ஒரு வேளை இதற்குப் பேர்தான் காதலா? அப்போ எனக்கு விஷ்ணுவைத்தான் பிடித்திருக்கிறதா? விஷ்ணு இல்லாமா என்னல வாழ முடியுமா? என்று அடுக்கு அடுக்காக தனக்குள் கேள்வி தட்டுகளை அடுக்கிக் கொண்டே போனாள். அது இது என்று சிறிது நேரம் யோசித்தவள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள்.
“ஆம், விஷ்ணுவைத்தான் நான் காதலிக்கிறேன்” என்று அவள் தனக்கு தானே கூறி கொள்ளும் போது அவளுக்குள் ஏற்பட்ட ஆனந்தத்தை அவளால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
தன் படுக்கையில் இருந்து எழுந்தவள், தன் ஈர உடைகளை மாற்றினாள். தன் முகத்தைக் கழுவி, பொட்டு வைக்கக் கண்ணடியை பார்க்க, அவள் முகம் அன்று அவளுக்கே அழகாகத் தெரிந்தது. (காதல் மனதுக்குள் வந்து விட்டாலே, கழுதை கூட காஜல் அகர்வாலா தெரியும், நம்ம அனு அழகாய் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே).
தன்னை தானே ரசித்துக் கொண்டிருந்தவளை, அவள் உருவமே கேள்வி கேட்டது. “உனக்கு விஷ்ணு மேலே காதல் வந்துருச்சி சரி, ஆனா இன்னும் 15 நாள்ல உனக்குக் கல்யாணம். அதுவும் திபக் கூட. ஞாபகம் இருக்கா? “
அதுவரை ஆனந்தமாய் துள்ளிக் குதித்த அவள் மனது, ஆழ்கடல் போல் அமைதியானது. ஆமாம் எனக்கும் திபக்கும் கல்யாணம். என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு, திவ்யா கூறியது ஞாபகத்திற்கு வந்தது ” லவ் வரல னா என்ன கல்யாணம் ஸ்டப் தான்”.
திவ்யா கூறியது போல் அனுவிற்குள் காதல் வந்தது, ஆனால் திபக்கின் மீது அல்ல, விஷ்ணுவின் மீது.
“விஷ்ணுவை மனசுல நினைச்சுக்கிட்டு திபக் கூட வாழ முடியாது. அப்படி செஞ்சா அது அவருக்கு எனக்கு நான் செய்ற துரோகம். இப்போ என்ன பண்ணலாம்” என்று யோசித்தவள் “ச்சா இந்த வாயாடி தேவை இல்லாத நேரத்தில் எல்லாம் கூடவே இருந்து தொல்லை கொடுப்பா. இன்னைக்குனு பார்த்து ஆளையே காணவில்லை பாரு” என்று அவ்வளவு குழப்பத்திலும் திவ்யாவிற்கான அர்ச்சனையை வழங்கினாள்.
அது இது என்று சிறிது நேரம் யோசித்தவள் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள். அது தன் தந்தையிடம் நடந்ததைக் கூறி இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும். அவளையும், அவளது முடிவையும் சரியாக புரிந்து கொள்ள அவரால் மட்டும்தான் முடியும் என்பது அனுவின் நம்பிக்கை அதுதான் உன்மையும் கூட.
முடிவெடுத்துவிட்டு கடிகாரத்தை பார்த்தாள், மணி ஒன்பது என்று காட்டியது. தந்தை வந்திருப்பார் என்று அவளுக்குத் தெரியும். தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள். அங்கே பார்வதி இரவு உணவுக்காகச் சமைத்ததை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
இறங்கி வந்தவள் “அம்மா, அப்பா வந்துட்டாரா? எங்க இருக்காரு” என்று கேட்டுக் கொண்டே கண்ணில் படுகிறாரா என்று அறை பார்வையிட்டாள்.
“அங்க, பின்னாடி தோட்டத்தில உக்காந்து இருக்காருடி. நீ உக்காரு நான் போய் அவர குப்டுட்டு வரேன். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அவர் கணவனை அழைக்கக் கிளம்பினார்.
“அம்மா இருங்க, நான் போய் குப்டுட்டு வரறேன், நீங்க உட்காருங்க” என்று தன் தாயை நிறுத்தி விட்டு அனு சென்றாள். தன் தந்தையோடு பேசுவதற்கு அவளுக்கும் அந்தத் தனிமை தேவைப்பட்டது.
தோட்டத்திற்குச் சென்றவள், உஞ்சலில் தனியாக அமர்ந்து இருக்கும் தன் தந்தையைக் கண்டாள். மெதுவாக அருகில் சென்றவள், அவர் அருகில் அமர்ந்த அவரை அனைத்துக் கொண்டாள். இவள் அணைப்பை உணர்ந்து அப்போதுதான் தன் யோசனையை விட்டு வெளியே வந்தார் ராஜ சேகர்.
“வாடா மா” என்று கூறியவர் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அவளை அனைத்துக் கொண்டார். அவர் கூறி அந்த ஒரு வார்த்தையில் இருந்தே அவர் நார்மலாக இல்லை என்பதை அனுப் புரிந்து கொண்டாள்.
“என்ன பா ஆச்சி. எதுவும் பிரச்சனையா” என்று கேட்டுக் கொண்டே அவர் முகத்தை உயர்த்தியவளுக்கு அவர் கண்ணை பார்த்ததும் அவர் சோகமாகத்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்தாள். “என்ன பா ஆச்சி, கண்ணெல்லாம் கலங்கி இருக்கு” என்று அக்கறையோடு கேட்டாள்.
“ச்சா கவலை எல்லாம் ஒண்ணும் இல்லடா, சொல்லப் போனா பெருமையா இருக்கு” என்றார் ராஜ சேகர்.
“என்ன பா சொல்றீங்க. யார நெனச்சிபா பெருமை படுரீங்க” என்றாள் எதுவும் புரியாதவளாய்.
“நான் யார நெனச்சீடா பெருமைப் பட போரேன். எல்லாம் என் பொண்ணை நினச்சிதான்” என்று கூறிவிட்டு அனுவின் நெற்றியில் முத்தமிட்டார்.
அனுவிற்கு குழப்பம் மேலும் அதிகமாயிற்று. “என்னை நினச்சா, அப்படி என்ன பா நான் பண்ணேன்."”என்றாள் அனு.
“இன்னைக்கு ஆபிஸ்கு சகா வந்திருந்தான் மா” என்று தன் நீண்ட கால நண்பன் வந்திருந்ததைக் கூறினார்.
“யாரு, சகாதேவன் அங்கிளா. எப்படி இருக்காரு பா. ஏன் இப்போலாம் அவர் வீட்டுக்கே வரது இல்ல” என்று அக்கரையோடு விசாரித்தாள்.