(Reading time: 19 - 37 minutes)

" நீங்கதானே சொல்லுவிங்க ? வாழ்க்கையில் எதிர்பார்ப்பு இருக்கவே கூடாது .. அப்படி இருந்தால் அது அதிக வலி தரும்னு .. உலகத்துல எதிர்பார்ப்பு இல்லாத மனுஷனே கிடையாது .. இதோ இவ்வளவு அதிமேதாவித்தனம் பேசுற நீங்களே , நாளை என்ற ஒரு நாள் இருக்குனு எதிர்பார்த்து தானே தினமும் தூங்குரிங்க ?" என்றாள் 

இவள் நிஜமாய் நந்திதா தானா ? என்று முழித்தான் அபிநந்தன் ..

" அதுவும் இல்லாமல் உங்களுக்கு தான் என்னிடம் பேசவே நேரம் இருக்காதே ? ஆபிஸ் தானே முக்கியம் ? என்னை கல்யாணம் பண்ணின போதே அதைதானே சொன்னிங்க ? அப்போதிலிருந்து இப்போது வரை நான் என்ன சொன்னாலும் , ஓ  அப்படியா , பணம் ஏதும் தேவையா ? ன்னு இதை மட்டும்தானே நீங்க என்கிட்ட கேட்பிங்க ? எனக்கு பணம் எதுவும் தேவை படல .. என்னை பொருத்தவரை வாழ்வாதாரம் பணம் மட்டுமில்லை ..அதனால்தான் உங்க கிட்ட நான் எதுவும் சொல்லல " என்றாள்  கோபமாய் ..

" இப்போ என்ன தான் சொல்லுற நீ ?"

" எனக்கு ஒரு மூணு மாசம் டைம் வேணும் "

" எதற்கு ?"

" உங்களை விட்டு முழுதாய் விலகுவதற்கு "

" நந்திதா ???"

" ஷாக்கா  இருக்கா ? நிலையில்லாதது மனித மனம் ஆச்சே ! எப்பவுமே இறங்கி போறதால் நான் மனுஷி இல்லன்னு நினைச்சுட்டிங்களா ? எனக்கும் உணர்வுகள் இருக்கு .. நானும் மனுஷி தான் .. " என்றவள் கொஞ்சம் அமைதியானாள் ..

" போதும்ங்க .. நான் வற்புறுத்தி உங்க அன்பை பெறவே முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு .. இதற்கு மேலயும் நான் கெஞ்சினால் , எல்லாருக்கும் நீங்க வில்லன் ஆகிடுவிங்க .. என்ன பண்ணுறது , காதலிச்சு தொலைச்சுட்டேனே , யாரும் உங்களை தப்பா சொன்னா , என்னால பொறுத்துக்க  முடியாதே ? நீங்களே என்னை கை விட்டுட்டிங்கன்னு சொல்லிகிறத விட , நானாய் விலகிட்டேன்னு சொல்லிடுறேன் " என்றவள் , அந்த அறையை விட்டு சென்றே விட்டாள்  .. சில நிமிடங்களிலேயே

" என்னங்க சாப்பிடலாம் வாங்க " என்று அனைவரின் முன்னிலையிலும் அவனுக்கு உணவு பரிமாறினாள் .. ஆக  மற்றவர் பார்வைக்கு எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் அவனை விலக தொடங்கி விட்டாள்  .. நிறைய சொல்வதற்கு இருந்தது அவனுக்கு .. ஆனால் மனதிலேயே உணர்வுகளை பொத்தி வைக்கும் இயல்பான குணம் அவனை தடுத்து நிறுத்த

" கடைசியா நீயும் என்னை புரிஞ்சுக்கல " என்ற ஒற்றை வசனத்துடன் அடங்கிவிட்டான் அபிநந்தன்  ..

கௌதமிடம் பேசி முடித்துவிட்டு வந்த விஷ்வாநிகா இரண்டு நாளாய் அமைதியாகத்தான் இருந்தாள் .. ஆனால்  ஏதோ ஒன்று மனதை பிசைந்தது ..என்னவென்று சொல்லத்தான் அவளுக்கு தெரியவில்லை .. என்றோ சகிதீபன் அவனுக்கு நண்பனாய் அன்பான சகோதரனாய் இருந்தபோது அவளுக்கு சொன்ன அறிவுரையை நினைவு கூர்ந்தாள் ..

" தங்கச்சிமா ,  எப்போ மனசு முழுக்க பிரச்சனை  இருக்கோ , அப்போ எல்லாம் அதை வெளில கொட்டிடனும் .. ஒன்னு , நமக்கு நம்பிக்கையானவங்க கிட்ட சொல்லணும் ,இல்லன்னா புக் ல எழுதி வைக்கணும் "

" ஏன் அண்ணா ?" என்று அப்பாவியாய் கேட்டாள்  எட்டு வயது நிரம்பிய அவன் தங்கை .

" எப்பவுமே , நம்ம பிரச்சனைக்கு நமக்கு வழி தெரியாது .. ஆனா மூணாவது மனுஷங்களுக்கு மட்டும் அட்வைஸ் பண்ணுற அளவுக்கு மேதாவியா இருப்போம் .. ஏன் தெரியுமா ?" என்று அவன் தலையாட்டி கேட்கவும்

" ம்ம்ம்ஹ்ம்ம்ம் தெரியாதே " என்று கூறினாள்  அவள் .. அவள் தலையில் செல்லமாய் தட்டியவன்

" ஏன்னா  , அது நம்ம சொந்த பிரச்சனை இல்லை ..அது நம்ம சொந்த பிரச்சனை இல்லை என்பதால் நாம ரொம்ப ரிலாக்ஸ் ஆ யோசிப்போம் .. அப்படி யோசிக்கும்போது நிறைய வழிகள் கிடைக்கும் ... நீ உன் பிரச்சனையை பகிர்ந்து கொள்ளும்போது , உனக்கே ஒரு வழி கிடைக்கும் , அல்லது அதை கேட்குறவங்க  அதற்கொரு நல்ல முடிவு சொல்வாங்க " என்றான் ..

" ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா " என்றபடி அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள்  விஷ்வா .. இன்னமும் அந்த நாட்கள் அவள் மனதில் பசுமையாய் நிறைந்து இருந்தது .. எப்படி மறக்க முடியும் ? அவளும் சகிதீபனும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாய் இருந்தவர்கள் தானே ? அதன்பின் தான் ஏனோ , அவனுக்குள் அத்தனை வன்மம் ? அதன் காரணத்தை யூகித்ததும் அவள்  மனதில் பாரம் ஏறியது .. அவனை வெறுத்தாலும் அவன் வார்த்தைகளை வெறுக்க முடியவில்லை அவளால் .. ! அதன்படி , அவளது தாத்தாவை தேடி போனாள்  ..

கொக்கொரக்கோ கோழி கூவ

கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்

ரஜினி முருகன் கன் கன் கன் " ஹெட்போனில் பாட்டை கேட்டுகொண்டே அதனுடன் இணைந்து பாடிய தாத்தாவை பார்த்ததும் கவலை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள்  விஷ்வாநிகா .. அவள் தன்னை தேடி வந்ததே அதிசயம் , இதில் அவள் இயல்பாய் சிரிப்பதை உள்வாங்கியவர் இப்போது ஆடிக்கொண்டே பாட ஆரம்பித்து விட்டார் ..

" கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு

நான் தலையில் மகுடம் தரிசிடாத கிங்கு கிங்கு"

" ஹா ஹா .. போதும் தாத்தா " என்றாள்  விஷ்வாநிகா சிரித்து கொண்டே ..

" கால் மீஅருண் , விஷு "

" கால் மீ வினி , அருண் " என்றாள்  அவளும் சளைக்காமல் ..

" சரி சரி .. என்னம்மா கண்ணு , ரொம்ப போர் அடிக்குதா ? தாத்தாவை எல்லாம் தேடி வந்துருக்கியே " என்றபடி அவள் தோளில்  கைபோட்டு கொண்டார் தாத்தா .. அவளுக்கு சட்டென சகியின் நினைவு வந்தது....

" என்னதிது , இன்னைக்கு இந்த வில்லன் அடிக்கடி என் நினைவில் வரானே " என்றபடி அவள் முனுமுனுக்க , அதை கேட்டவர்

" எந்த வில்லன் , சித்தார்த் அபிமன்யு வா ?" என்றார்

" பச்ச்ச்.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் போல இருக்கு தாத்தா "

" சொல்லுமா " என்று அவளை ஊக்கினார் அவரும் .. கௌதமை பற்றியும் , நேற்று நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள்  விஷ்வா ..

" என்ன தாத்தா ?"

" இவ்வளவு நடந்துருக்கு , ஒரு வர்ஷமா , அந்த பையன் உன்னை தொடர்ந்த்டானு சொல்லுற, அப்பறம் ஏன் எங்ககிட்ட சொல்லல வினி ?" என்றார் தீவிரமாய் ..

" ப்ச்ச்ச்ச் , இந்த காலத்தில் யாரு தாத்தா உண்மையா காதலிக்கிறாங்க ? அவனும் எதோ இனகவர்ச்சியின் அப்படி பேசுறான்னு நினைச்சு அமைதியா இருந்தேன் "

" தப்பு வினி .. இப்போ எல்லாம் பெண்களுக்கு எதிரா எவ்வளவு பிரச்சனை  வருது ? அவன் நல்லவன் சோ பரவாயில்லை .. இதுவே ஒரு மோசமான பையனாய் இருந்திருந்தா ?"

".."

" எப்பவும் வெளில நமக்கு நடக்குறத , வீட்டில் ஒருத்தருக்காவது சொல்லணும் வினி "

" மன்னிச்சிருங்க தாத்தா " என்றாள்  அவள் உள்ளே போய்விட்ட குரலில் ..

" சரி விடு .. ஆனா நீ கெளதம் கிட்ட சொன்னது உண்மையா ?"

" என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா தாத்தா ?"

" தெரியும் ..அதனால் தான் கேட்குறேன் .. ஏன் இப்படி பொய் சொன்ன ? "

" கெளதம்க்கு அடிப்படையில் ஒரு பிடிவாத குணம் இருக்கு தாத்தா .. நீ காதலிக்கவில்லை என்றாலும் நான் காதலிப்பேன்னு நினைக்கிறான் .. அது அவனுடைய வாழ்க்கையை கெடுக்கும் .. எனக்கு இதில் இஸ்டம் இல்லை ..இதுவே என் மனசில் இன்னொருத்தர் இருக்கார்ன்னு தெரிஞ்சா , நிச்சயம் விலகிடுவான் "

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.