(Reading time: 17 - 33 minutes)

09. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ழகிய முன் மாலை பொழுது. ஏர்போர்ட்டுக்கு அருகே இருந்த ஹோட்டலில் தங்கியிருந்த தனது அமெரிக்க தோழி பைரவியை சந்திக்க கலா ரிசெப்ஷனில் காத்திருந்தாள்.

அழுத்தமான பச்சையில், மெஜந்தா கலரில் சின்ன சின்ன பூக்களிட்ட பிரிண்டட் சில்க் சேலையில், தன் சின்ன சுருட்டை கூந்தலை ரப்பர் பேண்டில் அடக்கி, அழகோவியமாக வந்த பைரவி, நீண்ட நாள் கழித்து சந்தித்த தன் தோழி கலாவை சேர்த்தணைத்து கொண்டு,

"ஹாய் கலா.. எப்படிப்பா இருக்கே.. பார்த்து ரொம்ப நாளாச்சு இல்லையா?.. போன சங்கீத சீசனில் பார்த்தது?" என தொடங்க,

vasantha bairavi

"ஹாய் பைரவி அக்கா, நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?.. எனக்கு நம்பவே முடியலைக்கா.. நீங்க நேற்றைக்கு எனக்கு போன் செஞ்சவுடனே ரொம்ப ஆச்சர்யமா போச்சு.. எனக்கு ரொம்ப சந்தோஷம்க்கா.. வாங்க அங்கே உட்கார்ந்து பேசலாமா?"

"ம்.. யா.. யா.. எனக்கும் ஹாப்பி தான்.. நானே எதிர்பார்க்காத இந்த டிரிப் அமைஞ்சுடுத்து.. இந்தியாவுக்கு வரனும்ற என் கனவும் பலிச்சிடுத்து.. சரி.. ஹோட்டலில் கால் டாக்சிக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன்.. போகலாமா?, எனக்கு நீ சொன்ன அந்த சாரதா டீச்சரை பார்க்கனும்" என்று பரபரக்க,

"ஓ.. எஸ்.. போகலாமே" என ,

இருவரும் தயாராக இருந்த கால் டாக்சியில் ஏறி அமர்ந்தனர்.

"கலா, இந்தா இதெல்லாம் நான் உனக்காக வாங்கிண்டு வந்தேன்" என சில அழகு சாதனங்களையும், சாக்லேட் பார்களையும் கலாவிற்கு கொடுத்தாள் பைரவி.

"எதுக்குக்கா?.. ரொம்ப தாங்க்ஸ்" என்று அவற்றை வாங்கிக் கொண்ட கலா,

"பைரவி அக்கா, நீங்க ரொம்ப அழகாய் இருக்கீங்க.. நாம இரண்டும் பேரும் ஹோட்டல் ரிசெப்ஷனில் நின்று கொண்டிருந்த பொழுது, அங்கே இருந்தவங்க கண்ணெல்லாம் உங்க மேலே தான்.. நீங்க எங்க ஊரு நடிகை திரிஷா மாதிரி அழகாய் இருக்கீங்க" என்று பாராட்டியவள்,

"உங்க அம்மா, அப்பா எல்லோரும் நல்லா இருக்காங்களா?.. வேதா ஆண்ட்டி எப்படி இருக்காங்க?.."

"எல்லோரும் பைன் தான்.. இங்கே உன்னோட பாட்டு, படிப்பு எல்லாம் எப்படி போறது?.. எம்.ஏ. மியூசிக் படிச்சுட்டு உன்னோட ஃபியூச்சர் ப்ளான் என்ன?.. பேசாமல் அமெரிக்கா வந்துடு.. அங்கே இப்ப கர்னாடிக் சொல்லி தரவாளுக்கு ஏகப்பட்ட டிமான்ட்"

You might also like - Unnal magudam soodinen... A romantic story... 

"பார்க்கலாம் கா.. எனக்கு என்னவோ இந்தியாவை விட்டு எங்கே போகவும் பிடிக்கறதில்லை.. எவ்வளவு தான் பெரிய பெரிய ஹோட்டலில் சாப்பிட்டாலும், அம்மா கையால மோர் சாதம் சாப்பிடரது போல ஆகுமா?..அது போல தான், நான் எந்த ஊருக்கு போனாலும், கடைசியா இங்க வரனும்.. அதுவும், மார்கழி மாசம் எனக்கு எல்லா பெரிய பாடகர்கள் கச்சேரியை கேட்கலைன்னா, என்னவோ போல இருக்கும்.. அதுக்காகவே நான் இந்த நாடு, எஸ்பெஷலி சென்னையை விட்டு போக மாட்டேன்கா"

"குட்.. நீ சொல்லறது சரிதான்.. ஆனா, இந்த வெய்யில் தான் தாங்க முடியலைப்பா?" என்ற பைரவிக்கு,

"அக்கா, இப்ப ஜனவரி மாதம் தான் பொறந்திருக்கு.. இங்கே இன்னும் ஒரு மாசம் கொஞ்சம் கூலா இருக்கும்.. இதையே நீங்க வெய்யில்னு சொன்னா அப்புறம் மார்ச்க்கு அப்புறம் இங்க கொளுத்த போற வெய்யிலை எப்படி சமாளிக்கப் போறீங்க"

"அத்தனை நாள் நான் இங்கே இருப்பேனா தெரியாது கலா.. இன்னும் ஒரு மாசமோ, இல்லை மேக்சிமம் இரண்டு மாசம் இருக்கலாம்.. அதுக்குள்ளேயே நான் வந்த வேலை முடிஞ்சா நல்லது .. பார்க்கலாம்..அதைவிடு.. நீ சாரதா டீச்சரை பற்றி சொல்லு.. எனக்கு ரொம்ப எக்சைட்டடா இருக்கு..என்னை அவங்க சிஷ்யயாய் ஏற்று கொள்வாங்களா.. எனக்கு பயமாக இருக்கு"

"என்னக்கா.. நீங்க முதல் தரம் ஸ்கூலுக்கு போற சின்ன குழந்தையாட்டாம் இப்படி பயப்படிறீங்க.. சாரதா மாமி ரொம்ப நல்லவா.. எனக்கே அவாளோட கொஞ்சம் நாளாக தான் பழக்கம்.. ஆனா, பழகின கொஞ்ச காலத்திலேயே எங்களை அவாளோட சொந்த பொண்ணுங்க மாதிரி தான் பார்த்துக்கறா.. நீங்க தைரியமா வாங்கோ.. உங்களுக்கு அவாளை பார்த்தாலே புரியும்".

"ம் .. " என்றவள் அடுத்த அரை மணி நேரம் அமைதியாக கழிந்தது.

கலாவுமே, தன் தோழியின் மனனிலை அறிந்து எதுவும் மேற் கொண்டு பேசவில்லை.

"பைரவி அக்கா, சாரதா மாமி வீடு வந்துவிட்டது"

எதோ சிந்தனையில் இருந்த பைரவியை, கலாவின் குரல் நினைவுலகத்துக்கு கொண்டு வந்தது.

"ஓ.. சரி .. டரைவர் அங்கிள் நீங்கள் ஒரு இரண்டு மணி நேரம் கழித்து வந்தால் போதும்" என்றவள், கலாவின் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.

'ஏன் அக்கா இப்படி டென்ஷனா இருக்காங்க?' .. "வாங்கக்கா" என்றபடி தன் கையை பற்றிருந்த பைரவியுடன், கேட்டை திறந்தபடி உள்ளே நுழைந்தவள் காலிங் பெல்லை அடிக்க,

பைரவி கலாவின் கையை விடுத்து சற்று தள்ளி நின்று அந்த வீட்டையும், அதை சுற்றியிருந்த தோட்டத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, மூடி இருந்த வாசற்கதவை பார்த்தபடி இதயம் படபடக்க நின்றிருந்தாள்.

'என்னவோ தெரியவில்லை, அவளுக்கே புரியவில்லை..தனக்கு எதற்கு இத்தனை பரபரப்பு.. நான் சின்ன குழந்தையா? கலா சொன்னபடி, நாம என்ன முதல் நாள் ஸ்கூல் போற குழந்தை போல இப்படி பீல் பண்ணறோம்'..

என்னவோ சொர்க்க வாசல் கதவு திறக்க பக்தன் காத்திருந்தது போல இருந்தது பைரவிக்கு.

"இதோ வந்துட்டேன்" என்றபடி சாரதா கதவை திறக்க, ஒரு கணம் மூச்சடைத்தது பைரவிக்கு..

ழகிய மஞ்சள் காட்டன் புடவையில் நெற்றில் பெரிய குங்குமத்துடன், காதுகளில் வைர தோடு ஓளி வீச, மூக்கில் வைர பேசரி மினுமினுக்க, எலிமிச்சை நிறத்தில், சற்று பூசினாற் போல, உயரமாக, சாட்சாத் மஹா லக்ஷ்மியே நின்றிருப்பது போல தோன்றியது பைரவிக்கு. கிச்சனில் ஏதோ வேலையாய் இருந்திருப்பார் போலும்.. உதட்டுக்கு மேல் அரும்பியிருந்த வியர்வை துளிகள் கூட அவருக்கு அழகாய் இருந்தது.

வைத்த கண் எடுக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த பைரவி, சொல்ல முடியாத உணர்ச்சிகளின் பிடியில் இருந்தாள்.. இவர்கள் என்ன அழகு.. கலைந்தார் மாதிரி தோற்றத்தில் இருந்தாலும், குடும்ப பாங்காக , சாந்தமாக, புன்னகை ததும்பும் முகத்துடன் இருந்தவரை பார்க்க பார்க்க பைரவிக்கு என்னவோ செய்தது'..

சாரதா வெளியே நின்றிருந்தவர்களை பார்த்து விட்டு, 'கலாவை தெரியும்.. யார் இந்த பெண்.. எவ்வளவு அழகு.. ரோஜாப்பூ கலரில் பார்க்க ரவி வர்மாவின் ஓவியம் போல இருக்கா.. இவள் யாரை ஞாபக படுத்தறா'.. ஆச்சர்யமாக பார்த்தவர்,

ஒரே நிமிடத்தில் தன்னை சரி படுத்திக் கொண்டு, சின்ன புன்னகையுடன், "வாம்மா கலா.. இவர்கள் .. என்று பைரவியை பார்த்தபடி இழுக்க,

பைரவி சாரதாவை தான் பார்த்து கொண்டிருந்தாள்.. அவர் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை படித்து கொண்டிருந்தவளை, கலா..

"சாரதா மாமி, இவங்க தான் நான் சொன்ன பைரவி அக்கா.. அமெரிக்காவில் இருந்து உங்க கிட்ட ஸ்கைப் கிளாஸில் பாட்டு கற்று கொள்ளுவதாக சொன்னவங்க.. சடெனாக நேற்று இந்தியா வந்திருக்காங்க.. உங்களை பார்க்கனும்னு எனக்கு ராத்திரி போன் செய்ஞ்சாங்க.. அதான் இன்னிக்கு உங்ககிட்ட நேராகவே கூட்டிண்டு வந்தேன்".

"வாம்மா ....பைரவி.. உள்ளே வாம்மா.. " என்றபடி அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு, உள்ளே சென்றார் சாரதா.

'பைரவி என்று சொல்லும்போது சிறு நடுக்கம் இருந்ததோ குரலில்', என்று யோசித்தவள், அந்த கண்களின் அழகில் மூழ்கியவள், தலையாட்டியபடியே அவரை பின் தொடர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.