12. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி
அவந்திகா நிரேஷின் வீட்டிற்கு வந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன.அவளது அனுமதியோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன்,அவன் நினைத்ததை அவளுக்கு தெரிந்தும்,தெரியாமலும் முடித்துக்கொண்டான்.
அவனது எண்ணம் எல்லாம் அவனது அவந்திகா..ஏதாவது ஒரு ரூபத்தில் அவனோடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே..மற்றபடி அவளை எதற்காகவும் வற்புறுத்தவும்,காயப்படுத்தவும் அவன் தயாராயில்லை.
அவளை காயப்படுத்தினால்,அவளை விட தான் தான் அதிகமாய் காயப்பட்டுப்போவோம் என்பதை அறிவான்.
இப்படியெல்லாம் நினைத்தாலும்,அவள் தன்னுடன் இந்த காரணத்திற்காகவாவது இருந்துவிட மாட்டாளா என்ற எண்ணத்துடன்,சில தில்லுமுல்லு வேலைகளையும் செய்திருந்தான்.
அவந்திகா தன்னுடன் தான் இருக்கிறாள் என்பதை மறைத்து வைக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை.
முதல் நாளே அவள் தன்னுடன் தான் இருக்கிறாள் என்பதை,அவளது வீட்டில் உள்ள அனைவருக்குமே சொல்லிவிட்டான்.அதிலையே அவர்கள் நிம்மதி அடைந்துவிட்டனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
அவர்களுக்கு நிரேஷை பற்றி நன்றாக தெரியும்.மகள் சென்ற இடம் பாதுகாப்பானது தான் என்ற நிம்மதியில்,பாண்டியன் நிம்மதியாகத்தான் இருந்தார்.
அவனுக்கு இன்று ஒரு பாடலுக்கான ஷூட்டிங் இருப்பதால் அவளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
பாடலுக்கான ரிகர்சல் எல்லாம் முடிந்த பின்னர்,அதை காட்சிப்படுத்துவதற்கான வேலையில் நிரேஷும் அவனது குழுவும் இருக்க,அவந்திகா ஓரமாக அமர்ந்து அனைத்தையும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
பாடலுக்கான மூவ்மென்ட் கொஞ்சம் கடிமானதாகவே இருக்க,கதையின் நாயகி சற்று திணறித்தான் போனாள்.
அவந்திகா முன்வந்து,”இப்படி பண்ணுங்க..ஈசியா இருக்கும்”என்று சொல்லித்தந்தும்,ஏனோ அந்த நடிகை அதை கவனத்தில் கொள்ளவில்லை.
அதற்கு மேல் வற்புறுத்தும் மனம் இல்லாமல்,இவள் நகர்ந்துவிட,கதையின் நாயகி..நிரேஷ் சொன்னதை செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தாள்.
அவளுக்கு இந்தப்படம் தான் முதல் படம் என்பதால்,அவள் தன் திறமையை வெளிக்காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.
அத்தனை பேரின் முன்பு,”எனக்கு இந்த ஸ்டேப் வரலை”என்று சொல்ல அவளால் முடியவில்லை.
இறுதியில் காலை சுழற்றும் போது.,அவள் தடுமாறி விழுந்துவிட..அன்றைய ஷூட்டிங் அத்தோடு முடிந்துவிட்டது.
அந்தப்படத்தின் இயக்குனர் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல்,நிரேஷிடம்”ரொம்ப நாளா உன்னோட கதாநாயகி கண்லையே படலை..மறுபடியும் எதுவும்..எதுவும்”என்று இரட்டை அர்த்தத்தில் அவர் தவறாக பேசிக்கொண்டு போக...அவன் மறுத்துப்பேசாமல் நகர்ந்துவிட்டான்..
இவனுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்ல வேண்டுமா என்ற திமிர் அதில் தெரிந்தது.
வீட்டிற்கு செல்லும் போது,காரில் அவன் அருகில் அமர்ந்திருந்தவள்,”அந்தப்பொண்ணுக்கு முடியலைன்னு உங்களுக்கு தெரியும் தானே மாஸ்டர்.ஹெல்ப் பண்ணியிருக்கலாமில்ல”என்றாள்.
“அதை அந்தப் பொண்ணு சொல்லியிருக்கலாமே..”
“ஆமாம்..ஆனாலும் இன்னைக்கு எவ்வளவு பணம் லாஸ்..ப்ரொடியூசர் கத்தப் போறார்”
“அதெல்லாம் அந்தப் பொண்ணு சமாளிச்சிக்குவா..ஏற்கனவே சமாளிச்சு தான் படத்துக்கு சான்சே வாங்கினா”என்று அவளைப் பார்க்காமலையே..சொல்ல..அதற்குப் பின் அவள் அந்தப் பேச்சைப் பற்றி வாயை திறக்கவேயில்லை.
அவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதன் அடிப்படை காரணமும் இதுபோல ஒன்று தான்.
அவளது அமைதியை கலைக்கும் விதமாய்,”உனக்கு நந்தனான்னு யாரையாவது தெரியுமா அவந்தி”என்றான்.
“வர்ஷூவோட அக்காவையா சொல்றீங்க”எனவும்..
“ஆமாம்.அவங்களே தான்.உன்கிட்ட முன்னவே சொல்லியிருக்கணும்.நான் அதை பெருசா நினைக்கலை”என்றவன்,திருமண மண்டபத்தில் நடந்த அத்தனையையும்,காணொளி காட்சி மூலமாக காட்ட..அவள் அதிர்ந்து தான் போய்விட்டாள்.
“என்ன நடக்குது அங்க”அதிர்ந்து போய் வினவியவளிடம்..
“எனக்குமே தெரியலை.அந்த நந்தனாவுக்காக தான்,உன்னை காதலிக்கற மாதிரி யஸ்வந்த் நடிச்சிருக்கணும் என்பது என்னோட கணிப்பு.அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மதம்”என்றான்.