08. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன்
அறையை விட்டு அபரஞ்சிதாவோடு வெளியே வந்த குதிரைவீரன் அங்கே கண்ட காட்சியைப் பார்த்து கடகடவென வாய்விட்டுச் சிரித்துவிட்டான்.காரணம் இறந்தவரின் உடலை எடுக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுமோ அத்தனை ஏற்பாடுகளும் அங்கே செய்யப் பட்டிருந்தன.இறந்த உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல மூங்கிலால் செய்யப்பட்ட நீள் படுக்கை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வண்டியில் வைக்கப் பட்டிருந்தது.நெருப்புப் புகையும் சிறிய சட்டி வேறு. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழும் கூலிக்காரப் படை...தாரை தப்பட்டை..மகளை விதவையாய்ப் பார்க்க சக்தியற்று முகத்தை மூடி அழும் ராணியும் ராஜாவுமென அந்த இடமே அமங்களமாக துன்பச் சூழலாக இருந்தது.
புரிந்து போனது குதிரைவீரனுக்கு.வழக்கம் போல் முதலிரவு அறையில் அபரஞ்சிதாவின் முந்தைய கணவன்மார்கள் மாண்டுபோனதைப்போல் தானும் மாண்டிருப்போம் என எண்ணி இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என புரிந்தது குதிரைவீரனுக்கு.
அறையிலிருந்து வெளியே வந்த குதிரைவீரனையும் அபரஞ்சிதாவையும் பார்த்த வெளியே இருந்தவர்கள் அவரவர்கள் ஈடுபட்டிருந்த செயல் களை நிறுத்திவிட்டு அதீத ஆச்சரியத்துடன் குதிரைவீரனைப் பார்த்தனர்.
பார்த்தவர்கள் அப்படியே திறந்தவாய் திறந்தபடி அசைவற்று நின்றனர்.திடீரென சப்தமனைத்தும் நின்றுபோய் அங்கே அமைதி குடிகொண்டது.அமைதியின் காரணம் புரியாமல் முகம் மூடி அழுது கொண்டிருந்த ராஜாவும் ராணியும் கைகளை மெதுவாய் விலக்கிப் பார்க்க புன்னகையோடு குதிரைவீரனும்.. முகத்தில் புதுப்பொலிவோடு அபரஞ்சிதாவும் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி ஆச்சரியம் மகிழ்ச்சி மூன்றின் கலவையோடு இயல்பு நிலை தடுமாற நின்றனர்.
மகாராஜா மாமா அவர்களே..அழைத்தான் குதிரைவீரன்..
தந்தையே...அழைத்தாள் அபரஞ்சிதா..தந்தையை அழைத்தபடியே தாயை நோக்கி நடந்து வந்தாள்.
அபரஞ்சி..தா..என் கண்ணே...நாலெட்டு முன்னால் வந்து மகளை இறுக அணைத்துக் கொண்ட ராணி மகளை உச்சி மோர்ந்தார்.அவரால் மகளின் மகிழ்ச்சியான வதனத்தையும் குதிரைவீரன் உயிரோடிருக்கும் அதிசயத்தையும் நம்பவே முடியவில்லை.மகிழ்ச்சியால் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டியது.
மகாராஜாவும் குதிரைவீரனைக் கட்டித்தழுவிக் கொண்டார்.மருமகனே ...மருமகனே என்றாறேயன்றி அவரால் திகைப்பினாலும், மகிழ்ச்சியாலும் பேசவும் முடியவில்லை .
ராஜா ராணியின் மகிழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொள்ளவே அடுத்த நொடி மகா ராஜா வாழ்க!மகாராஜா வாழ்க! குதிரை வீரன் வாழ்க!குதிரைவீரன் வாழ்க!எனும் கோஷம் விண்ணைப் பிளந்தது.
அபரஞ்சிதாவின் புதிய கணவன் குதிரைவீரன் உயிரோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சியான விஷயம் நாடுமுழுதும் பரவ நாடே விழாக்கோலம் பூண்டது.அக்கம் பக்கத்து நாடுகளுக்கும் பரவியது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்து மட்டுமல்லாது பொற்காசுகளும் அளிக்கப்பட்டன.அரண்மனை ஆடலும் பாடலுமாக திமிலோகப்பட்டது.
முதலிரவு அறையில் குதிரைவீரன் சந்தித்த நிகழ்வுகளெல்லாம் ராஜாவுக்கும் ராணிக்கும் குதிரைவீரனால் சொல்லப்பட அவை அனைத்தும் மற்றவர்களுக்கும் தெரிந்துபோக குதிரைவீரனின் வீரமும் அவனின் சாகஸங்களும் மக்களால் பெரிதும் பேசப்பட ஆரம்பித்தன.
தனக்குப் பின் நாட்டை ஆள ஆண்வாரிசு இல்லையே என ஏங்கியிருந்த ராஜா குதிரைவீரனின் வீரம் கண்டு உடனடியாக அவனுக்கு முடிசூட்டி ராஜாவாக்க விரும்பினார்.
தற்போது அதெல்லாம் வேண்டாமென குதிரைவீரன் மறுத்தும் மன்னர் கேட்கவில்லை.குதிரைவீரனுக்கு முடிசூட்ட நன்னாள் குறிக்கப்பட்டது.
தனது மருமகன் குதிரை வீரனுக்கு முடிசூட்ட நாள் குறித்திருப்பதாகவும் அதில் வந்து கலந்து கொள்ளும் படியும் ஐம்பதைந்து தேசத்து மன்னர்களுக்கும் அழைப்பு விடுத்தார் சிங்கபுரி ராஜா.
அந்தந்த தேசத்து முக்கியஸ்தர்கள் குதிரைவீரனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் ஆர்வமுடன் இருந்தனர்.
அந்த இனியனாளும் வந்தது.சிங்கபுரி நாட்டு மக்களும் முடிசூட்டு விழாவைக் கண்டு களிக்க சாரிசாரியாக அரண்மனை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.ஆயிற்று வெளி தேசத்து பிரமுகர்களாலும் சிங்கபுரி மக்களாலும் அரண்மனை நிரம்பி வழிந்தது.
வேத விற்பனர்கள் வேதங்கள் ஒத மந்திரங்கள் செபிக்கப்பட ராஜகுரு மணிமகுடத்தை எடுத்துக் கொடுக்க சிங்கபுரி ராஜாவால் தலையில் மகுடம் சூட்டப்பட.. குதிரை வீரன் சிங்கபுரியின் புதிய மன்னனாக முடிசூட்டப்பட்டான்.
வாழ்த்தொலி வானை முட்டியது.ஆடலும் பாடலும் அமர்க்களப் பட்டன.மற்ற தேசத்து மன்னர்களெல்லாம் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அளித்தனர்.
அபரஞ்சிதாவின் தந்தையான பெரிய மன்னரும்,தாய் ராணியும் ஒருபுரம் முக மலர்ச்சியோடு அமர்ந்திருக்க புதிய மன்னராக பொறுப்பேற்ற குதிரைவீரனும் புதிய ராணியான குதிரைவீரனின் மனைவியான அபரஞ்சிதாவும் நடுனாயகமாய் அரியணையில் வீற்றிருந்தனர்.எல்லோர் முகத்திலும் குதூகலம்.அடுத்து தடபுடலாய் விருந்து தரப்படவிருந்தது.கடைசியாய் மங்கல இசை இசைக்க அரணனைக் கலைஞர்கள் ஆயத்தமாயினர்.