"சரி மாமி.. நான் அமெரிக்காவில, இந்திய ரூபாயில் பார்த்தால், ஒரு கிளாசுக்கு, இரண்டாயிரம் குடுப்பேன்.. எனக்கு நீங்க தினமும் கற்று தரப் போறேள்.. அதே அளவுக்கு தரேன்" என்ற பைரவிக்கு,
"என்னம்மா.. அவ்வளவு பணமா?.. எனக்கு மனசுக்கு ஒப்பு கொள்ளவில்லை.. அப்படியெல்லாம் நான் இது நாள் வரை வாங்கினது இல்லைம்மா"
"மாமி உங்க வேல்யூ உங்களுக்கே புரியலை.. உங்கள மாதிரி இருக்கறவா இத்தனை நாள்ல எங்கேயோ இருந்திருக்க வேண்டும்.. பாருங்கோ, நான் ஊருக்கு போறதுகுள்ள உங்களை எப்படி மாற்ற போறேன்னு.. முடிஞ்சா நீங்க சம்மதித்தா, நான் ஊர் திரும்பும் போது, கையோடு உங்களையும் அமெரிக்கவுக்கு அழைச்சுண்டு போயிடுவேன்" என்று சிரித்தாள் பைரவி.
"அவ்வளவு ஆசையெல்லாம் இல்ல எனக்கு.. எதோ என்னால முடிஞ்சதை நாலு பேருக்கு சொல்லி தரனும்.. எங்க குடும்ப நிலை அவ்வளவு சரியில்லை.. அதுக்காக தான் நான் கொஞ்சமா பணம் வாங்க வேண்டியிருக்கு.. இல்லைன்னா, இந்த மாதிரி சங்கீதத்தை பணத்துக்கோசரம் சொல்லி தர எனக்கு மனசுக்கு ஒப்பறதே இல்லை.. மஹிக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சு, என் பையன் வசந்த் ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்துட்டா, அப்பறம் எனக்கு இந்த பணமே வேண்டாம்.. முடிஞ்சவரை இலவசமா சொல்லி தரணும்ன்னு நினைச்சிண்டு இருக்கேன்.. பார்ப்போம், ஆண்டவன் என்ன வழி வைச்சிருக்கான்னு" என்றபடி எழுந்தார் சாரதா.
"கிரேட் மாமி" என்றபடி பைரவியுமே எழுந்து கொண்டாள்.
You might also like - Kanaamoochi re re... A romantic comedy...
ஹால் சோபாவில் வந்து அமர்ந்தவர்கள், மஹதி காப்பி கலந்து எடுத்து வர, தாங்க்ஸ் சொல்லி எடுத்து கொண்டாள் பைரவி.
"பைரவி , நீ எங்கேம்மா தங்கியிருக்கே" என்று கேட்ட சாரதாவை,
"மாமி, இப்பொழுதுக்கு, ஏர்போர்ட் அருகே இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கேன்.. வீடு ஏதாவது பார்க்கணும்.. ஏதாவது பேயிங் கெஸ்ட் மாதிரி இடம் இருந்தால், சொல்லுங்கோ.. கலா புண்ணியத்திலே உங்களை தெரிஞ்சது.. அது மாதிரி யாராவது சொல்ல மாட்டாளா என்ன?"
"யார் சாரதா இந்த பொண்ணு.. பார்த்தால் ரொம்ப தெரிஞ்ச முகமா இருக்கு.. ஆனா அயல் நாட்டு பொண்ணு மாதிரி இருக்கே" என்றபடி தனது மகன் வசந்துடன் உள்ளே நுழைந்தார் ராமமூர்த்தி.
"வாங்கோன்னா.. இவா பைரவி.. அமெரிக்காவிலிருந்து வந்திருக்கா.. என் கிட்ட பாட்டு கற்று கொள்ளனுமாம்.. கலாவோட பிரண்ட்.. " என்றபடி அவளை பற்றி முழு விவரமும் சொன்னவர், பைரவிக்கும் ராமமூர்த்தியும், வசந்தும் யார் என்று சொன்னார்.
சாரதா அவளை பற்றி சொல்லி கொண்டிருக்க, பைரவி ராமமூர்த்தியையும் , வசந்தையும் தான் பார்த்து கொண்டிருந்தாள்..
"ஆமாம், நான் வரும் பொழுது என்னவோ பேச்சு அடிபட்டதே.. வீடு அது இதுன்னு"..
"அது வேறொன்னுமில்லைப்பா.. இவங்களுக்கு தங்குவதற்கு ஏதாவது இடம் வேண்டுமாம்.. இரண்டு மாதம் தான் தங்க போறாங்களாம்.. அதான் பேயிங்க் கெஸ்ட் மாதிரி ஏதாவது தெரிஞ்ச இடமா கிடைக்குமான்னு கேட்டு கொண்டிருந்தாங்க" என்றாள் மஹதி.
ம்... சற்று யோசித்த ராமமூர்த்தி, "ஏம்மா பைரவி.. நீ தப்பா நினைக்கலேன்னா ஒன்னு சொல்லட்டா.. ஹோட்டல்ல பொம்மனாட்டிகள் தனியா தங்கறது இந்த ஊரிலே கொஞ்சம் கஷ்டம் தான்.. எங்காத்து மாடியிலே ஒரு போர்ஷன் இரண்டு ரூமோட இருக்கு.. போன வாரம் தான் அதுல குடியிருந்தவர், சொந்தமா வீடு கட்டிண்டு காலி பண்ணிண்டு போனார்.. ஏதோ கொஞ்சம் கீளின் பண்ணி, ஒயிட் வாஷ் பண்ணி வைச்சிருக்கேன்.. ஒனக்கு வீடு பிடிச்சா பாரும்மா.. நீ இங்கேயே தங்கிக்கோ.. நீ ஹோட்டலுக்கு கொடுக்கறதுல ஒரு பங்கு வாடகையா கொடுத்தா கூட போதும்..உனக்கும் பாட்டு கிளாசுக்கு சௌகரியமா இருக்கும்.. டிராவலிங் சார்ஜ் எல்லாம் குறையும்.. அத்தோட உனக்கு சாப்பாட்டுக்கு, நீ சமைச்சி சாப்பிடல்லாம் சரி, இல்லை, இங்கேயே பக்கத்துல நிறைய மாமிகள் சாப்பாடு நாம சொல்லிட்டா, மாசம் முழுசுமே மூணு வேலையும் உனக்கு ஆத்திலேயே கொடுத்து விடுவா.. வேணா மாடி போர்ஷனை பார்க்கிறீயா?"
"வெரி கைன்ட் ஆப் யூ அங்கிள்.. இந்த ஐடியா நல்லா இருக்கு.. நீங்க இப்படி சொல்லறதே எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு.. வீடு எப்படியிருந்தாலும் பரவாயில்லை அங்கிள்.. அதெல்லாம் நான் அட்ஜட் பண்ணிப்பேன். ஆனா.." என்று யோசித்து இழுத்தவளை,
"என்னம்மா.. ஓரளவுக்கு வசதியாதான் அட்டாச் பாத்துடன் இருக்கு.. உன்னை பார்த்தா நீ வாடகைக்கு யோசிக்கிற மாதிரி தெரியலை.. என்னவானாலும் சொல்லும்மா"
"ஆமாம் பைரவி.. தயங்காத சொல்லு.. நீ இங்கேயே இருந்தால் உனக்கு ப்ரீ டயத்துல பாட்டு கற்று கொள்ள வசதியாவும் இருக்கும்" என்றார் சாரதா.
"அதெல்லை மாமி.. என்னோட கூட ரிசர்ச் பண்ணற அஜய்ன்னு ஒருத்தர் ஹோட்டலில் தங்கியிருக்கார்.. அவரும் என்னோட தான் சேர்ந்து வந்தார்.. இப்ப நான் மட்டும் தனியா இங்க வந்து தங்கின்டா எப்படி.. அதான் யோசிக்கிறேன்"
"ஓ.. கூட வந்தவர் என்றால், ஆபிஸ் காராரா.. இல்லை.. " எப்படி கேட்பது என்று தயங்கினார் ராமமூர்த்தி.
சாரதாவுக்கும் தயக்கமே.. திருமணமாகாத பெண்ணை தப்பாக பேச பிடிக்கவில்லை.."
"அவரும் ஒரு டாக்டர் தான் அங்கிள்.. கான்சர் வியாதியை குணப்படுத்த ஆராய்ச்சி செய்யரார்.. இங்கே அடையார்ல இருக்கற கான்சர் இன்ஸ்ட்டியூட்ல ஒரு டை அப்பில் ஆறு மாதம் வந்திருக்கிறார்.. அதோட கொஞ்சம் பெர்சனல் வேலையும் இருக்கு.. அவரும் தமிழர் தான்..நம்மளவாதான்."
"ஓ.. சரிம்மா.. நீ சொல்லறது சரி தான்.. அங்க அமெரிக்காவிலே ஒரே வீட்டில இரண்டு ரூம் இருந்தா ஒவ்வொரு ரூம்ல ஒவ்வொருத்தர் தங்கறது இதெல்லாம் சரி பட்டு வரும்.. இந்த ஊருக்கு கல்யாணமாகத பொண்ணும், ஆணும் ஒரே வீட்டில தங்கறது இதெல்லாம் இன்னும் அவ்வளவு தூரம் வரலை.. ஆங்காங்கே நடந்துண்டு இருந்தாலும், எங்காத்துல அது கஷ்டம்...
சற்று யோசித்தவர், "வேணா ஒன்னு பண்ணலாம்..மாடியில என் பையன் வசந்த் ஒரு ரூம்ல இருக்கான்.. கொஞ்சம் நாள் அவனை வேணா கீழே இருக்க சொல்லறேன்.. அவனை முதல்ல கேட்கனும்.. நானும் அந்த புள்ளையாண்டானை பார்க்கனும்.. நீ அவனை இப்ப முடிஞ்சா வரச் சொல்லு" என்றவர்,
"ஏம்ப்பா வசந்த் நீ என்ன சொல்லறே? .. நீ கொஞ்சம் நாள் கீழே இருந்துக்கோ.. ஒரு வேளை அந்த பையனுக்கு இங்கே சரி படலைன்னா வேறே இடம் பார்க்கலாம்".
எதுவும் பேசாமல் பைரவியே பார்த்து கொண்டிருந்த வசந்த், தன் தந்தைக்கு வெறுமே தலையை மட்டும் ஆட்டினான்.
சாரதா, அன்று தை வெள்ளி கிழமை ஆனதால், சர்க்கரை பொங்கல் செய்திருக்க அனைவருக்கும் எடுத்து வந்து கொடுத்தார்.
மஹதி தனது இரவு ஷிப்ட்டுக்கு வேலைக்கு சென்று விட, கலாவும் மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று பைரவியிடமும், சாரதா மாமியிடம் விடை பெற்று சென்றாள். போகும் முன் முடிந்தால் சாயங்காலமே அஜய்யுடன் வருவதாக சொல்லி விட்டுச் சென்றாள்.
மாலை நேரத்தில், அஜய் பைரவியுடன் வந்து சேர, பெரியவர்களிடம் மரியாதையாக பேசிய அவனை அவர்களுக்கும் பிடித்து விட, அன்றே அவர்கள் நல்ல நாளாய் இருக்க, ஹோட்டல் அறையை காலி செய்து, வீட்டுக்கு குடி வந்து விடுவதாக சொல்லி சென்றனர்.
வசந்த், இவர்கள் வருகையால் கொஞ்சம் பணம் அதிகம் கிடைத்தால் தன் தந்தைக்கு சௌகரியமாக இருக்கும் என்றே நினைத்தான்.
சாரதா, ‘அந்த பையன் அஜய் பைரவிக்கு என்ன உறவாயிருக்கும்.. அவர்கள் பழகும் விதத்தில் நட்பை மீறி வேறு எதாவது இருக்குமோ.. அப்படியே இருந்தாலும், நல்ல பொருத்தமான ஜோடி தான்’, நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
ராமமூர்த்தியோ, 'எப்படியோ ஒரு இரண்டு லட்சம் வரை கிடைத்தால், மஹிக்கு கொஞ்சம் நகை வாங்க வேண்டும், அடுத்த வாரம் பெண் பார்க்க வருவதாக, அவருக்கு போன் செய்து சொல்லியிருந்த டாக்டர் வரன் தகைய வேண்டும் ' என்று நினைத்தவர், அதை பற்றி பேசுவதற்கு சமையலறையில் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த சாரதாவிடம் அது பற்றி பேச விரைந்தார்.
பார்ப்போம், இனி என்ன நடக்கப் போகிறது என்று.. பைரவியின் வரவு அந்த வீட்டை எந்த விதத்தில் மாற்ற போகிறது என்று.
தொடரும்
{kunena_discuss:909}