அன்றும் அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டி நின்றன. வீட்டிலிருந்தே மதிய உணவைக் கொண்டு வந்திருந்ததால் ஸ்வேதா தப்பித்தாள். டெஸ்க்கில் இருந்தபடியே அவளின் சப்பாத்தி ரோலை உண்டு விட்டு ராம் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அவன் அப்பொழுதான் மதிய உணவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். ஸ்வேதா ராமை அழைத்து அவனிடம் சிறிது பேசவேண்டும் என்றும், ஏதேனும் வேலை இருக்கிறதா என்றும் கேட்க, அவன் முகம் மாறியது.
“என்கிட்ட என்ன பேசணும் உனக்கு. ஆபீஸ் விஷயமா”
“ஆபீஸ் விஷயம் இல்லை ராம். பெர்ஸனல்”
“பெர்ஸனலா பேசற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு. சரி வா. நான் கான்டீன்தான் போறேன். நீயும் ஜாயின் பண்ணிக்கோ”, ராம் ஐயோ இவ நம்மக்கிட்ட லவ் ஏதானும் ப்ரொப்போஸ் பண்ணுவாளோ..... எப்படி மறுக்கறது, என்ற திகிலுடன் வர, எந்த வழிசலும் இல்லாமல் ராம் ஒழுங்காகப் பேசவேண்டுமே என்ற திகிலுடன் ஸ்வேதா வந்தாள். இருவரும் சென்று இருக்கையில் அமர, ஸ்வேதா தான் உண்டு விட்டதாகக் கூறியதால், தனக்கு மதிய உணவும், ஸ்வேதாவிற்கு ட்ரிங்க்கும் வாங்கி வந்தான் ராம்.
“சொல்லு ஸ்வேதா, என்ன பேசணும் உனக்கு என்கிட்ட......”
“அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை ராம்....”
“அம்மாத் தாயே என்னை லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிடாதே. நான் ஆல்ரெடி ஃபிக்ஸ் ஆயிட்டேன். தீபாவை எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. இன்னும் அவக்கிட்ட கூட சொல்லலை. டைம் பார்த்து சொல்லணும்ன்னு மூணு மாசமா வெய்டிங்”
“அடப்பாவி, நீ அவக்கூட சரியாக் கூட பேச மாட்டியே. எப்போ இந்த ஃபிக்ஸ்ஸிங் எல்லாம் நடந்தது”
“அதெல்லாம் நான் வந்து ஒரு வாரத்துலயே…… படிக்கட்டுல நானும், அவளும் எதிரும் புதிருமா நடந்து வர ரெண்டு பேரும் மோதிட்டோம். அப்படி மோதல்ல ஆரம்பிச்ச என் சைடு காதலா மாறிடுச்சு”
“ஹ்ம்ம் சினிமா பார்த்து ரொம்பக் கெட்டுப் போய்ட்ட. சீக்கிரம் அவக்கிட்ட சொல்லிடு. ஏற்கனவே அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. தை மாசத்துக்குள்ள முடிக்கணும்ன்னு அதி தீவிரமா இருக்காங்க”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே
படிக்க தவறாதீர்கள்...
“என்ன ஸ்வேதா இப்படி குண்டைத் தூக்கி போடற. இன்னும் ரெண்டு மாசத்துல எப்படி பையனைப் பார்த்து கல்யாணத்தை முடிப்பாங்க”
“அதென்ன பெரிய கஷ்டம். ஏற்கனவே அவளுக்கு நிறைய வரன் வருது. அவதான் ஏதோ காரணம் சொல்லி ரிஜெக்ட் பண்ணிண்டு இருக்கா. இவ ஓகே சொல்லிட்டா போறும். மத்ததெல்லாம் தானா நடந்துடும்”
“லவ்வ சொல்றதுக்கு முன்னாடியே அதுக்கு ஆப்பு ரெடியா இருக்கே. சரி தீபாக்கிட்ட இந்த வாரத்துலயே பேசிடறேன். நீ இந்த அளவு எங்க பக்கம் பேசறேன்னா நீ லவ் சொல்ல வரலை. அப்பறம் என்ன பெர்சனல். இங்க கம்பெனில யாரானும் உன்னைத் தொந்தரவு பண்றாங்களா”
“ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உன் ஓவர் கற்பனையை நிறுத்து. அதென்ன தனியாப் பேசணும்ன்னு கூப்பிட்டாலே லவ் ப்ரோப்போசலா”, ஸ்வேதா கேட்க, ராம் அசடு வழிந்தான்.
“சரி விடு விடு. ரொம்ப ஓட்டாம என்ன விஷயம்ன்னு சொல்லு”, ராம் கேட்க, ஸ்வேதா ஹரியைத் தான் காதலிக்க ஆரம்பித்ததில் தொடங்கி நேற்று கௌரி சொன்ன ஐடியா வரை சொல்லி முடித்தாள்.
“நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை ஸ்வேதா. உன்னோட அண்ணி அவங்க சின்ன வயசுல ஹரிக்கிட்ட காட்ட முடியாத கடுப்பை எல்லாம் இப்போ உன் மூலமா காட்டறாங்கன்னு நினைக்கறேன். இந்த காலத்துல ஹரி மாதிரி ஒரு ஆள் பார்க்கறது எத்தனை கஷ்டம் தெரியுமா”
“எனக்கும் தெரியும் ராம். இருந்தாலும் அவர் என்கிட்ட இப்படி தொங்கிண்டு இருக்கறது பிடிச்சிருக்கே. இன்னும் கொஞ்ச நாள்தான். அப்பறம் என்னாலையே தாங்க முடியாது. அவரோட ஒழுங்கா பேச ஆரம்பிச்சுடுவேன். ப்ளீஸ் ப்ளீஸ் நீ எதுவுமே பண்ண வேண்டாம். அவர் இருக்கும்போது கொஞ்சம் என்னோட கிளோஸா மூவ் பண்றா மாதிரி நடி போறும். நீ எனக்கு பண்ற ஹெல்புக்கு நான் தீபாக்கிட்ட உன்னைப் பத்தி உசத்தி சொல்லி, உன்னை லவ் பண்ண வைக்கறேன்”
“வேண்டவே வேண்டாம் தாயே. நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம். என் லவ்வை நானேப் பார்த்துக்கறேன். நீங்க உங்களோட ஹரியை வெறுப்பேத்தறதை மட்டும் பாருங்க”, ராம் சொல்ல ஸ்வேதா சிரித்தாள்.
பின்னர் இருவரும் முடிவு செய்து அன்றிலிருந்தே அவர்களின் நாடகத்தை ஆரம்பிப்பதாக இருந்தது. அன்று மாலை ஸ்வேதா ஹரிக்கு ஃபோன் செய்து, தான் ராமுடன் செல்வதாகக் கூற, ஹரியும் சரி என்று கூறிவிட்டான். ராமிற்குதான் ஒரே கொண்டாட்டம். அவனாக தீபாவைக் கூட்டிக் கொண்டு போவது என்பது நடக்காத காரியம். அட்லீஸ்ட் ஸ்வேதாவின் நாடகத்தால் தீபாவுடன் செல்ல முடிகிறதே என்று மிகுந்த மகிழ்ச்சியுடனேயே அவர்களை கூட்டிக் கொண்டு போனான். இப்பொழுது காலையில் நடந்தது ரிவர்ஸில் நடந்தது. ஸ்வேதாவும், ராமும் பேசிக்கொண்டு வர தீபா வேடிக்கைப் பார்த்தாள்.