“ஹாய் தாத்தா… என்ன இன்னைக்கு மௌன விரதமா?...” என சதாசிவம் தாத்தாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் மகத்…
“…..”
“தாத்தா என்னாச்சு?... ஏன் எதுவும் பேசமாட்டிக்குறீங்க?...”
“…..”
அவர் எதுவும் பேசாமல் இருக்கவே அவரின் கைப்பிடித்தவன், “தாத்தா…” என அழைக்க
“நீ சாப்பிட்டியா?...” என்றார் அவர் பட்டென்று…
“யெஸ்… காலையிலேயே….” என்றான் அவனும்…
“இப்போ மணி என்ன?.... பத்து தாண்ட போகுது… ஒரு அவசர ஆப்பரேஷன்னு சொல்லிட்டு போனவன் இப்போ தான் வந்திருக்க…”
“ஆமா தாத்தா… அவசர கேஸ் வேற… அதான்… சாரி தாத்தா… உங்களுக்கு நேரமாச்சுல்ல… பாட்டி தேடுவாங்கல்ல?... வாங்க நான் உங்களை டிராப் பண்ணிட்டு போறேன்…”
“நீ இப்படித்தான் பேசுவன்னு எனக்கு தெரியும்… முதலில் வண்டியை எடு… வீட்டுக்கு போகணும்…”
“சரி தாத்தா…” என்றவன், சதாசிவம் தாத்தா வீட்டிற்கு சென்றான் அவரை அழைத்துக்கொண்டு…
“வா மகத்… வா வா…” என்றபடி அவனை வாசலுக்கே வந்து வரவேற்றார் சதாசிவத்தின் மனைவி பார்வதி…
“பாட்டி… எப்படி இருக்கீங்க…” என்றபடி காரின் மேல் சாய்ந்து கொண்டு கேட்டான் மகத்…
“நான் இருக்குறது இருக்கட்டும்… நீ ஏன் இப்படி மெலிஞ்சிட்டே போற நாளுக்கு நாள்…??...”
“ஹ்ம்ம்… அப்படி எதுவும் எனக்கு தெரியலையே… நான் எப்பவும் போலதான இருக்கேன்,….” என்றபடி தன்னைத்தானே பார்த்துக்கொண்டவனை முறைத்து பார்த்தார் சதாசிவம்…
“அது உனக்கு தெரியாது… பார்க்குற எங்களுக்குத்தான் தெரியும்…” என பார்வதி சொன்னதும், இப்போது சதாசிவத்திடம் முறைப்பை வாங்குவது பார்வதியின் முறையாயிற்று…
“இப்போ எதுக்கு என்னை முறைக்குறீங்க?...” என பார்வதி அவரிடம் கேட்க
“நான் உங்கிட்ட என்ன சொன்னேன் போனில்… இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்குற?...” என கோபமாக கேட்டதும் தான், கணவர் தன்னிடம் சொன்னதே நினைவு வர,
“ஆத்தி… நான் மறந்தே போயிட்டேனே டாக்டரைப் பார்த்ததும்…” என அவர் சொல்லிக்கொண்டே
“வா மகத் உள்ளே போகலாம்…” என அவனை அழைக்க…
“இருக்கட்டும் பாட்டி… இன்னொரு நாள் வரேன்… பாவம் தாத்தா தான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்னு சொன்னார்… செம பசி போல… சாப்பாடு குடுங்க… நான் கிளம்புறேன்…” என்றபடி நகரப்போனவனின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார் பார்வதி…
“பாட்டி… பாட்டி….” என்ற அவனின் குரல் காற்றில் கரைந்து தான் போனது…
அவனை அமர வைத்து, “முதலில் நீ சாப்பிடு… அப்புறம் அவர் சாப்பிடுவார்…” என்றபடி அவனின் முன் ஒரு தட்டு நிறைய சாப்பாடை வைத்தார் பார்வதி…
“இல்ல பாட்டி… நீங்க சாப்பிடுங்க… நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுப்பேன்…” என்று எழுந்து கொள்ள போனவனிடம்,
“எது?... நீ வீட்டுக்கு போய் சாப்பிடுற சாப்பாடுதான?... அது என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்… பேசாம சாப்பிடு….” என்று அதட்டினார் சதாசிவம்…
முதல் முறையாக அவரிடம் இருந்து கண்டிப்பு வர, ஆச்சரியத்தோடு புன்னகையும் கலந்தவனாய் அவரைப் பார்த்தான் மகத்…
“ஏங்க… அவன் சாப்பிடுவாங்க… நீங்க ஏன் இப்படி கோபப்படுறீங்க??....” என பார்வதி கேட்க
“நீ சும்மா இரு பார்வதி… உனக்கு ஒன்னும் தெரியாது… சாருக்கு ஊர் மேல, மத்தவங்க மேல தான் அக்கறைப்பட தெரியும்… தன்னைப் பத்தியோ, தன் உடம்பைப் பத்தியோ கவலை கொஞ்சம் என்ன துளி கூட கிடையாது…”
“என்னங்க… என்ன சொல்லுறீங்க… ஊருக்கே வைத்தியம் பார்க்குற டாக்டர் புள்ள… அவனுக்கு அவன் உடம்பைப் பார்த்துக்க தெரியாதா என்ன?....”
“தெரியலையே பார்வதி… அதானே பிரச்சினையே… இவன் வீட்டுக்கு போயி சாப்பிடுறேன்னு சொல்றானே அது என்ன சாப்பாடு தெரியுமா?... காஞ்சி போன ப்ரட்-ம் ஒரு டம்ளர் பாலும் தான்…”
“அடி ஆத்தி… என்ன மகத் இது?... தாத்தா சொல்லுறது உண்மையா?....” என பார்வதி கேட்க
அவன் எதுவும் பேசாமல் சிரித்தான் அழகாய்…
“என்னங்க இது கொடுமையா இருக்கு… ஒழுங்கா சாப்பிட வேண்டாமா இந்த வயசில…” என பார்வதி சொல்ல
“இதை விட ஒரு கொடுமையும் இன்னைக்கு நடந்துச்சு பார்வதி… இவன் இன்னைக்கு சாப்பிடவே இல்லை… சுத்தமா….” என சதாசிவம் சொல்ல
பார்வதிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…
“ஏன்ப்பா… இப்படி இருக்குற?... ஒரு டாக்டர் நீயே இப்படி பண்ணலாமா?....” என்று கேட்டவர், அவன் அமைதியாய் இருப்பதை பார்த்துவிட்டு, “சரி போகட்டும், சாப்பிடு முதலில்…” என சொல்ல
அவன் சாப்பிட்டான்… அவன் சாப்பிட ஆரம்பித்ததும் பார்வதி சதாசிவத்திற்கும் பரிமாற அவரும் சாப்பிட்டார்…
“சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு பாட்டி… சூப்பர்…” என அவன் கைவைத்து சொல்லி சிரிக்க,
அவனை தீர்க்கமாக பார்த்த பார்வதி,
“எனக்கு நீ ஒரு உதவி செய்வீயா மகத்???...” எனக் கேட்டார்…
“சொல்லுங்க பாட்டி…” என அவன் கேட்டதும்,
“இவரை தினமும் நீ ராத்திரி இங்க கொண்டு விடுற தான?... இனி மதியம் போல இங்க வந்து விடுறீயா மதியம் சாப்பிட?...” எனக் கேட்க
சதாசிவமோ மனைவி என்ன சொல்கிறாள் என புரியாமல் பார்க்க
“சரி பாட்டி… தாத்தா கேண்டீன் சாப்பாடு இனி உங்களுக்கு கட்… ஹாஹா…” என அவன் சிரிக்க,
“அவருக்கு மட்டும் கட் இல்ல… உனக்கும் தான்….” என பார்வதி சொல்ல, சதாசிவத்தின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது…
மகத், “பாட்டி நான் கிளம்புறேன்….” என்றபடி அவர் சொன்னது காதிலே விழாதது போல் நகரப்போக,
“நான் சொன்னதை நீ கேட்கலைன்னா, இனி அவரை நான் அங்க வேலைக்கு அனுப்ப மாட்டேன்… மகத்….” என அவர் தீர்மானமாக சொல்ல, அவன் அதிர்ந்தான்…
“பாட்டி… இதெல்லாம் வேண்டாம்…. எதுக்கு இதெல்லாம்?... இனி நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிட்டுடுவேன்…” என அவன் சமாளிக்க,
“எங்களுக்கு வேணும் மகத்… எங்களுக்குன்னு யார் இருக்கா?... புள்ளையா குட்டியா?... எங்க இரண்டு பேருக்கும் நீ செஞ்சிருக்குற உதவி கொஞ்சம் நஞ்சமில்லை… ஆனா, இத்தனை வருஷம் நீ நல்ல சாப்பாடு சாப்பிட்டிட்டு இருக்குறன்னு தான் நான் நினைச்சேன்… இன்னைக்கு அவர் சொன்னதுக்கு பின்னாடி தான் தெரிஞ்சது, நீ ஊருக்கு நல்லது செஞ்சிட்டு உன் வயித்தை காயப்போடுறேன்னு…” என அவர் சொல்லும்போது, அவன் எதுவோ சொல்ல முயல,
“நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு தெரியும் மகத்… இனி நானே நல்லபடியா சமைச்சு சாப்பிடுறேன்னு தான?... நீ வீட்டுக்குப் போற நேரத்துக்கு, நல்லா சமைச்சு சாப்பிட்ட மாதிரி தான்…” என்றவர், “இனி இங்க வந்து மதியம் சாப்பிடுறேன்னா சொல்லு… நான் இவரை வேலைக்கு அனுப்புறேன்… இல்லன்னா….” என அவர் சொல்லிமுடிக்கும் முன்,
“நான், நாளைக்கு மதியம் தாத்தாவோட சாப்பிட வரேன் பாட்டி… இப்போ கிளம்புறேன்… வரேன் தாத்தா… வரேன் பாட்டி…..” என்றவன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பியதும்,
“நல்ல காரியம் செஞ்ச பார்வதி… சந்தோஷம்… இனி மதியம் ஒரு நேரமாச்சும், அவன் நல்ல சாப்பாடு சாப்பிடுவான்…” என அவர் சொல்ல,
“மூணு வேளையும் இங்க தான்…” என்றார் பார்வதி…