(Reading time: 14 - 27 minutes)

"நான் என்ன சொல்லறது அதான் நீயே தீர்ப்பு சொல்லிட்டியே..ஒன்னு எங்களுக்கு தா இல்லை கல்யாணத்தை நிறுத்துன்னு.. இன்னொன்னும் சொல்லறேன் கேட்டுக்கோங்கோ இந்த கார் கூட பைரவி கிஃப்டா வாங்கித்தரா ..அப்பா பாவம் என்ன பண்ணுவார்..."

"டேய் நான் எங்கடா கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்..அவளுக்கும் இருபத்தி அஞ்சு பவுன் போடுங்கோன்னு தானே சொன்னேன்.."

"கல்யாணிக்கா ரெண்டும் ரெண்டும் நாலு தான் ..மூணும் ஒன்னும் நாலுதான் ..இதை நீ எப்படி சொன்னா என்ன..அந்த மாமி கட்டாயம் அம்பது பவுன் வேணும்னு சொல்லிட்டா..போடலைன்னா கல்யாணம் அவ்வளோதான்..அதைத்தான் நீ இன் டைரக்டா சொல்லற கல்யாணத்தை நிறுத்துன்னு..என்ன கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரிவரதா?", என்று நக்கலாக கேட்ட வசந்தை கண்களாலேயே எரித்தனர் ரஞ்சனியும் கல்யாணியும்.

"அய்யோ வசந்த் நீ வேற நேரம் காலம் தெரியாமா அவா வாயை கிண்டாதேடா..நாங்களே என்ன பண்ணறதுன்னு தெரியாம தத்தளிச்சுண்டு இருக்கோம்..இந்த நகையை சேக்கறதுக்கே அப்பா எப்படி எப்படியோ யார்கிட்டயோ கடன் வாங்கியிருக்கார் எனக்கு கூட சொல்லலை..இப்போ புதுசா இப்படி ஒரு குழப்பம்....ரஞ்சு கல்பு..கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ மா உங்களோட தங்கை தானே..அவளோட நல்லது கெட்டதுலே உங்களுக்கு பங்கு இல்லையா..இப்படி பேசாதேள்.. அப்பா எங்கே போவார் பணத்துக்கு?", என்று கண்ணீர் மல்க கேட்ட சாரதாவை துளியும் இரக்கமின்றி பார்த்தவர்கள்,

"அம்மா.. நிஜம்மாவே நீ எங்கம்மா தானான்னே சந்தேகமா இருக்கு..எப்படிம்மா எப்ப்பவும் இப்படி ஒரு கண்ணிலே வெண்ணை ஒரு கண்ணிலே சுண்ணாம்புன்னு இருக்கே.. தெரியாமத்தான் கேக்கறேன்..நாங்க வந்து ஒருவாரம் ஆச்சு இன்னமும் அவளுக்கு வாங்கின நகையை கூட நீ எங்களுக்கு கண்ணிலே காட்டலை.. இதுலே நாங்க கேட்டா உனக்கு கோபம் வேற வரது..இப்படி கண்ணீர் விட்டு எங்களை ராட்சஸிகளா எல்லார் கிட்டேயும் உருவகப்படுத்தறே?", என்று படபடத்தாள் ரஞ்சனி.

"அக்கா நீயேங்க்கா கெஞ்சறே..எப்போ அப்பா வாயை திறக்காம வசந்த்தை பேசவிட்டு வேடிக்கை பார்க்கறாரோ அப்பவே உனக்கு தெரியலையா..இந்தாத்துலே இனிமேல் நமக்கு நியாயம் கிடைக்காதுன்னு..கிளம்பு நம்மாத்து மனுஷால்லாம் வர்ரதுக்கு முன்னாடி நாம கிளம்பலாம் இங்கேந்து..போறும் இந்த உறவு....குத்தகை பணத்தை பூதம் காக்கறாப்போல சேர்த்து வச்சிண்டு இருக்கா ரெண்டு பேரும்..என்னமோ இவா அண்ணா எந்த ஜென்மத்துலே வந்து எடுத்துண்டு போகப் போறப்போல..அப்படியே வந்தா கூட..ஒரு மனுஷன் பதினாலு வருஷம் காண்டாக்டிலே இல்லை பார்க்கலேன்னா அவா செத்துட்டதுக்கு சமம்..பின்னே அவருக்கு எதுக்கு குடுக்கனும்..அதை நமக்கு பிரிச்சு குடுத்தா நாமும் சந்தோஷமா நம்மாத்து மனுஷா மின்னாடி கௌரவமா இருப்போம் இல்லையா?..தெரிஞ்சே தரக்கூடாதுன்னு செய்யறவா கிட்டே கெஞ்சி என்ன பயன்?"

"ரஞ்சனி கல்யாணி..போதும் ரெண்டு பேரும் வாயை மூடுங்கோ.. இதுக்கு மேலே ஏதாவது பேசினா நான் பொல்லாதவனா மாறிடுவேன்.. எப்போ யாருக்கு எப்பிடி பண்ணனும்னு நேக்கு நீங்க சொல்லித் தர வேண்டாம்.. அந்தந்த சமயத்துலே எது முக்கியமோ அதுப்படி தான் நான் செய்வேன்.. இதுக்கு முன்னாலே நிறைய வாட்டி ரஞ்சுவின் ஆத்துக்காரருக்கு நிறைய பணம் கொடுத்தாச்சு.. அப்புறம்..கல்யாணி.. நீ அடிக்கடி மாமியார் கோச்சுப்பார்னு சொல்லி சொல்லியே நிறைய பிடுங்கினயே.. அதுவும் கூட்டி கழிச்சு பார்த்தா எக்ஸ்டிரா இருபது பவுன் நகைக்கு மேலே ஆயிடும்...என்ன கணக்கு வருமோன்னோ உங்க ரெண்டு பேருக்கும்?..இல்லாட்டி நான் சொல்லித்தரவா..இனிமேல் ஒரு பைசா கிடையாது உங்க ரெண்டு பேருக்கும்..", என்று ருத்ரமூர்த்தியார் குதறினார் ராமமூர்த்தி.

"பசங்களுக்கு செய்யறதை சொல்லிக் காட்ட வெக்கமா இல்லை உங்களுக்கு..போதும் உங்க உறவு..ரஞ்சு கிளம்பு",என்று அக்காவை கிளப்பினாள் கல்யாணி.

அதற்குள் ஏதோ கேட்டபடி அழுதுக்கொண்ட வந்த தன் மகனின் முதுகை பதம் பார்த்தாள் ரஞ்சனி..

"சனியன்.. எப்பவும் ஏதாவது திங்கறத்துக்கு கேட்டுண்டே இருக்கு.. இதோ பார்டா.. பாட்டி இனிமேல் உங்களுக்கெல்லாம் ஒன்னும் கிடையாதுன்னு கையை விரிச்சுட்டா.. நாம இனிமேல் நடுத்தெரு நாராயணா தான்", என்று பொடி வைத்து பேசியவள்.. உள்ளே சென்று தன் மூட்டை முடிச்சை கட்டத் தொடங்கினாள்.

வாசல் பக்கம் நிழலாடியது.. அஜய் நின்று கொண்டிருந்தான்.. பைரவி உடனே எழுந்து வாசல் பக்கம் போய் விட்டாள்.

"ம்க்கும்", என்று தலையை நொடித்து அழகு காட்டினாள் கல்யாணி..

அனைத்தையும் பார்த்தபடி சாரதாவுக்கு ஆத்திரம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை..

"மஹதி உள்ளே சென்றவள் ஒரு பையுடன் வந்தாள்.. "அக்கா..ரெண்டு பேரும் வாங்கோ.. நேத்திக்கு தான் அப்பா ராத்திரி இந்த நகையெல்லாம் கொண்டு வந்தார்.. ரொம்ப நேரம் ஆயிட்டதாலே உங்களுக்கு காமிக்க முடியலை.. இதையெல்லாம் பாருங்கோ உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்கோ.. மீதி இருப்பது எனக்கு போறும்.. விஜய் கிட்ட நான் பேசிக்கறேன்.. என் கல்யாணம் யார் வருத்தத்துலேயும் நடக்கக் கூடாது..", என்றாவள் கீழே ஒரு துணியை விரித்து அனைத்து நகைகளையும் கடை பரப்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.