“இங்க என்னதான் நடக்குது, சஞ்சு? ரெண்டு பேருமே ஒன்னுமே சொல்லமாட்டீங்கிறீங்க” இப்போது கோபம் சரயூவின் முகத்திலும் குரலிலும் குடியேறியிருந்தது… விளைவாக அவள் பிடித்திருந்த மைத்ரீயின் கையை உதறினாள்.
‘ஏதாவது செய் ஜெய்’ என்று கண்களால் இறைஞ்சினாள் மைத்ரீ.
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் தனக்கும் ஆபத்து என்றுணர்ந்த ஜெய் ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக பேச ஆரம்பித்தான்.
“இந்த பிரச்சனைக்கு எங்கிட்ட ஒரு முடிவிருக்கு…” என்று நிறுத்திய ஜெய் இரு பெண்களின் முகத்தையும் பார்த்தான். இருவரும் ‘என்ன?’ என்பது போல் அவனை பார்த்தனர். இதுவரை இவர்கனை கவனித்தபடி அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த ராகுலும் ‘எப்படி ரெண்டு பேரையும் சமாளிக்கப் போறான்?’ என்று ஆர்வமானான்.
“அது என்னன்னா… மைத்ரீ இங்க வரும்போதெல்லாம் நம்மகிட்ட கேட்ட மாதிரி.. இன்னைக்கு நாம ஸ்கேரி ஹௌஸ் (Scary house) போறோம்” சரயூ ஏதோ சொல்ல வரவும் அவளை கையமர்த்தி தொடர்ந்தான், “சரூ! நான் இன்னும் முடிக்கலை.. உனக்கு அது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் ஆனால் நீ ஸ்கேரி ஹௌஸ் வந்தாதான், மைத்ரீ, நந்தி விஷயத்தை உனக்கு சொல்லுவா”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“இதை எப்படி நான் நம்புறது? இப்பவே நந்தி பற்றி மைத்ரீ சொல்லலை… நாம ஸ்கேரி ஹௌஸ் போயிட்ட வந்தப்புறம் மைத்ரீ என்னை ஏமாற்றிட்டா?”
“உனக்கு அந்த சந்தேகமே வேணா சரூ! மைதி சொல்லலைனாலும் நானே அதை உங்கிட்ட சொல்லிடறேன். டீல்?” என்றபடி தன் வலது கை பெருவிரலை உயர்த்தினான்.
“நாம ஸ்கேரி ஹௌஸ் போலாமா?” என்று இந்த மாலிற்கு வரும்போதெல்லாம கேட்பாள் மைத்ரீ. மைத்ரீக்கு அப்படி என்ன தான் அங்கிருக்குமென தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆனால் சரயூக்கு ஸ்கேரி ஹௌஸிலிருந்து வெளி வரும் அவசரத்தில் எல்லோரும் பயத்தில் கூவிக்கொண்டே கீழே விழுவதைக் கண்டபோதெல்லாம் ‘உள்ளே போகவே கூடாது’ என்று தோன்றியது. ஆனால் மைத்ரீயின் ஆசையை தடுக்க விரும்பாதவள் “நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.. நான் இங்கேயே வெய்ட் பண்றேன்” என்பாள். மைத்ரீக்கு அது சரிபடவில்லை, “ஸ்கேரி ஹௌஸ் போறவங்க எல்லாருமே கூட்டமா போறாங்க… அதில் த்ரில் இருக்கும். ம்ஹீம்…ரெண்டே பேர் போனா நல்லாயிருக்காது” என்று விடுவாள். சஞ்சய் மட்டும், “ஒரு நாள், நாம மூன்று பேரும் சேர்ந்து ஸ்கேரி ஹௌஸ் போக தான் போறோம்” என்று சொல்லுவான்.
இன்று அதற்கான நேரம் வந்தது. மைத்ரீக்கு, சஞ்சய் மற்றும் ராகுலின் மேலிருந்த கோபம் குறையாமலிருக்கவும்… அவள், வெகு நாட்களாக ஆசைப்பட்டதை செய்தால் அவளுடைய கோபம் குறையுமென்பதை அறிந்த நண்பன் அதை நிறைவேற்ற முடிவெடுத்தான். நந்தியைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் சரயூவும் இதற்கு ஒப்புக்கொள்வாள் என்ற அவனின் கனிப்பும் பலித்தது. மைத்ரீக்கும் சரயூவிடம் நந்தியைப் பற்றிய விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் தடையேதும் இருக்கவில்லை. இருவரும் ஜெய்யின் ஒப்பந்தத்தை ஏற்றனர்.
தங்களின் வலது கை பெருவிரலை உயர்த்தியவாறு மைத்ரீயும் சரயூவும், ஒருசேர.. “டீல்.. டீல்” என்றனர்.
சஞ்சயின் சாமர்த்தியத்தை மனதில் மெச்சினான் ராகுல். ‘சரயூவை சமாளிக்கிறதே கஷ்டம்… இவன் ரெண்டு பெண்களையும் இப்படி சுலபமா சமாளிச்சிட்டானே!’ என்றெண்ணியபடி அமர்ந்திருந்த ராகுலை சஞ்சயின் குரல் கலைத்தது.
“என்ன பாஸ்! கனவெல்லாம் பலமாயிருக்கு.. மைத்ரீ டிக்கெட் வாங்குறேன்னு சரயூவை இழுத்துட்டுப் போயிட்டாள்.. நாமளும் போகனும் இல்லைனா புதுசா வேறேதாவது பூதம் கிளம்பிடும்”
“அய்யய்யோ… இன்னொரு ரௌண்டா? நான் தாங்கமாட்டேன்.. வாங்க போகலாம்” இருவரும் ஸ்கேரி ஹௌஸ் இருந்த கடைசி தளத்திற்கு சென்றனர்.
நுழைவுச்சீட்டுகளை வாங்கிய பெண்கள், இவர்களுக்காக காத்திருந்த நேரத்தில் பெருங்கூச்சலிட்டபடி ஸ்கேரி ஹௌஸிலிருந்து வெளி வந்த கூட்டமொன்றைக் கண்ட சரயூவின் பயம் அதிகரித்தது. தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த ஒரு பெண்ணாக எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் சரயூவால் இருட்டோடு கலந்த அமானுஷ்யம் என்றால் மட்டும் எப்போதுமே ஒரு தடுமாற்றம். நந்தியைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த இருட்டறைக்குள் செல்ல ஒப்புகொண்டாள். மனம் இப்போது முரண்டு பிடிக்கவும், தன்னை சமனப்படுத்த தனிமை தேவைபட்டது. கஷ்டபட்டு முகத்தை சாதரணமாக வைத்துகொண்டவள்,
“மைதி! நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்”
“தனியா போகாதே! நானும் வரேன்”
‘இவள் கூட வந்தா சரிபடாது!’
“டோன் பீ ஸில்லி மைதி! இங்கயிருக்க ரெஸ்ட் ரூம் போறதுக்கு நீ வரனும்னு அவசியமில்லை. ராகுலும் சஞ்சுவும் இங்க வரும்போது நாம இல்லைனா அவங்க டென்ஷனாகி நம்மளை தேடி… எதுக்கு சும்மா? நீ இங்கேயே இரு. நான் சீக்கிரம் வந்திடுறேன்” என்றவள் மைத்ரீயின் பதிலுக்குக் காத்திராமல் நடந்தாள்.