04. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ
சாரி ஃப்ரண்ட்ஸ்.. போனமுறை வர்தா புயல் காரணமாய் அப்டேட் கொடுக்க முடியல... தொடர்ந்து நெட்வொர்க் பிரச்சனையாலும் அதுக்கப்புறமும் கூட அந்த அப்டேட் ஐ என்னால் ஷேர் பண்ண முடியல... போன அப்டேட்க்கும் சேர்த்து 6 பக்கம் கொடுத்திருக்கேன்... அதுக்கும் மேல கொடுக்க ஆசை தான்... ஆனால் அதற்கான நேரம் இல்லை... அதனால் பொறுத்துக் கொள்ளவும்... நன்றி.
Advance happy new year wishes in all UNES readers
மாலையில் யமுனாவோடும், இளங்கோவோடும் சேர்ந்து இருந்த நேரம் சந்தோஷப்பட்ட மனதில் இப்போது வீட்டுக்கு வந்ததும் திரும்ப குழப்பங்கள் வந்து சூழ்ந்துக் கொண்டது போல் இருந்தது நர்மதாவிற்கு...
வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே இவளின் அன்னையும், கல்லூரியில் படிக்கும் இவள் சகோதரனும் நடக்கப் போகும் திருமணம் குறித்தே பேசிக் கொண்டிருந்தனர்... ஏனோ அதில் இவளால் இயல்பாய் கலந்துக் கொள்ள முடியவில்லை... மதியம் அப்பா போனில் இந்த விஷயத்தை கூறிய போதே அவளின் சந்தோஷ மனநிலை காணாமல் போனது...
பிறகு யமுனாவோடு கோவிலுக்குச் சென்றது, இளங்கோவை பார்த்து பேசியது, என்று இயல்பு நிலைக்கு திரும்பவந்திருந்தாள்... ஆனால் திரும்ப திருமணம் பற்றி பேசியதும், வீட்டுக்கு ஏன் தான் வந்தோம் என்று தான் அவளுக்கு தோன்றியது...
இதில் இவளின் அப்பா மட்டும் எதிலும் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்... என்னாச்சுன்னு கேக்கனும், என்று தோன்றினாலும், அவரும் இந்த கல்யாணத்தைப் பற்றி ஏதாவது சொல்வாரோ, என்று அமைதியாகிவிட்டாள்... ஒரு வழியாக இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்கு வந்ததும் தான் சீராக மூச்சு விடவே முடிந்தது...
ஆனால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்...?? திருமணம் என்றால் இயல்பாய் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்கள், எனக்கு ஏன் ஏற்படவில்லை...?? யமுனா சொன்னதுபோல, ஒரு சிறு விஷயத்தை கூட இளங்கோவிடம் உற்சாகமாக சொல்லத் தோன்றும் எனக்கு... என் வாழ்வில் முக்கிய நிகழ்வான இந்த திருமணம் பற்றி ஏன் சொல்ல தோன்றவில்லை...??
பழசையெல்லாம் மறந்துவிட்டு, அம்மா, அப்பாக்காக கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நான் தானே முடிவெடுத்தேன்... ஒருவேளை மனசு மாற அவகாசம் இல்லாமல் சீக்கிரம் திருமண தேதி குறித்ததால் இப்படி குழம்பிக் கொள்கிறேனோ..??
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
மனசு மாறனும்னா..?? அப்போ அந்த ரிஷப் ஐ தான் மனசு இன்னும் நினைச்சிக்கிட்டு இருக்கோ..?? இல்லை அப்படியெல்லாம் இல்ல.. அந்த ரிஷப் எப்போ என்னை உதாசீனப்படுத்தினானோ... அப்பவே அவன் என்னோட மனசை விட்டுப் போயிட்டான்...
ஆனால் அந்த உதாசீனத்திற்கு முன் அவன் பார்த்த பார்வையில் தெரிந்த காதல்... அதை உன்னால் மறக்க முடிந்ததா..?? அவன் அப்படி பேசியதற்கு கூட ஏதோ ஒரு காரணம் இருந்திருக்குமோ..?? என்று எதிர்ப்பார்த்திருக்கிறாயே..?? திரும்ப ரிஷப் ஐ பார்க்கக் கூடாது என்று நினைப்பது அவன் மேல் உள்ள கோபத்தில் மட்டும் தானா..?? அதையும் மீறி அவன் மேல் உள்ள காதல், அவன் முன்னிலையில் உன்னை பலகீனமாக்கிவிடும் என்பதாலும் தானே...?? இப்படி இருக்கும்போது உன்னால் இன்னொருவனை எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும்..??
இல்லை நான் பலகீனமானவள் இல்லை... யமுனா சொன்னது போல் அந்த ரிஷப் சாப்டர் முடிஞ்சுப்போச்சு... அவன் பேசியது ஒன்றும் சாதாரணமானது இல்லை... என்னையும், என் காதலையும் அவன் கொச்சைப் படுத்திவிட்டான்... அவன் மீது இன்னும் எனக்கு காதலெல்லாம் ஒன்றும் இல்லை...
இப்படியே குழம்பிக்கிட்டு இருக்கக் கூடாது நர்மதா... நீ உனக்காக வாழனும்... உன்னோட அப்பா, அம்மாக்காக வாழனும்... இந்த கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்கும் மனநிலைக்கு நீ வரனும்... கல்யாணம் வாழ்க்கையில முக்கியமான நிகழ்வு... அதை சந்தோஷத்தோட எதிர்கொள்ளனும்... உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு... அதுதான் உனக்கும், உன்னை கல்யாணம் செய்துக் கொள்ள போறவருக்கும் நல்லது... என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டாள்...
மனசுக்குள் ஒரு தெளிவு பிறந்தது... இருந்தும் இந்த சிந்தனையில் இருந்து மனதை திசை திருப்ப, இளங்கோ கொடுத்தனுப்பிய புத்தகத்தை எடுத்தாள்.... இந்த முறை அந்த கதாசரியர் எழுதியிருந்தது ஒரு இனிமையான காதல் கதை... ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இனிமையாகவே இருந்தது...
எப்படித்தான் இப்படியெல்லாம் அவரால் எழுத முடிகிறதோ..?? என்று வியந்தாள்...
இப்படி இனிமையான காதல் கதை எழுதும் ஆசிரியர்... சோகமான கதைகளையும் எழுதியிருக்கிறார்... சில சமயம் குடும்பக் கதை... சில சமயம் பெண்ணியம் பற்றி... என்று அவருடைய கதைகள் மாறுபட்டே இருக்கும்..
கதையை படித்து முடித்ததும் மனமும் இலகுவானது... ரிஷப், இந்த திருமணம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த காதல் கதை தந்த இனிமையிலேயே நர்மதா உறங்கியும் போனாள்...
ஓரளவுக்கு இந்த திருமணத்தை சந்தோஷமாக எதிர்கொள்ளும் மனநிலைக்கு அவள் மாற நினைக்கும் இந்த நேரத்தில், வெகுவிரைவில் யாரை பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ..?? அந்த ரிஷப் ஐ சந்திக்கப் போகிறாளே.. அப்போதும் இந்த மனநிலையிலேயே அவளால் இருக்க முடியுமா..??
அழகான அந்த காலைப் பொழுது பொதுவாக எல்லோருக்கும் பரபரப்பான காலைப் பொழுதாக இருக்க... எப்போதும் போல 6 மணி அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்துவிடும் கங்கா, இன்று அலாரம் இரண்டு முறை அடித்தும் கூட, விழித்திருந்த போதும் எழுந்துக் கொள்ள மனம் இல்லாமல் அப்படியே படுத்துக் கொண்டிருந்தாள்...
உடல்நலத்தில் எந்த குறையும் இல்லையென்றாலும், சில சமயங்களில் மனச்சோர்வு கூட, உடலை இயக்க மறுக்கிறது... கங்காவும் அந்த நிலையில் தான் கண்களை மூடியபடி படுத்திருந்தாள்...
ஆனால் கடந்த ஆறு வருடங்களாகவே, இந்த மனம் சோர்வடைந்து தான் இருக்கிறது... ஆனால் அந்த சோர்வை விடாமல் இவளும் விரட்டியடித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.... இன்று மட்டும் ஏனோ அதைக்கூட செய்ய இயலாமல் படுத்திருந்தாள்...
இந்த முடிவு தான் அனைவருக்கும் நல்லது என்று தீர்மானித்து தான் துஷ்யந்திடம் அவன் திருமணம்பற்றி பேசிவிட்டு வந்தாள்... ஆனால் இந்த முடிவால் அவன் பட்ட வேதனையை விட, இவளுக்கு தானே அதிக வேதனை... அவனாவது வருத்தத்தை வாய்விட்டு சொல்ல முடியவில்லையென்றாலும், முகத்திலாவது அதை காண்பித்தான்... ஆனால் இவளால் அதைக்கூட செய்ய இயலாதே...
மனதில் ஏற்பட்ட வருத்தத்தை மறைத்து, இந்த திருமணத்தால், எனக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை, என்பதாக அவனிடம் காட்டிக் கொள்ள வேண்டும்... ஆனால் இதெல்லாம் அவசியம் தானா..?? துஷ்யந்தையும் வேதனைக்குள்ளாக்கி, நானும் வேதனைப்பட்டு... இப்படியெல்லாம் எதற்காக செய்ய வேண்டும்...??
"என் பிள்ளையை சந்தோஷமா வாழ விடு..." கோமதி அம்மாவின் குரல் திடிரென்று மனசுக்குள் ஒலிக்க, பதறியபடி எழுந்தாள்...
"இல்லை இப்படியெல்லாம் உன்னோட மனசை அலைபாய விடாத கங்கா... இப்போ துஷ்யந்த் திருமணத்திற்கு சம்மதித்தது தான் எல்லோருக்கும் நல்லது... இந்த முடிவால் நீ வருத்தப்பட்றதா அவருக்கு தெரியவே கூடாது... அப்படி மட்டும் நடந்தா... கண்டிப்பா அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டாரு..." என்ற முடிவோடு கட்டிலை விட்டு எழுந்திருப்பதற்காக கலைந்திருந்த அந்த நீண்ட கூந்தலை கொண்டைப் போடும் போதே.. அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது...
அந்த குறுஞ்செய்தி சிம் கம்பெனியிலிருந்து வந்த அவசியமில்லாத ஒன்று தான்... ஆனால் அதன் கீழே நேற்று மாலை வந்திருந்த துஷ்யந்தனின் குறுஞ்செய்தியும் கண்ணில்பட்டது... இரண்டு நாட்களுக்கு முன் அவ்வளவு பேசிவிட்டு வந்திருந்த போதும்... டெல்லிக்கு செல்வதையும், மீட்டிங்கில் கலந்துக் கொள்வதையும் குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தான்...
ஆனால் அவனுக்கு போன் செய்யலாமா..?? வேண்டாமா..?? என்பது தான் இவளின் குழப்பம்... பார்க்காமல், பேசாமல் இருப்பது தான் நல்லது என்று அவனிடம் சொல்லிவிட்டு வந்து, இப்போது அவனுக்கு போன் செய்தால், அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்... இப்போது தான் அவன் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான்.. திரும்பவும் அவன் மனசு மாற இவளே ஒரு காரணமாகி விடக் கூடாதே..??
ஆனால் ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்வதில் தவறேதும் இருக்கப் போவதில்லையே..?? அதனால் போன் செய்தால் என்ன..?? குழப்பத்தோடு படுக்கையை விட்டு எழுந்த அவள் அறையை விட்டு வெளியே போகவும், கையில் காபியோடு வாணி அந்த அறை வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது...