05. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி
தனது அறையில் அமர்ந்திருந்தான் இந்திரன். கைகளில் தவழ்ந்தது அக்கைப்பேசி. அவளிடம் உரையாடுவதற்காக மட்டும் அவன் பயன்படுத்தும் கைப்பேசி அது. தினமும் கண்மணிக்கு ஒரு மெசேஜாவது அனுப்பி விட்டுத்தான் அவனது பணிகளை ஆரம்பிப்பான் இந்திரன். அவனுக்கு தெரியும், அவன் அனுப்பும் மெசேஜில் ஒன்றுக் கூட கண்மணியின் கைப்பேசியில் இல்லை. அனைத்தையும் டிலீட் செய்து விடுகிறாள் அவள். எனினும் அவளது உள்ளத்தில் அவனுக்கென ஒரு இடம் இருக்கிறது என்று பெரிதும் நம்பினான் அவன்.
“ வரும் கண்ணம்மா.. உனக்கு கண்டிப்பா என்மேல காதல் வரும்.. நான் ஏன் உன்கிட்ட எனக்கான அடையாளத்தை மறைச்சேன், ஏன் இப்படி கண்ணாம்பூச்சி ஆடுறேன், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு.. கூடிய சீக்கிரம் கெட்டி மேளம் கொட்டனும் மை டியர் கண்ணம்மா” என்று வாய்விட்டு சொன்னவனின் விழிகளில் காதல் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. அவளைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் அவனுக்கு ஃபோன் செய்து இருந்தாள் கண்மணி.
ஒரு கணம் ஸ்தம்பித்து போயிருந்தான் இந்திரன். அவன் அவளிடம் பேச வேண்டும்தான். ஆனால், இத்தனை விரைவாகவா? “என்னடா இப்படி ஷாக் கொடுக்குற நீ?” என்று கேட்டவன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். சட்டென அவன் கண்களில் அது படவும்,
“ சாரி கண்ணம்மா.. இன்னும் கொஞ்சம் டைம் தாயேன்.. நானே உன்கிட்ட பேசுவேன்” என்றவன், அவளது அழைப்பை எடுத்தான்.
“ ஹலோ” குழப்பமும் எதிர்ப்பார்ப்புமாய் பேசினாள் கண்மணி. எதிர்முனையில் அந்த குரலைக் கேட்டவளுக்கு ஒரு கணம் தலையே சுற்றியது. எதிர்முனையில் அவள் கேட்டது தற்பொழுது வெற்றியும் அவளும் பணிபுரியும் படத்தின் இயக்குனரின் குரல்.
“டைரக்டர் சாரா? இதென்ன விளையாட்டு” என்று அவள் மனம் வெகுண்டு போனது ஒரு நொடிதான். அடுத்த நொடியே ஒரு “விளம்பர இடைவேளைக்கு பின் சந்திப்போம்” என்று தொகுப்பாளினி கூறிட கண்மணிக்கு இந்திரனின் செய்கை புரிந்தது. ஏதோ ஒரு அலைவரிசையில் அந்த இயக்குனர் பேசிக்கொண்டிருக்க வேண்டும், தன்னிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவே அவன் அழைப்பை உயிர்பித்து தொலைக்காட்சியின் அருகில் வைத்திருக்க வேண்டும்.
“ ராஸ்கல்.. இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா நீ?”என்று மனதிற்குள் வினவியவள் கோபத்துடன் ஃபோனை வைத்தாள்.
“ உனக்கிது தேவையா கண்மணி? எதுக்காக அவனுக்கு ஃபோன் பண்ணின நீ? இப்போ அவன் ரொம்ப சந்தோஷமாய் சிரிச்சுக்கிட்டு இருப்பான்., குதூகலமாய் குதிப்பான்” என்று அவள் வாய்விட்டு சொல்லும்போதே, இந்திரனிடமிருந்து மெசேஜ் வந்தது.
“ ஹா ஹா.. என்கிட்ட பேசுறதுக்கு அவ்வளவு ஆர்வமா பேபி உனக்கு ? எப்படியும் இனிமே பேசிட்டே தானே இருக்க போறோம்? சரி சரி முறைக்காதே.. உன் கோபத்தை குறைக்கிற மாதிரி ஒரு செய்தி சொல்லவா? இன்னைக்கு அவார்ட் ஃபங்க்ஷன்ல நானே உன்னை தேடி வருவேன். உன் கிட்ட பேசுவேன்.. உன் கண்ணுக்குள்ள நிற்பேன்.. போதுமா? சீயூ” என்று அனுப்பியிருந்தான் இந்திரன்.
எப்போதும் போல அலட்சியமாய் அந்த மெசேஜை விடமுடியவில்லை கண்மணியால்! “சீ யூ வா? அப்போ இவன் கண்டிப்பாக வருவானோ ? வா மகனே வா.. இன்னைக்கு உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு” என்று சவாலிடும் குரலில் கூறியவள், அவனைக் கண்டதும் வாயடைத்து போவிடுவாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.
மழை..!
இயற்கை அன்னையில் கண்ணீர் என்பதா?
இயற்கை அன்னையின் முத்தங்கள் என்பதா?
வானம் சிந்தும் வரங்களா?
அல்லது இதயத்தை கூறு போடும் கணைகளா?
புரியாத புதிர்கள் புதைந்துள்ள இப்புவியில் மழையும் ஒரு புதிர்தான் ! மழையானது எப்படி சிலரை துள்ளி குதிக்க வைத்து மயங்க வைக்கிறதோ, அதே போல சிலரை முழுதாக உடைத்துவிடுகிறது.
அவர்களில் ஒருவராய் தன் வீட்டு பால்கனியில் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார் சுலோட்சனா, சத்யனின் தாயார். இளம் வயதில் இருந்தே மழை என்பது அவருக்கு இறைவன் அனுப்பும் ஆறுதல்தாலும் ஆசிகளும் தான்.
அதென்னவோ, அவர் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாரோ அன்றெல்லாம் வானம் மாரி பொழியும். வானத்தில் இருந்து தனக்கு ஆறுதல் கிடைப்பதாக எண்ணிக் கொள்வார் அவர். இத்தனை வருடங்கள் தாண்டியும் கூட, இந்த நிலை மாறிடவில்லை. இதோ, கலங்கியிருந்த அவரது உள்ளத்திற்கு ஆறுதலாய் மழை பொழிந்து கொண்டிருந்தது.
கண்களை இறுக மூடிக் கொண்டார் அவர். “ அவன் என்ன முடிவெடுத்தாலும், நீ அவன் கூட இருக்கனும் லட்சா.. நான் அவனுக்கு நல்ல தகப்பனாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால், உனக்கு நல்ல கணவனாகத்தான் இருந்தேன். உனக்கும் எனக்குமான உறவு உலகத்துக்கு புரியாமல் போனாலும் நமக்கு தெரியும்.. நான் வாழ்ந்தவரை உன்னை ராணியாகத்தான் வெச்சிருந்தேன்.. ஆனால், என் கடைசி நிமிஷத்துல, உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சிரும்மா.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. என்னைவிட சத்யன் உன்னை நல்லா பார்த்துப்பான்” இதுதான் சுலோட்சனாவிடம் கௌரவ் பேசிய கடைசி வார்த்தைகள்.