அதே நேரம் ருணதியின் வீட்டில்,
“காலையிலேயே கிளம்பி போனாளே, மதியம் ஆச்சே… ஒரு போன் பண்ணுறாளா?... குட்டி துருவ் என்ன செய்யுறானோ தெரியலையே… அறிவு கெட்டவ… வீட்டுல ஒருத்தி இருக்குறாளே அவளுக்கு போன் பண்ணுவோம்.. பேசுவோம்… எதாவது தோணுதா பாரு… வரட்டும் அவ… இன்னைக்கு அர்ச்சனை பண்ணிடுறேன் வழக்கமா பண்ணுறதை விட அதிகமா…” என கோகிலவாணி முணுமுணுத்துக்கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார்…
அப்போது கோகிலவாணியின் செல்போன் சிணுங்க,
அவர் அதை எடுத்து பார்த்த போது திரையில் வைஜெயந்தி என்று மின்னியது…
“சொல்லு ஜெயந்தி… வீட்டுக்குப் போயிட்டியா?.. மாப்பிள்ளை வெளியே போயிட்டாரா?...”
“நான் அப்பவே வந்து சேர்ந்துட்டேன்ம்மா… அவர் போனதுக்கு அப்புறம் தான் நான் போன் பண்ணுறேன்…”
“அப்பாடி… நல்லதுடி… ஹ்ம்ம்… என்ன நேரமோ பெத்த தாய்கிட்ட பேசுறதுக்கு நேரம் காலம் எல்லாம் பார்க்குற நிலை நோக்கு வந்துட்டேடிம்மா… “
“அத விடும்மா… நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணினேன்…”
You might also like - Oru kootu kiligal... A family drama...
“என்னடி சொல்லு….”
“இன்னும் ஒருவாரத்துல….” என வைஜெயந்தி சொல்வதற்குள்,
“தெரியும்டி… மறக்கலை…”
“நியாபகம் வச்சிண்டிருக்கியாம்மா?...”
“மறக்க கூடிய நாளாடீ அது… என் பிராணனே போனாலும் அதை மறப்பேனாடீ?...”
“ஹ்ம்ம்… விடும்மா… அன்னைக்கு துருவனை எப்படியாச்சும் கோவிலுக்கு அழைச்சிண்டு வந்துடும்மா…”
“கண்டிப்பா… அவன் இல்லாம எப்படிடீ…”
“சரிம்மா… அப்புறம்…” என வைஜெயந்தி சொல்லும்போது,…
“யார் கூடம்மா போனில் பேசிட்டிருக்க?.. நான் வந்தது கூட தெரியாம…”
குரல் கேட்டு சட்டென்று திரும்பி பார்த்தவருக்கு, கண்கள் ததும்ப நீர் நிற்க,
“விஜய்…” என்றபடி உச்சிமுகர்ந்து முத்தமிட்டார்….
“ஜெயந்தி… ஹலோ…” என கோகிலவாணி மறுமுனையில் கத்த,
“வர்றேன்னு கூட சொல்லலையேடா… அவர்கிட்ட சொன்னீயா… அவர் வந்தாரா உன்னை கூட்டிட்டு வர…”
“நீ வேற ஏன்ம்மா… நான் உங்கிட்டயே சொல்லலை… அப்பா கிட்டயா சொல்லப்போறேன்… உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு தான் இப்படி திடீர்னு கிளம்பி வந்தேன்… அது மட்டும் இல்ல… இனி எனக்கு வேலை இங்க தான்… டிரான்ஸ்பர் கிடைச்சிட்டும்மா… இதோ பாரு ஆர்டர்…”
“ரொம்ப சந்தோஷம் விஜய்… அவர் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்…” என்றவர் தன் கண்களை துடைத்துக்கொள்ள,
“அய்யோ அம்மா… பையன் வந்துட்டான்னு சந்தோஷப்படுவீயா… இப்படி அழுதுட்டிருக்குற?...” என அவன் அவரின் கண்களை துடைத்துவிட,
அப்போதுதான் தனது கைகளில் இருந்த போனை கவனித்தவர்,
“அச்சச்சோ… மறந்தே போயிட்டேண்டா…” என்றபடி
செல்போனை காதினில் வைத்து, “ஹலோ…” சொல்லி முடிக்கவும், அதை அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டான் அவன்…
“ஏண்டி… நோக்கு அறிவு இருக்கா இல்லையாடீ… இங்க ஒருத்தி போனில் ஹலோ ஹலோன்னு கத்திண்டிருக்கேன்… நீ பாட்டுக்கு போயிட்ட… அப்படி யார் கூட பேசிண்டிருந்த நீ இவ்வளவு நேரம்?...” என கோகிலவாணி படபடவென்று பொரிய,
சின்ன சிரிப்புடன் அவரின் குரலை அடையாளம் கண்டு கொண்டவன், “அதை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லணுமா?...”
“என்னது இது… திடீர்னு ஆம்பளை குரல் கேட்குது… அச்சச்சோ… மாப்பிள்ளை வந்துட்டாரா?...” என்றபடி பயந்து கொண்டே
“ஹலோ… நான்… அது வந்து… மாப்பிள்ளை…” என்று அவர் இழுக்க
“அடடா… என்ன ஒரு பயம்… எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணுற என் செல்ல பாட்டியா இன்னைக்கு இப்படி பயப்படுறது?...” என அவன் சொல்லி சிரிக்க
“பாட்டீயா?...” என்றபடி அவர் யோசிக்க
“வாண்டு… வாண்டு… குடுடா போனை… பாவம்… என் அம்மா…” என்றபடி அவனிடமிருந்து போனை வைஜெயந்தி பறிக்க முயற்சிக்க,..
கோகிலவாணிக்கு புன்னகை மலர்ந்தது…
“விஜய் கண்ணா… எப்படிடா இருக்க?... எப்ப ஊரிலிருந்து வந்த… இந்த பாட்டியை பார்க்க வரவே இல்ல பார்த்தீயா நீ?... நேரா உன் அம்மாவை பார்க்க போயிட்ட பார்த்தீயா?...“
“அதை நான் கேட்கணும்… பாட்டி… நான் பிறந்து வளர்ந்தப்பிறகு தான் நீங்க என் பாட்டின்னே எனக்கு தெரியும்… இதுவரை போனில் உங்க குரலையும், போட்டாவில் தான் உங்க முகத்தையும் நான் பார்த்துருக்கேன்… அப்ப நான் உங்களை குறை சொல்லட்டா?.. நீங்க தான் என்னைப் பார்க்க வரலைன்னு….”
“மன்னிச்சிடுடா விஜய்… எல்லாம் நேரம்… வேற என்ன சொல்லுறது…”
“அய்யோ பாட்டி… நாங்க உங்க பேரன்… எங்கிட்ட போய் மன்னிப்பு அது இது எல்லாம் சொல்லிகிட்டு… விடுங்க…”
“சரிப்பா… நாளைக்காவது பாட்டியை பார்க்க வா...”
“கண்டிப்பா பாட்டி… விருந்து ஏற்பாடு பண்ணி வைங்க…” என்றவன், தனது அம்மாவைப் பார்த்துவிட்டு “இருங்க உங்க மக பேசணுமாம்….” என்றபடி தாயிடம் போனை கொடுத்தான்…
“அம்மா… நாளைக்கு அவர் இல்லாத நேரம் பார்த்து அனுப்பி வைக்கிறேன்ம்மா… நீ பாரு உன் பேரனை…”
“சரிடீ ஜெயந்தி… மாப்பிள்ளை வந்துடப்போறார்… நான் போனை வச்சிடுறேன்…”
“சரிம்மா… அவர் இப்போ வந்தாலும் வருவார்… நான் வச்சிடுறேன்… அவர் இல்லாத நேரம் உங்கிட்ட பேசுறேன்… நீ உடம்பை பார்த்துக்கோ…” என்றபடி அவரும் போனை கட் செய்துவிட,
“ஹ்ம்ம்… அப்பா வீட்டுல இல்லாத நேரம் இதெல்லாம் வேற நடக்குதா?... ஹ்ம்ம்… நடத்து… நடத்து…” என்றபடி தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் விஜய்…
“அட… போடா…” என்றபடி அவரும் சிரிக்க, அவனும் அவரை இமை அகற்றாமல் பார்த்தான்…
அருள் இல்லத்தில்….
அகங்காரத்தில் சிரித்த ருணதியிடம் “என் ராஜா வாழ்க்கையை சரி செய்யவும் என்னால முடியும்… செய்து காட்டவாடீ?...” என காவேரி ஒரு உறுதியுடன் சொல்ல,
“என்ன செய்வ?...” என்று அவரிடம் கேட்டவள், ருணதியை தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இதோ இங்க நிக்கிறாளே இவளை உன் அருமை ராஜாவுக்கு கல்யாணம் செய்து வைக்கப்போறீயா என்ன?...” என ருணதியும் வார்த்தைகளை அள்ளி வீச…
ருணதி திடுக்கிட்டப் பார்வையுடன் அவளைப் பார்த்தாள்…
“கன்யா…” என காவேரி சீற…
“சும்மா நடிக்காத… அந்த பிளானோட தான எல்லாரும் இவளை இங்க வேலைக்கு சேர்த்தீங்க… இதோ இந்த அசிஸ்டெண்டும் இவளுக்கு டிரைவர் வேலை பார்க்குறான்… ஆமா தெரியாமத்தான் கேட்குறேன்… இவளுக்கு குழந்தை இருக்குறது உங்க யாருக்கும் தெரியாதா?...” என்றவள், ருணதியின் அருகே சென்று சட்டென்று யாரும் எதிர்பாராத நேரம் அவள் கழுத்தில் கிடந்த செயினை எடுத்து
“இதோ இந்த தாலி தான் உங்க கண்ணுக்குப் படலையா?...” என்று கேட்க… அனைவரும் அதிர்ந்து விட்டனர்…
மகத்தின் பார்வையும் ருணதியை விட்டு அகலவில்லை…
“கன்யா…” என காவேரி சத்தம் கொடுத்ததும் தான் அனைவரும் தன் உணர்வு பெற்றனர்…