(Reading time: 9 - 18 minutes)

08. கிருஷ்ண சகி - மீரா ராம்

மிகுந்த கோபத்துடன் கார் சாவியை தரையில் எறிந்துவிட்டு சோபாவில் அமர்ந்தான் ஜிதேந்தர்…

“என்ன ஜித்… என்னாச்சு?...” என்று அவனருகில் வந்து அமர்ந்தார் அவனது அன்னை வைஜெயந்தி…

அவர் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை…

krishna saki

“சொல்லுடா… என்னாச்சு?... எதுக்கு இந்த கோபம்?....”

“எதுமில்லம்மா… பேசாம போ….”

“டேய்… என்னன்னு சொன்னத்தான தெரியும்… நீ பாட்டுக்கு இப்படி கோபமாவே இருந்தா யாருக்கு தெரியும் என்ன நடந்துச்சுன்னு?...”

“யாருக்கு தெரிஞ்சுத்தான் என்ன ஆகப்போகுது… யாருக்குமே தான் என் மேல கவலை இல்லையே… அப்புறம் என்ன?..”

“ஏண்டா ஜித்… இப்படி பேசுற?... அம்மாகிட்ட சொல்லு… என்னாச்சுன்னு?...”

“சும்மா போம்மா… சொல்லிட்டா மட்டும் அப்படியே தீர்த்து வைச்சிடுற மாதிரிதான்…”

“எதுக்குடா இந்த சலிப்பு உனக்கு?...”

“பின்ன சலிச்சுக்காம என்ன செய்ய சொல்லுற நீ?...”

“என் மேல கோபப்பட்டு என்னடா ஆகப்போகுது இப்போ?...”

“யார்மேல கோபப்பட்டாலும் தான் எதுவும் ஆகப்போறது இல்லையே… அப்புறம் என்ன?...”

“இல்ல ஜித்… நான்…. என்னால முடிஞ்சா செய்யமாட்டேனா?...”

“பச்… விடும்மா… நான் உன்னை குறை சொல்லலை…”

“அப்போ என்னை குறை சொல்லுறீயாடா?...” என்றபடி வந்தார் அவனது அப்பா கேசவன்…

அவர் வந்ததும் அவன் முகத்தை திருப்பிக்கொள்ள, அவர் அவன் எதிரே இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்தார்….

“என்னடி… உன் பையனுக்கு என் முகத்தைப் பரர்க்க பிடிக்கலைப் போல?...”

“அவன் அப்படி உங்ககிட்ட சொன்னானா?... எதுக்கு இப்போ அவனை வம்பிழுக்குறீங்க?...” என்றார் வைஜெயந்தி…

You might also like - Kalyanam muthal kathal varai... A romantic comedy...

 

“அவன் சொன்னாத்தான் தெரியுமா எனக்கு?... இல்லாட்டா தெரியாதா?...”

“என்ன தெரியும் உங்களுக்கு?... சொல்லுங்க?...”

“உன் பையனுக்கு என் மேல கோபம்… அதான் என்னை பார்க்காம அவாய்ட் பண்ணுறான்…”

“அவன் எதுக்கு உங்களை அவாய்ட் பண்ணப்போறான்?... நீங்களா எதுவும் கற்பனை பண்ணிக்காதீங்க?...”

“ஆமாடி…. எனக்கு ஆசைப்பாரு… வீணா கற்பனை பண்ணிக்கிறதுக்கு?... அவன் தான் லூசுத்தனமா பண்ணிட்டிருக்கான்… நீயும் அதுக்கு துணைப்போறீயா?...”

“நான் எதுக்கு துணைப்போக போறேன்… எனக்கு நீங்க பேசுறதே புரியலை…”

“உனக்கு புரியலைல்ல?... சரி… உன் மகன் இப்போ எங்க போயிட்டுவரான்னு கேளு… உனக்கே புரியும்….”

“எங்கடா போயிட்டு வர?... சொல்லு….” – வைஜெயந்தி…

“……”

“அதான் உன் அம்மா கேட்குறால்ல பதில் சொல்லுடா…” என கேசவன் சொன்னதும், ஜிதேந்தர் வேகமாக எழுந்தான்…

“என்னாச்சு?...” என்ற வைஜெயந்தியிடம்,

“அவன் சொல்ல மாட்டான்…. நான் சொல்லுறேன்…” என்ற கேசவன்,

“அவன் உன் மருமகளைப் பார்த்துட்டு வந்திருக்கான்…. அவ எதாவது ஏத்தி விட்டிருப்பா… அதான் இங்க வந்து கோபத்தை காட்டுறான்…”

“நிஜமாவாடா… இப்போ அங்க தான் போனீயா?... எப்படி இருக்குறாடா?... நல்லா இருக்குறாளா?... துருவ் குட்டி எப்படி இருக்குறாண்டா?...” என பூரிப்புடன் கேட்டுக்கொண்டே போனவரை தடுத்தார் கேசவன்…

“வாயை மூடு… இந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லாதவங்களை பத்தி பேசக்கூடாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… நீ அதையும் மீறி விசாரிக்கவே செய்யுறீயா?...” என்று கத்தினார் கேசவன்…

“இல்லங்க… அவ நம்ம மருமகள்…”

“அப்படித்தான் நானும் நினைச்சிருந்தேன்… அத தான் அவ இல்லன்னு ஆக்கிட்டாளே…. இனி அவளுக்கும் நமக்கும் எதுவும் இல்லை…”

“அப்படி நாம விட்டுட முடியாதுங்க… நம்ம வீட்டு வாரிசு அங்க இருக்குறாங்க…”

“வாரிசா?... சீ… இன்னொரு தடவை அப்படி சொன்ன நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று கோபத்தில் உறுமினார் கேசவன்…

“நீங்க கோபப்பட்டாலும் உண்மை அதுதான்… துருவ் நம்ம வீட்டு வாரிசு தான்…” என்று சொன்னதும் அவரின் கன்னத்தில் அடி ஒன்று விழுந்தது…

கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த வைஜெயந்தியிடம், “நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டிருக்கேன்… நீ சொன்னதையே சொல்லிட்டிருக்குற… அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்கு இங்க?...”

“இல்லங்க… நான்…”

“பேசாத… இனி பேசின கொன்னுடுவேன்… எனக்கு அவ மருமகளா இருக்கணும்னா நான் சொன்னதை அவ செய்யணும்… அதை விட்டுட்டு வியாக்கியானம் அவ பேசினா பேசிட்டே இருக்கட்டும்… எனக்கு அதைப் பத்தி எந்த கவலையும் இல்லை… ஆனா அப்புறம் அவ இந்த வீட்டு வாசல் கூட மிதிக்க கூடாது… மிதிக்கவும் விட மாட்டேன் நான் இருக்குற வரை…”

அவர் அப்படி சொன்னதும், அதுவரை அமைதியாக இருந்த ஜிதேந்தர் வாய் திறந்தான்…

“ஏன் மிதிக்கக்கூடாது?...” என அவன் கேட்க

“எனக்கு அவளைப் பிடிக்கலை…” என்றார் அவர்….

“உங்களுக்கு பிடிக்கணும்னு ஒரு அவசியமும் இல்ல… வாழப்போறது நான் எனக்குப் பிடிச்சிருந்தா போதும்…”

“அப்படின்னா அவ இந்த வீட்டுக்கு வரணும்னும் அவசியமில்லை….”

“அப்பா…..” என கத்தினான் அவன்…

“என்னடா அப்பா?... நீ கத்தினா நான் பயந்துடுவேன்னு பார்க்குறீயா?...”

“என் ஆசை உங்களுக்கு புரியவே புரியாதா?... நான் சந்தோஷமா வாழுறதைப் பார்க்க உங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையா?...”

“ஏன் இல்ல… நிறைய இருக்கு… இதோ பாரு உனக்காக நான் எத்தனை பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு… இதுல யாரையாவது பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லு… நாளைக்கே உன் கல்யாணத்தை ஜாம் ஜாமுன்னு நடத்தி வைக்கிறேன்… அப்புறம் நீயும் சந்தோஷமா வாழுவ… நானும் அதைப் பார்த்து சந்தோஷப்படுவேன்…”

“இப்படி பேச உங்களுக்கே வெட்கமா இல்லை… ஒரு தகப்பனா இருக்குறான்… அவனுக்கு போய்  கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசுறீங்களே… இது உங்களுக்கே நியாயமா படுதா?...” என்று கோபத்துடன் கேள்வி கேட்டார் வைஜெயந்தி…

“உனக்கு குடுத்தது பத்தலையா?... நீ மேலும் மேலும் பேசி என் கோபத்தை கிளறாத… அவ்வளவுதான் சொல்லிட்டேன்…” என்று அதட்டினார் கேசவனும்…

“இப்போ முடிவா என்னதான் சொல்லுறீங்கப்பா?...” – ஜிதேந்தர்…

“நான் சொன்னதை அவ செஞ்சிட்டான்னா இப்பவே இந்த வீட்டுக்கு அவளை கூட்டிட்டு வா… நானும் சந்தோஷமா ஏத்துக்குறேன் அவளை மருமகளா… இல்ல இந்த ஜென்மத்துல அவ இந்த வீட்டுக்குள்ள நுழைய முடியாது…”

“உங்க முடிவு இதுதான்னா, அப்ப என் முடிவையும் கேட்டுக்கோங்க… எனக்கு அவ வேணும்… வேணும்… வேணும்… என் பொண்டாட்டி அவ தான்…” என்றபடி வேகமாக சென்றுவிட்டான் ஜிதேந்தர்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.