ஆனால், நேரம் நெருங்க நெருங்க, அவளுக்கு பதட்டமாகத்தான் இருந்தது. அவன் தன்னிடம் பேசினால் என்ன செய்வது ? எப்படி பதில் பேசுவது என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள் அவள். அவளின் உள்மனமோ,
“முகமறியாத அவன் உன்னிடம் ஏன் உண்மையை சொல்ல வேண்டும்? அவன் உன்னை சந்திப்பான் என்று எப்படி நம்புகிறாய்?”என்று கேள்வி கேட்டு அவளைக் குழப்பியது. குழப்பத்துடன் அவள் தயாராகிட அங்கு வந்து சேர்ந்தான் வெற்றி.
“ ஹேய் கண்ணு” என்று உற்சாகமாய் அவன் அழைக்கவும் அவனை வரவேற்கும்படி புன்னகையுடன் கண்மணி திரும்பிட ஒரு கணம் அப்படியே நின்றான் வெற்றி. “ தனது தோழி இவ்வளவு அழகானவளா?” என்று அவனுக்கே சந்தேகமாய் இருந்தது. “ எப்படி டா இருக்கேன்” என்று அவள் கேட்டிட பதில் சொல்லாமல் அவளை ஒரு வட்டமாய் சுற்றி அவள் முன் நின்றான் வெற்றி.
“ பதில் சொல்லேன்டா”
“அதுவந்து கண்ணு… நேத்து வரைக்கும் நீ பையன் மாதிரி தானே சுத்திட்டு இருந்த? எப்படி திடீர்னு பொண்ணாக மாறிட்ட?” என்று கேட்டப்படி அவளுக்கு திருஷ்ட்டி கழித்தான் வெற்றி.
“ அய்யே சீ போ”
“அம்மாடி, நான் இன்னும் டைரக்டரே ஆகலம்மா. அதுக்குள்ள நீ பாட்டுகு வெட்கப்பட்டுட்டு என்னை கொன்னுடாதே” என்று வெற்றி பயந்தவன் போல நடிக்க,
“ பொழைச்சு போ” என்றவள்,
“ என்னடா ஹேர்ஸ்டைல் இது? அமேசான் காட்டுல இருந்து தப்பிச்ச மாதிரி?” என்று குரலை உயர்த்தினாள் கண்மணி.
தனது அறையில் இருந்த நாற்காலியில் அவனை அமர வைத்து அவனுக்கு தலை வாரத் தொடங்கினாள் கண்மணி.
“ பேருதான் பெரிய அசிஸ்ட்ண்ட் டைர்க்டர், கொஞ்சமாச்சும் ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் இருக்கா டா உனக்கு? நாளைக்கு முதல் வேலையாக முடிய வெட்டு.. தலைமேல பாரு காடு மண்டி கிடக்கு” என்று கண்மணி புகார்களை அடுக்கிக் கொண்டே அவனுக்கு தலை வாரி விட்டாள்.
“இப்போ பாரு .. எவ்வளோ அழகா இருக்க நீ!! என் கண்ணே பட்டிடும்” என்று அவன் தோளில் தட்டினாள் அவள். லேசாய் கண்கலங்கிவிட்டான் வெற்றி. அவன் பதின்ம வயதை கடந்தப்பின் , தன் அன்னைக் கூட இப்படி தலைவாரி விட்டதில்லை. தோழி என்பவள், இன்னொரு தாய்க்கு சமம் என்பது எவ்வளவு பெரிய உண்மை. வெற்றி அவன் போக்கில் சிந்தித்து கொண்டிருக்க அவனை உலுக்கி கொண்டிருந்தாள் கண்மணி.
“டேய் குரங்கு, என்ன கனவா? சரி சீக்கிரம் சொல்லு.. நான் எந்த தோடு போடட்டும் ? ஜிமிக்கி போடவா? இல்ல, இந்த மயில் தோடு போடவா? சொல்லுடா” என்று அவள் கேட்க மயில் வடிவில் இருந்ததை அவளிடம் கொடுத்தான்.
“ டைம் ஆகுது கண்ணு.. போலாமா?”
“ யெஸ் ..யெஸ் ..ரெடி” என்றவள் தனது கார் சாவியை வெற்றியிடம் கொடுத்தாள். அவன் முகத்தில் மென்னகை மலர்ந்தது. கண்மணி முதன்முதலில் வாங்கிய கார் அது. வெற்றிக்கு பிடித்த வண்ணத்தில் தேர்ந்தெடுத்து வாங்கினாள் அவள்.
“ஏன் டீ.. உனக்கு பிடிச்ச கலர்ல வாங்கலாம்ல ?” என்று அவன் கேட்கவும்,
“டேய் இது நம்ம கார்.. 50-50 சோ கலர் உனக்கு பிடிச்ச மாதிரி, நம்பர் எனக்கு பிடிச்ச மாதிரி” என்று கூறி கண் சிமிட்டினாள்.
சொன்னதுபோலவே அந்த காரை இருவரும் சமமாகத்தான் பயன்படுத்தினர்.
“ என்னடீ சாவியை என்கிட்ட கொடுக்குற?”
“ அய்யே புடவையை கட்டிகிட்டு நான் எப்படி கார் ஓட்டுறதாம்? இன்னைக்கு நீதான் ட்ரைவர்.. போ போ” என்று விரட்டினாள் அவள்.
“ஹும்கும்” என்று முணுமுணுத்தவாரே வெற்றி முன்னே நடக்க, கண்மணிக்கு ஃபோன் வந்தது. வெற்றியின் காதலி விஹாஷினி தான் அழைத்திருந்தாள். சரியாய் அதே நேரம் தன் புடவை, கால் கொலுசில் சிக்கிட சோபாவில் அமர்ந்து அதை சரி செய்தபடியே ஃபோனை எடுத்திருந்தாள் கண்மணி.
“விஷூ..இப்போத்தான் நாங்க கிளம்புறோம்..செம்ம டைமிங்க்ல ஃபோன் பண்ணுற நீ”
“ மணி எனக்கு உன்கிட்ட ஒரு உதவி வேணும்”
“சொல்லும்மா.”
“இல்ல, இந்த அவார்ட் ஃபங்க்ஷன் லைவ்வா டீவியில காட்டுவாங்க”
“ஆமா தெரியுமே..அதுக்கென்ன”
“ வீட்டுல எல்லாரும் அதை பார்ப்பாங்க.. வெற்றிப் பத்தி அவங்களுக்கு இப்போத்தான் கொஞ்சம் தெரியும்”
“சரி..நல்ல விஷயம்தானே! டீவியில அவனைக் காட்டி, அடுத்த வருஷம் வெற்றி அவனுடைய படத்துக்காகவே அவார்ட் வாங்குவான்னு சொல்லு”
“அதில்லை மணி.. இது வேற விஷயம்”