08. ஊனமறு நல்லழகே - ப்ரியா
ஸ்ரவந்தி அந்த வீட்டிற்கு வந்து முழுதாக பத்து நாட்கள் முடிந்திருக்கவில்லை..!! சரியாக ஒன்பது நாட்கள் அதற்குள் இவ்வளவு பிரச்சனைகள்!! தன்னை சுற்றிலும் நடக்கும் அனைத்தும் என்றுமே அவளுக்கு புதிராக இருப்பது ஏன்? இன்று நேற்று அல்ல!! அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய்!! தன் பழைய நிலையும் அந்த நாட்களின் நினைவுகளும் மனதில் ஆட, தோட்டத்தில் இருக்கும் மல்லிகை செடியில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள்.
காலையில் அறைக்குள் நுழைந்த மதுமதி வெளியே வந்திருக்கவில்லை இன்னும்!! மிதுர்வனும் கிளம்பி சென்று விட, ரூமிற்குள் சென்ற ருத்ராவும் வெளியில் வரவில்லை.
அவள் கொண்டு வந்து கொடுத்திருந்த தன் சான்றிதழ்களை சரி பார்த்தவள், காலேஜில் இருந்து மிதுர்வன் வாங்கி வந்திருந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வைத்தாள். மதிய சமையலை கவனித்து சரளாவிற்கு உதவி செய்து அவள் சாப்பிட்டு ருத்ராவை எழுப்ப செல்ல, அவள் அப்போதும் வெளியில் வராமல் தூங்கி கொண்டிருந்தாள்.
தனியே சாப்பிட மனமில்லாமல் அவள் காத்திருக்க, மதுமதிக்கும் மதியழகனுக்கும் சாப்பாடு அறைக்கே எடுத்துவருமாறு மதுமதி கூறிவிட, சரளாவும் அதே போல் அறைக்கு கொண்டு சென்று விட்டாள்!!
மிதுர்வனும் வரமால் போக, காத்திருந்து பார்த்து விட்டு சரளா உண்ணும் போது அவளுடன் பேசியபடியே தன் மதிய உணவையும் முடித்துக் கொண்டாள். அதன் பிறகு வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்து, பூஜை மலர்களை பறித்து வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை ருத்ராவின் அறைக்கு செல்ல அது உள்புறமாய் பூட்டியே இருந்தது!!
இன்னுமா தூங்குகிறாள்? என்று நினைத்தபடியே மீண்டும் தோட்டத்துக்கு வந்து மல்லிகையை பறித்துக் கொண்டிருக்கையில் தான் பழைய நினைவுகள் பவனி வரத்தொடங்கின!!
பூக்களை பறித்து விட்டு உள்ளே வந்து அவள் தொடுக்க ஆரம்பித்திருக்க, ருத்ரா எழுந்து வந்தாள். தூக்கம் இன்னும் கண்களில் இருக்க,
"அண்ணி தலைவலிக்குது ஒரு காபி கிடைக்குமா?" என்றபடி அவள் அருகில் அமர்ந்து இயல்பாய் அவள் தோளில் சாய்ந்து அவள் கண்களை மூடி கொள்ள, அதுவரை இருந்த அவள் நினைவுகள் எல்லாம் விடைபெற்று ஓடின!!
மெல்லிய புன்னகை இதழ்களில் தவழ,
"இப்படியா காலைல இருந்து தூங்குவ? இப்படி தூங்கினா அதுவும் சாப்பிடாம தலைவலி வராம என்ன பண்ணும்?"
"ம்ம் ஹ்ம்ம் ரொம்ப தூக்கம்.. நேத்தும் தூங்கலை அதுக்கு முந்தின நாளும் அழுதுட்டே தூங்கலை அது தான்" கண்ணை மூடியவாறே அவள் உளறி கொட்ட,
"என்னது அழுதுட்டே தூங்கலையா?" என்று சற்று பதற்றத்துடன் வினவினாள் ஸ்ரவந்தி.
"ஸ்ஸ்ஸ்ஸ், ஐயோ" என்று நாக்கை கடித்துக் கொண்டு எழுந்தவள்,
"ஆமாம் அண்ணி, ஆனால் இப்போ தலைவலி ஒரு காபி கொடுங்க குடிச்சிட்டு நடந்ததை சொல்றேன்" என்று கெஞ்சல் குரலில் சொல்ல, உள்ளே சென்றவள் அவளுக்கு சுட சுட தோசையும் காபியும் கொண்டு வந்தாள்.
"அப்படியே கொஞ்சம் சாப்பிடு வயசு பொண்ணு இப்படி வயிற்றை காய போடக் கூடாது"
"ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணி" என்று சொன்னதுடன் பேச்சை நிறுத்தியவள் அவசரமாய் உண்டு முடித்து காபியை குடித்து சற்று தெளிவாய் நிமிர்ந்தாள்.
"அண்ணா என்னை அடிச்சிட்டார்!!"
"என்னது?"
"ஆமாம் அதுனால தான் இங்க வந்தேன்"
"ஏன்மா? என்ன ஆச்சு?"
"எப்பவும் போல தான் அண்ணி.. ஆனால் என்மேலேயே கை வைப்பாருன்னு நான் நினைக்கலை"
"ம்ம்ம்" ஸ்ரவந்திக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. நந்தனை பற்றி அவளும் சற்று அறிந்திருந்தாள் தான்!! ஆனால் ருத்ரா மீது என்றுமே அவனுக்கு பாசம் அதிகம். யாரும் அவளை ஒரு சொல் சொல்ல விட மாட்டான்!!
"சரி விடு.. அதை பத்தி பேச வேண்டாம்.. நான் பூ தொடுத்து வைக்கிறேன்.. நீ போய் முகம் கழுவிட்டு தலைபின்னிட்டு வந்து வெச்சுக்கோ.. ஹ்ம்ம் சீக்கிரம் போ.. நேரம் ஆகுது பூஜை செய்ய அத்தை வந்துருவாங்க" என்று அவள் அவசர படுத்த, அம்மா வருவதற்குள் சீக்கிரம் வரவேண்டுமென கிட்டத்தட்ட தன் அறைக்கு ஓடினாள் ருத்ரா.
அவள் போனதும் அங்கு வந்தார் மதுமதி. அவர் வரவும் அவசரமாய் எழுந்து நின்ற ஸ்ரவந்தி, அங்கு அவர்கள் பேசியதை அவர் கேட்டு விட்டாரோ என்று சந்தேகமாக பார்க்க, அவர் முகத்தில் இருந்து அவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காலையில் இருந்த யோசித்த மதுமதி ஸ்ரவந்தி மீது தவறு இல்லாமல் தான் அவள் மேல் கோபப்பட்டு விட்டோமோ? என்று வருந்திக் கொண்டிருக்க மதியழகனும் அதையே சொன்னார். ஆனாலும் கோபம் தனியா சற்று நேரம் பிடித்தது. இப்போது ஸ்ரவந்தியின் மேல் முற்றிலுமாய் கோபம் இல்லாமல் போயிருந்தது.
"பூஜைக்கு பூ எடுத்து வெச்சுட்டியா மா?" என்று அவர் எப்போதும் போல அன்பாக கேட்க, ஆச்சர்யமாய் பார்த்தவள் அவளும் சட்டென்று இயல்பு நிலைக்கு வந்தாள்.
"ஆங்.. எடுத்து ரெடியா வெச்சுட்டேன் அத்தை.. நீங்க போய் பூஜை செய்ங்க.. இந்தாங்க இந்த பூவை வெச்சுக்கோங்க."என்று தொடுத்ததில் இருந்து எடுத்து தர புன்னகையுடனேயே அதையும் வாங்கி கொண்டு பூஜையறைக்கு சென்றார் மதுமதி. மீதம் இருந்த பூக்களை புன்னகையுடன் தொடுத்து முடித்தாள் ஸ்ரவந்தி.
தன் நண்பனின் வீட்டில் இருந்து ஹோட்டல் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கே சென்றிருந்தான் அந்த புதியவன்!! இன்று காலை அவன் ஸ்ரவந்தியை பார்த்ததிலிருந்து சென்னையில் தாங்கும் அவன் எண்ணம் வலுபெற்றுக் கொண்டிருந்தது!! அவன் நண்பன் வீட்டில் இருந்து கொண்டு அவனால் ஸ்ரவந்தியை தேடவோ அதை பற்றி சிந்திக்கவோ முடியவில்லை!!
'எப்படி அவளால் திருமணம் செய்திருக்க இயலும்?'
'அவளை காணாமல் அவன் எங்கெல்லாம் தேடி கொண்டிருந்தான்? அப்படி இருக்கையில்?'
'ஒரு வேலை அவள் என் ஸ்ராவனி இல்லையோ?'
'இல்லையே அவள் கண்களில் நான் கண்டேனே? என்னை எதிர் பார்க்காத அந்த அதிர்ச்சி..'
'நிச்சயமாய் அவள் தான்.. எப்படி அவளை கண்டுபிடிப்பது?'
பல கேள்விகளின் முடிச்சுகளை அவைளுக்கும் வழி தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்!! அவன் சந்துரு!! சந்துரு என அழைக்கப்படும் சந்திரேஷ்!!
தொடரும்…
{kunena_discuss:804}