கலா சொல்வதும் சரிதான்... அந்த காரணங்களால் தான் கங்காவும் எந்த விசேஷத்திற்கும் செல்ல விரும்பமாட்டாள்... வீணாக சிலர் இவளைப் பற்றி ஆராயவோ... இல்லை ஆராய்ச்சி பார்வை பார்க்கவோ கங்கா விரும்புவதில்லை... அதனால் தான் சுமதி போன்று சில பேர் அன்பாக அழைத்தாலும், அதை இவள் தட்டிக் கழித்துவிடுவாள்...
ஆனால் இன்று சம்பவத்தால் கங்காவிற்கு அவளின் நண்பன் ஞாபகம் வந்தது... இளங்கோ புதிதாக பதிப்பகம் ஆரம்பித்த போது... கங்கா தான் முதலில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டான்...
அவனுடைய தந்தை, அண்ணன், அண்ணி, சில உறவினர்கள் எல்லோரும் வந்திருக்க, இவளை விளக்கேற்ற சொன்ன போது இவளுக்கே ஒருமாதிரி இருந்தது... என்னத்தான் இளங்கோவின் குடும்பத்தாருக்கு இவளை ஏற்கனவே தெரிந்திருந்தாலும்... இதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ..?? என்று தவித்தபோது இளங்கோவின் தந்தையே " அதான் இளங்கோ சொல்றானே.. விளக்கேத்தி பூஜை பண்ணும்மா.." என்றார்..
கடைசியில் இளங்கோவின் பிடிவாதம் தான் ஜெயித்தது... இப்போது அந்த பதிப்பகம் தொடங்கி 3 வருஷம் ஆகிவிட்டது... இளங்கோ போலவே, அவனின் குடும்பத்தாரும் இவளிடம் அன்பாகவே பழகுவார்கள்... இதுவரையிலும் இவளைப் பற்றி தோண்டி துருவி எதையும் இவளிடம் கேட்டதில்லை... அதுவும் இளங்கோவின் தந்தை இவள் மேல் அதிக அன்பு வைத்திருப்பார்... அடிக்கடி இளங்கோவோடு ஊருக்கு வாயேன்ம்மா.. என்று அழைப்பார்.. இவள் தான் அவர்களின் உறவுக்காரர்கள் இவளைப் பற்றி கேட்டு, அவர்கள் பதில் சொல்ல முடியாமல் சங்கடப்படக் கூடாதே.. என்று அங்கு செல்ல விரும்பமாட்டாள்... இரண்டு முறை மட்டும் அவர்களின் திருப்திக்காக சென்றிருக்கிறாள்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
முன்பெல்லாம் வெளியுலகை சந்திக்கவே இவளுக்கு தயக்கமாக இருக்கும்... ஊரார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவே சங்கடமாக இருக்கும்... கங்கா என்று அந்த புனித நதியின் பெயரை இவளின் தாய், தந்தையர் வைத்திருக்கின்றனர்... ஆனால் அந்த புனிதம் இவளிடம் இருக்கிறதா..?? என்ற கேள்வி இவளுக்கே தோன்றியிருக்கிறது..
இல்லை நான் புனிதமானவள் தான்..?? அடுத்தவர் என்ன நினைத்தால் என்ன..?? என்னைப் பற்றி எனக்கு தெரியும்... யாருக்கும் என்னைப் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று யோசிக்க வைத்ததும், மற்றவர்கள் முன் இவளை நிமிர வைத்ததுக்கும் காரணம்.. வாணி, இளங்கோ, அவன் குடும்பத்தார், இதோ இந்த ரம்யா, சுமதி... அப்புறம் துஷ்யந்த்... இவர்களுக்கெல்லாம் முக்கியப் பங்கு இருக்கிறது... வாணியை தவிர, மற்றவர்களுக்கு இவளைப் பற்றி முழு விவரம் தெரியாது... இருந்தும் இவள் தவறானவளாக இருக்கமாட்டாள்... என்ற நம்பிக்கையை இவள் மீது வைத்திருக்கின்றனர்... அன்புக் காட்டுகின்றனர்... அதுதான் இன்றுவரை இவளை தைரியமாக நடமாட வைத்துக் கொண்டு இருக்கிறது...
ஏதேதோ சிந்தனையில் இவள் உழன்றுக் கொண்டிருக்க... கடிகாரத்தில் 10 மணி ஆனதற்கான அறிகுறியாய் மணி அடிக்க... அப்போது தான் துஷ்யந்தின் மீட்டிங் பற்றி இவளுக்கு ஞாபகம் வந்தது... அவனோடு அலைபேசியில் பேசலாமா..?? வேண்டாமா..?? என்ற குழப்பத்தோடு இவள் குழம்பிக் கொண்டிருக்க... அங்கு துஷ்யந்தோ கண்டிப்பாக கங்கா போன் செய்வாள் என்ற நம்பிக்கையோடு அலைபேசியை பார்த்தப்படியே உட்கார்ந்திருந்தான்.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}