"நர்மதா... ஏன் இப்படி இருக்க, உன்னோட முகத்துல கல்யாணம் நடக்க போகுதுன்னு சந்தோஷமே இல்லையே..
நீ இன்னும் அந்த ரிஷப் ஐ மறக்கலையா..??"
தன் தோழி கேட்டதும் அதிர்ச்சியாக அவளை பார்த்தாள் நர்மதா..
"ஹே லூசு... என்ன உளர்ற..? நான் அந்த ரிஷப் ஐ திரும்ப பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்... நீ என்னடான்னா அவனை மறக்கலையான்னு கேக்கற..??"
"பின்ன நீ இப்படி இருந்தா எப்படி கேப்பாங்களாம்... காலேஜ் படிக்கும்போது அந்த ரிஷப் ஐ பார்த்து, பிடிச்சு, காதலிச்ச.. நீயே போய் உன்னோட காதலை அவன் கிட்ட சொன்ன... அவன் உன்னை உதாசீனப்படுத்தினான்... அதுக்கப்புறம் நீயும் அவனை விட்டு விலகிட்ட... அத்தோட அந்த ரிஷப் சேப்டர் முடிஞ்சிடுச்சு...
இப்போ நீயா தான் அம்மா, அப்பா விருப்பப்படி கல்யாணம் செஞ்சுக்கறதா அவங்கக்கிட்ட சொன்ன... அவங்களும் உன் கல்யாணத்தை முடிவுப் பண்ணிட்டாங்க... ஆனா இப்படி அதுல சந்தோஷம் இல்லாத மாதிரி இருந்தா எப்படி..?? நீயே சொல்லு..??"
"அதில்ல யமுனா.. அந்த ரிஷப் எப்போ என்னோட காதலை நிராகரிச்சானோ அப்பவே அவனை என்னோட லைஃப்ல இருந்து நான் தூக்கிப் போட்டுட்டேன்... ஆனா அவன் அப்போ பேசினதை தான் என்னால மறக்க முடியல...
நான் பணக்காரன்னு தானே என்னை காதலிக்கிற, இல்லன்னா என் மேல உனக்கு காதல் வந்திருக்குமா..?? இப்போ நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் பணக்காரன் இல்ல... அதனால நீ வேற ஒரு பணக்காரனை பிடிக்கிறது பெஸ்ட்ன்னு சொன்னான்..
அவன் சொன்ன மாதிரி... நான் வசதியான வீட்ல தான் வாழப்போறதா கட்டம் சொல்லுதுன்னு சொல்லி, அம்மா பணக்கார இடமா பார்த்திருக்காங்க... கடைசியில அவன் சொன்ன மாதிரி ஒரு பணக்காரனை பிடிச்சிட்டேனே... அதை நினைச்சுப் பார்த்தேன்.. அதான்.." என்று ஒரு தயக்கத்தோடு சொல்லி முடித்தாள்.
"ஹே யாருடி அந்த ரிஷப்..?? அவன் சொன்னா நீ பணத்துக்காக அலையறவன்னு ஆயிடுமா..?? இல்ல உன்னோட அம்மா, அப்பா தான் அப்படியா..?? மாச சம்பளத்தை வச்சு சிக்கனமா குடும்பம் நடத்தனவங்களுக்கு, தன்னோட பொண்ணு இதை விட கொஞ்சம் வசதியா வாழனும்னு எதிர்பார்க்கிறதுல என்னடி தப்பு..?? அதுக்காக பணக்கார இடமா அமையறவரைக்கும் காத்துக்கிட்டா இருந்தாங்க... அதுவா அமைஞ்சது, அதை அவங்க ஏத்துக்கிட்டாங்க.. அதை போய் அந்த ரிஷப் சொன்னது கூட கம்பேர் பண்ற... அவனெல்லாம ஒரு ஆளுன்னு அவன் சொன்னதை நினைச்சுக்கிட்டு இருக்க..."
"....."
"இங்க பாரு நர்மதா.. பழசையெல்லாம் மறந்துடு... இன்னும் 25 நாளில் உனக்கு கல்யாணம்... அதைப்பத்தி மட்டும் தான் நீ யோசிக்கனும்... கல்யாண பூரிப்பில் குண்டா ஆயிடுவாங்களாமே...?? நீயும் இந்த 25 நாளில் அப்படி ஆகனும் சரியா..??" என்று யமுனா சொன்னதும் நர்மதா சிரித்தாள்.
"ம்ம் சரி கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவ் எடுக்கப் போற..??"
"வேலையையே விடலாம்னு இருக்கேன் யமுனா.. நீ வேலைக்குப் போறது அவங்களுக்கு பிடிக்குமோ இல்லையோ.. அதனால வேலையை விட்டிடுன்னு அம்மா சொன்னாங்க.. ஆனா அதுக்கில்லன்னாலும், அவங்க வாழ்க்கை முறைக்கு நான் பழகனுமில்ல... அதுவரைக்குமாவது வீட்லேயே இருக்கலாம்னு நினைக்கிறேன்... அதான்.. நாளைக்கு பிரின்சிபல் கிட்ட லெட்டர் கொடுக்கலாம்னு இருக்கேன்..."
"அதுவும் சரி தான்... என்ன நீ இல்லாம ஸ்கூல்ல எனக்கு தான் ஒரு மாதிரி இருக்கும்... சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.."
"முடிஞ்சவரை கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்த ஸ்கூல்லயே வேலைப் பார்க்க ட்ரை பண்றேன் யமுனா... அதுவரைக்கும் நாம வெளிய மீட் பண்ணுவோம் ஓகே யா..??"
"ம்ம் ஓகே... சரி டைம் ஆச்சு கிளம்பலாமா..?? என்று யமுனா கேட்டதும், நர்மதாவும் சரி என்று தலையசைத்தாள்...
பின் இருவரும் மீண்டும் ஒரு முறை அம்மனை வழிபட்டனர்... என்னத்தான் தன் தோழி அந்த ரிஷப் ஐ மறந்துவிட்டதாக சொன்னாலும், அவனை மீண்டும் பார்க்கக் கூடாது என்று நினைப்பதிலேயே... நர்மதாவை அவன் எவ்வளவு பாதித்திருக்கிறான் என்று யமுனாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது...
அந்த ரிஷபின் தாக்கம் நர்மதாவின் மனதிலிருந்து நீங்க வேண்டுமானால்... அவளுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும்.. ஆனால் இந்த அவசர திருமணம், அந்த துஷ்யந்த் நர்மதாவை பார்க்க கூட வராதது... எல்லாம் யமுனாவிற்கு உறுத்தலாகவே இருந்தது... இவளின் உறுத்தல் படி எதுவும் நடக்காமல் தன் தோழியின் திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்று யமுனா அந்த அம்மனிடம் நன்றாக வேண்டிக் கொண்டாள்.
அந்த பெரிய கேட்டை வாட்ச்மேன் வந்து திறந்ததும், வீடு வாசல் வரை காரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, கழுத்தில் கட்டியிருந்த டையை கழட்டியப்படி காரில் இருந்து இறங்கினான் துஷ்யந்த்... அவனுக்கு 31 வயதாகிவிட்டது என்பதை பார்ப்பவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி உடற்பயிற்சியும், தியானமும் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்...
காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் அவன் நுழையும் போது, கோமதியும் விஜயலஷ்மியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருதார்கள்... இவன் வந்ததை அவர்கள் கவனிக்க...
"ரூம்க்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்ம்மா.." என்று சொல்லிக் கொண்டே மாடியிலிருக்கும் அவன் அறைக்குச் சென்றான் அவன்..
அறைக்குப் போனதும் அவன் உடைகளை களைந்து, குளித்துவிட்டு வந்தவன் ஃபார்மல் பேன்ட், ஷர்ட்க்கு மாறினான்... பின் ஒரு ட்ராவல் பேகை எடுத்தவன் இரண்டு நாளைக்கு தேவையான உடை, மற்றும் இதர பொருட்களை எடுத்துக் கொண்டு கீழிறங்கி வந்தான்...
கையில் பையோடு மகன் வருவதை கோமதி பார்த்ததுமே அவன் வேலை விஷயமாக ஊருக்குச் செல்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டார்... மகனிடம் இப்போதே திருமண விஷயத்தை தெரியப்படுத்திட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
கீழே இறங்கி வந்தவன் நேராக தன் அன்னையிடம் சென்றான்... அவன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே தான் நினைத்ததை அவனிடம் சொல்லிவிட்டார் அவர்...