(Reading time: 12 - 24 minutes)

மூங்கில் குழலானதே – 14 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

ண்ணங்கள்! மனிதனின் எண்ணங்கள் என்பது யாரின் கட்டுப்பாட்டிற்கும் அடங்காத குதிரைகள்! இந்த குதிரைகளின் வேகமும் இலக்கும் ஒரே போல பயணிப்பதில்லை.

ஒரு மனிதனுக்குள் உதயமாகும் எண்ணமென்பது அவனை மட்டுமே பாதிப்பதில்லை! சரியோ தவறோ அதன் தாக்கத்தை அவன் மட்டும் அனுபவிப்பதில்லை. இதனால்தான் யார் எந்த முடிவெடுப்பதாய் இருந்தாலும் அதிகம் சிந்திக்க வேண்டும்.

எனினும் நமது சிந்தனையை சரியென்றும் தவறென்றும் நிர்ணயிப்பது எது? கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் சரி தவறு என்பது தராசை போன்றது. தராசின் பாரம் போல, ஒரே எண்ணம் பலரால் ஆதரிக்கப்பட்டால் அதை சரியென்கிறோம்.

ஆனால் இது சரியானது தானா? நாம் அண்ணார்ந்து பார்க்கும் தலைவர்களில் பலர், அனேகர்களின் எண்ணங்களுக்கு எதிர்மாறான சிந்தனைகளை கொண்டவர்கள் தான்.! அனைவரும் சரியென்று சொல்லும் பாதையை ஆட்சேபித்து வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். எனில், சரியென்பதும் தவறென்பதும் நிலையில்லாமல் மாறக்கூடியவை தானே? சிந்திக்கிறேன் சகிதீபன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

 அடைமழை தரும் குளிரைக் கூட பொருட்படுத்தாமல், அபிநந்தன், சகிதீபன், விஷ்வானிகா மூவரும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து சாரதாவிற்கு தான் முதலில் கோபம் வந்தது.

எனினும் அருண் தாத்தாவின் பேச்சுக்கு கட்டுபட்டு அவர் ஆரத்தி எடுக்க முயன்றிட, அவரைத் தடுத்தான் சகிதீபன்.

“ மம்மி ஒன் நிமிட் !” என்று குறும்பான குரலில் அவன் தடுக்கவும்,

“வந்ததுமே ஆரம்பிச்சுட்டியா சகி?” என்றார் வேணுகோபால்.

“நோ டேடி! நான் வந்ததே ஆரம்பிக்கிறதுக்குத்தான் !” என்று பீடிகை போட்டான்.

“இவன் ஒரு ஜூனியர் கமல் ஹாசன்! இவன் என்ன பேசுறான்னு இவனுக்குத்தான் புரியும் போல” என்று போலியாய் அபி அலுத்துக் கொள்ளவும், அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் நந்திதா.

கையில் ஐஸ்க்ரீம், குரலில் மகிழ்ச்சி, பேச்சில் நக்கல்.. எங்கிருந்து வந்தானாம் இந்த புது அபிநந்தன்? எல்லாம் தன் நண்பனின் வரவுதான் என்று தன் கேள்விக்கு தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்.

“ மம்மி, குடும்பத்துல நாங்க மூனு பேரும் மட்டும் நல்லா இருந்தா போதுமா? எல்லாரும் தானே நல்லா இருக்கனும்? சோ, எல்லாருக்கும் திருஷ்ட்டி சுத்தி போடுங்க!”என்ற சகி , தனது தந்தை தாத்தா இருவரையும் தங்களது நிற்க வைத்தான். நந்திதாவை அபியோடு நிற்க வைக்கும்போது இருவரின் கைகளையும் இணைத்து வைத்து அர்த்தமுள்ள புன்னகையொன்றை உதிர்த்தான். கண்ணனைக் கண்ட அர்ஜுனன் போல பெரும் பலம் கிடைத்தவள் போல உணர்ந்தாள் நந்திதா. சாரதா அனைவருக்கும் ஆரத்தி எடுக்க, அதற்கு பின் அவருக்கு ஆரத்தி எடுத்தான் சகிதீபன். சொல்லி வைத்தாற்போல சகி வீட்டினுள் காலடி எடுத்து வைத்ததுமே வசந்தமும் மகிழ்ச்சியும் காலடி எடுத்து வைத்ததை அனைவராலும் உணர முடிந்தது. அனைவரின் பாசமிகு கேள்விகளுக்கும்  சகியும் விஷ்வானிகாவும் பதில் கூறி கொண்டிருக்க,

“ கார் பக்கத்துல தான் இருக்கு.. நான் எடுத்துட்டு வந்திடுறேன்” என்று அனைவரிடமும் பொதுவாக கூறினான் அபிநந்தன்.

“என்னங்க ஒரு நிமிஷம்!” என்று அவனை தடுத்தாள் நந்து.

“என்னம்மா ஏதாவது வேணுமா?” என்று அவன் அபி கனிவான குரலில் கேட்கவும், அதில் சிலிர்த்துக் கொண்டாலும், முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவனருகில் வந்தாள் நந்திதா.

“தலையை துவட்டிக்கோங்க.. இந்தாங்க குடை எடுத்துட்டு போங்க!” என்று துண்டையும் குடையையும் நீட்டினாள் நந்து. மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவன் பார்வையால் அவளை ஊடுருவியப்படியே ஈரகேசத்தை துடைத்தான்.

“ காதல் சடுகுடு குடு

கண்னே தொடு தொடு” என்ற பாடலை விசிலடித்தபடி இருவரையும் பார்த்தான் சகிதீபன். நண்பனின் குறும்பான பார்வையை கவனித்தவள், அவனை முறைத்துக்கொண்டே அறைக்குள் ஓடி விட்டாள்.

“ஏன்டா உனக்கு இந்த நம்பியார் வேலை ? “ என்று கடுப்பாகினான் அபி.

“ அண்ணா, வீட்டுல ரெண்டு சின்ன பசங்க இருக்கோம்ல!” என்று தன்னையும்  வினியையும் கைக்காட்டிய சகி,

“ சோ கொஞ்சம் அடக்கி வாசிங்க.. பாவம் நாங்க!” என்றான்.

“ஹும்கும் .. எனக்கு ஒரு நல்லதுகூட நடக்க விடமாட்டியே!” என்று மூத்தவன் மறுபடியும் சலித்துக் கொள்ள ,

“ அண்ணா என் மூலமாகத்தான் நந்து அண்ணி உங்க வைஃப் ஆனாங்க .. அதுவே பெரிய நல்லது என்றான் சகி. சட்டென அபியின் முகத்தில் புன்னகை படர்ந்தது.

“அந்த ஒரு காரணத்துக்காகவே காலம்பூரா உனக்கு நன்றி சொல்லுவேன்டா!” என்று கூறிய அபி காரை கொண்டு வருவதற்காக அங்கிருந்து செல்ல, ஆச்சர்யத்தின் உச்சியில் இருந்தான் சகிதீபன்.

“ என்ன இந்த அண்ணன் தமிழ் படம் க்லைமாக்ஸ்ல வர்ற வில்லன் மாதிரி டக்குனு திருந்திட்டான்! எங்கயோ உதைக்கிதே ! சீக்கிரமே ஒரு கூட்டனியை போடனும்டா சகி!” என்று அவனே சொல்லிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.