“கௌதம், தனிமையை போக்குறதுன்னா ஒன்னா சாப்பிட்டு, எந்நேரமும் கூடவே இருக்குறதுன்னு அர்த்தமா? வாழ்க்கை முழுக்க இவங்க நமக்கு மட்டும்தான்னு ஒரு பந்தம் வேணும்.குழந்தை வேணும்.. சந்தோஷம் வேணும்.. என்னை மட்டும் கல்யாணம் பண்ணிக்காதேன்னு சொல்லுறியே! அப்போ நீ ஏன்டா விஷ்வானிகாவை லவ் பண்ண?” என்றுதனது முதல் அம்பை பாய்ச்சினாள் சதீரஞ்சனி.
“விஷ்வானிகா.. விஷ்வானிகா!!” அவள் பெயரே கௌதமின் மண்டைக்குள் எதிரொலித்தது, அவளும் இப்படித்தான் யாரோ ஒருவனின் பெயரை சொல்லி அவனை காதலிப்பதாய் கூறினாள். இத்தனை நாட்கள் இது தெரியாமல் அவளை பின் தொடர்ந்தோமே என்ற கோபம்தான் கௌதமிற்கு வந்தது.
ஆனால் இவள் என்னவள்.. அவளது எண்ணத்தை நிச்சயம் மாற்றவேண்டும் என்றெல்லாம் அவனுக்கு தோணவே இல்லை!
“ அ..அது முடிஞ்சி போன விஷயம்..!” என்றான் கௌதம் தடுமாற்றமாய்.
“ இருக்கட்டும் ..ஆனா அது உண்மையில் நடந்த விஷயம்தானே ? நீ அவளை காதலிக்கிறதா என்கிட்ட சொன்னியே தவிர, காதலிக்கவான்னு என்கிட்ட கேட்டியா? என்னத்தான் பெஸ்ட் ப்ரண்டா இருந்தாலும்,காதல்ன்னு வந்துட்டா ஒரு இடைவெளி இருக்குல? இப்போ நானும் அதையே பண்ணினா எதுக்கு இவ்வளவு கோபம்?”. சட்டென தணிந்த குரலில்பதில் சொன்னான் கௌதம்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ இல்ல அம்மு… நீ திடீர்னு கல்யாணம் அது இதுன்னு சொன்னதும் ஒரு மாதிரி பயம் வந்துருச்சு!”
“ என் கல்யாணத்துல உனக்கு என்னடா பயம்?”
“நாம பிரிஞ்சிடுவோமோ?நம்ம நட்பு இனிமேதொடராதோ..நீ என்னை விட்டு தூரம் போயிடுவியோன்னு பதறுது டீ..உனக்கு இது புரியாது!” என்றான் சோகமாய். அவனது இந்த வார்த்தைக்காக காத்திருந்தவள் போல தன் மனதில் இருந்ததை கொட்டத் தொடங்கினாள் சதீரஞ்சனி.
“ உனக்கு மட்டும்தான் ஃபீலிங்க்ஸ் இருக்கா?உனக்கு மட்டும்தான் கஷ்டமா இருக்கா? மூணு மாசம் மலேசியாவில்போயி உட்கார்ந்துகிட்டியே எனக்கு எப்படி இருக்கும்?”
“ அம்மு நீதானே…”
“ஆமா நான்தான் போன்னு சொன்னேன்..ஆனா அப்படி சொல்லுறதுக்கான காரணத்தை யாருடா உருவாக்கி வெச்சது? உன் லவ் வந்திச்சு, நீ ப்ரொபோஸ் பண்ணின, அது பெயில் ஆச்சு, நீ உடைஞ்சு போன, சோ உன்னை அனுப்பி வெச்சேன்.
பூமி சூரியனை சுத்துறமாதிரி என் மனசு உன்னைத்தான் சுத்தி வந்திச்சு..சோ உனக்காக போன்னு சொன்னேன்.. பட் பதிலுக்கு நீ எனக்கு என்ன பண்ணின கௌதம்?
ஆஃபிஸ்ஸை கவனிக்க முடியுமான்னு கேட்டியே.. நான் இல்லாமல் உன்னால இருக்க முடியாதே மச்சின்னு ஒரு வார்த்தை சொன்னியா?
அலுத்து போச்சு கௌதம் எனக்கு! உனக்கு ப்ரண்டா உனக்கு என்ன வேணுமோனு யோசிச்சு பண்ணி.. நான் டயர்ட் ஆகிட்டேன்.. எனக்குன்னு யார் இருக்காங்க..என் மனசுல என்ன இருக்குனு யாரு யோசிச்சீங்க?”
“..”
“ ரஞ்சனி நான் இல்லாமல் இருக்க மாட்டளே .. நான் இல்லாமல் சரியா சாப்பிடுறாளோ, தூங்குறாளோ.. ஏதாச்சும் யோசிச்சியா?
வாழ்க்கையில நட்பை விட அழகான உறவு இல்லைத்தான்..ஆனா கடைசிவரைக்கும் என் நண்பனாக தான் இருக்கனும்னு நீ நினைக்கிறியா கௌதம்?” என்று ஊடுருவும் பார்வையுடன் கேட்டாள் சதீரஞ்சனி.
“எனக்கு புரியலடீ”என்றான் கௌதம்.
“புரியும்..நான் சொன்னதை நிதானமா யோசிச்சா எல்லாமே புரியும்!” என்று அவள் கூறவும் சட்டென எழுந்தவன், “ எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
நிம்மதி பெருமூச்சு விட்டாள் சதீரஞ்சனி. தனிமை! அதுவேபலநேரங்களில் சிறந்த மருந்து.
யோசிக்கட்டும்! முதலில், ஐ லவ் யூ என்று சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்தாள் அவள். ஆனால் அப்படி சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது அவள் அறிந்ததே.
பெரிய ஜோக் கேட்டது போல சிரிப்பான் அவன்.இல்லையெனில், எனக்கு அப்படி தோணலையே மச்சி என்று முடித்திருப்பான். இரண்டில் அவன் எதை செய்திருந்தாலும் அதைவிட பெரிய தண்டனை ஒன்று ரஞ்சனியின் காதலுக்கு உண்டா என்ன?
இப்போதும் அவனுக்கு நெருக்கடி கொடுக்க எண்ணி அவள் அப்படி சொல்லவில்லை. தான் திருமணம் செய்து கொள்வதாய் சொல்லும்போது கௌதம் இயல்பாக இருந்தால்,தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனை விட்டு விலகிவிடலாம் என்று நினைத்தாள்.
மாறாக அவனுக்கு கோபம் வந்தால், அவனுக்குள் இருக்கும் காதலை உணர்த்திட வேண்டும் என்று நினைத்தாள் ரஞ்சனி. எப்படியோ ரஞ்சனியின் கலகம் நன்மையில் முடிந்தால் சரி!