியிலேயே நிறுத்தினாள் ..
" ச்ச , சரியான டியுப் லைட் இவன் .. இன்னும் எத்தனை நாள்தான் என் மனசை புரிஞ்சுக்காமல் என்னை நோகடிக்க போறனோ " என்று சலிப்பாய் இருந்தது அவளுக்கு .. இருவருக்கும் காபி தரப்படவும் , அதை பருகியபடி கொஞ்சம் நிதானம் அடைந்தாள் சதீரஞ்ஜினி.. அதை பார்வையாலே உணர்ந்து கொண்டவன்
" நீ எப்போ மச்சி இங்க வந்த ?" என்றான் இயல்பாய் ..
" இப்போ அதுதான் முக்கியம் .. விஷ்வாநிகா விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்து இருக்க ?" என்றாள் அவள் .
" ப்ச்ச்ச் .. எனக்கு தெரியல "
" இது எல்லாம் ஒரு பதிலா கெளதம் "
" கத்தாதே டீ .. ஆல்ரெடி என்னை அறைஞ்சிருக்க நீ .. அது ஏனோ உன் மேல கோபப்பட முடில .. பொழைச்சு போ .. "என்றான் அவன் ..
" நீ எப்பவுமே என்னை சீரியஸா பார்க்க மாட்டியா டா " என்றாள் அவள் மனத்தாங்கலுடன் .. அவனோ இயல்பாய்
" என்ன மச்சி உனக்கு பிரச்சனை ?" என்றான் ..
" நீதான் " என்று ஒரு வார்த்தையிலேயே முடித்து விட்டாள் அவள் பதிலை ..
சதீரஞ்ஜினி , அவள் காலேஜில் நுழைந்தவுடன் முதலில் பார்த்தது கௌதமை தான்.. அவன் அவளை விட இரண்டு வயது பெரியவன் .. காலேஜில் சீனியர் மாணவன் என்பதாலே , தனி கெத்துடன் வளம் வந்தான் .. ரஞ்ஜினி இயல்பிலேயே அமைதியானவள் என்றெல்லாம் இல்லை என்றாலும் கூட , பார்த்துவடனேயே பழகி விடும் அளவு கலகலப்பானவள் என்றும் கூறிட முடியாது .. அவளது நட்பு வட்டத்திற்குள் நுழையும்வரை அவளது வாலுத்தனம் யார் கண்களிலும் புலப்படாது .. ரேகிங் என்ற பெயரில் சில மாணவர்களிடம் மாட்டிகொண்டவளை , வலியவே வந்து காப்பாற்றினான் கெளதம் .. ஏனோ அவளை பார்த்ததும் அவனுக்கு பிடித்து போனது .. நண்பர்கள் , இதை சுட்டி காட்டி அவனை சீண்டியபோதும் , அதை பெரிதாய் எடுத்து கொள்ளாமல் அவளுடன் நண்பன் ஆனான் ..
ஆனால் , அத்தகைய பேச்சினை கடந்து வரும் அவளுக்கு , மனதில் ஏதோ உல்லாசமாகத்தான் இருந்தது .. ஏன் என்று தெரியாமலே அவன் மீது நேசம் கொண்டாள் சதீ .. கௌதமின் கண்ணியமான பேச்சும் , அவனுடன் இருக்கும்போதெல்லாம் அவளுக்குள் தோன்றும் பாதுகாப்பான உணர்வும் அவளை அவன்பால் சாய வைத்தது .. நாள் கிழமை திகதி பார்க்காது இதயத்திற்குள் குடிபுகும் காதல் அவள் மனதிலும் குடி புகுந்தது .. ஆனால் படிக்கின்ற வயதில் படிப்பு மட்டும்தான் முக்கியம் , என்று கருமமே கண்ணென இருந்தாள் அவளும் . அவளுக்குள் காதல் இருந்தாலும் கூட , கெளதம் தன் மீது காட்டும் நட்பிற்கு உண்மையாகவே இருந்தாள் அவள் .. அவனது ஒவ்வொரு முடிவிற்கு பின்னும் மதிமந்திரியாய் இருந்தாள் , அவன் துவண்டு விழும்போதெல்லாம் தாயாய் இருந்தாள் .. ஆம் , சிறுவயதிலேயே தனது தாயை பறிகொடுத்தவன் கெளதம் ..