02. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி
வழக்கமான இறை வழிப்பாட்டில் தன்னைத் தொலைத்திருந்தாள் மித்ரா.இயற்கையிலே இறைபக்தி மிகுந்தவள் அவள்!!சிறு வயதில் பெற்றோரை இழந்த அவளுக்கு,அன்பினை வழங்கியது மஹாலட்சுமி!அரவணைப்பை வழங்கியது ருத்ரா!வாழும் நம்பிக்கையை நல்கியது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றலே என்னும் நம்பிக்கை அவள் மனதின் அடி ஆழம் வரை வேர் ஊன்றி இருந்தது.
வழக்கமான வழிப்பாட்டினை பூர்த்தி செய்தவள்,இறுதியாக ஒருமுறை இறையாற்றலை வணங்கி பூஜை அறையை தியாகித்து வெளிவந்தாள்.
"ஏ...லூசு!"-அவள் தன் பாதங்களை வெளி வைத்த நொடியிலே ருத்ராவின் அழைப்பு அவளை சிறைப்பிடித்தது.
"என்ன?"
"வெளியே போகணும்!ரெடியாகு!"
"நான் வரலை!"
"வருவியான்னு கேட்கலை!வந்தே தீரணும்!போய் கிளம்பு!"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??
படிக்க தவறாதீர்கள்..
"மாமா!நான் கோவிலுக்கு போறேன்!"-அவள் கூறியவுடன் தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு கண்களை ஒருமுறை மூடித்திறந்து பெருமூச்சுவிட்டான் ருத்ரா.
"என்னாச்சு?"
"முக்கியமான வேலையா வெளியே கூப்பிடுறேன்!கோவிலுக்கு போய் கருங்கல்லை பார்க்க போறேன்னு சொல்ற?"-ருத்ரா,மித்ரா இருவருக்குமான கருத்துகள் அதிகமாய் மாறுபடுவது இறைவனால் தான்!!
"மாமா!அது மாதிரி பேசாதீங்க!"
"ஓ...பேசுவேன்!மேடம் என்ன பண்ணுவீங்க?"
"மாமா!"
"உண்மை தானே நான் சொல்றது??அதெல்லாம் வெறும் கல் தானே!என்ன திருவிளையாடல் படத்துல வர மாதிரி மலையில உட்கார்ந்துட்டே தூங்கிட்டு இருக்கானா என்ன நீ வணங்குற சிவன்??"
"ரொம்ப பேசுறீங்க மாமா!அன்னிக்கு தக்ஷன் கெட்டது சிவனை பழித்து தான் மறந்துடாதீங்க!"
"ஆ...!ராவணன் கெட்டது சிவனை வணங்கி தான் மறந்துடாதே!"-இருவருக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.
"டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்பி வா பக்கி!!"
"நீங்க வேணும்னா பாருங்க!என் சிவனை பழிக்கிறீங்கல்ல!ஒருநாள் அந்த சக்தியே உங்களுக்கு எதிரா வந்து நிற்க போகுது!அப்போ தெரியும்!ஈசனோட மகிமை!"
"ஆமா...அவர் பெரிய அமெரிக்கா பிரசிடண்ட்!போர் தொடுத்து வந்துட போறார்!ப்பே...!"
"நான் சொல்றது நடக்கும்!"
"ருத்ராவை எதிர்த்து நிற்கிற தைரியம் நீ வணங்குற சிவனுக்கே கிடையாது!எவன் என்னை எதிர்த்து நின்றாலும் வேரோட அழித்துடுவேன்!என்னைப் பற்றி தெரியும்ல!பார்ப்போம்!இந்த ஹீரோவை எதிர்க்கிற தைரியம் எந்த வில்லனுக்கு இருக்குன்னு!!"-அவனது பார்வையில் அதிகப்படியான ஏளனம் மிளிர்ந்தது!!
அமைதியாக இருந்தது அச்சூழல்!!
மிக மிக அமைதியா இருந்த சூழல்!!அவள் பங்களாவில் இருந்த சிலைகளை எல்லாம் துடைத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்.
அச்சப்தத்தை தவிர,வேறு எந்தச் சப்தமும் செவிகளுக்கு எட்டவில்லை.நேரம் சிறிது கடந்ததும் அம்மௌனத்தை கலைத்தது அழைப்பு மணியின் ஓசை!!
"ஐயயோ!"-பதறியவள் விரைந்தாள் வாயிலை நோக்கி!!
வாயிலில் நவ நாகரிகமாய் உடையணிந்த இருவர் நின்றிருந்தனர்.
"யார் வேணும்?"
"மாயா மேடமை பார்க்கணும்!"
"தனிப்பட்ட விஷயமா?ஆபிஸ் விஷயமா?"
"ஆபிஸ் விஷயம்!"
"அப்படின்னா!அங்கே பார்க்க மாட்டாங்க!நீங்க ஆபிஸ் போங்க!"
"ஹலோ!நாங்க யாருன்னு தெரியுமா?வி ஆர் கம்மிங் ஃப்ரம்..."
"இங்கே பாருங்க!நீங்க யாரா வேணும்னாலும் இருங்க!ஆபிஸ் விஷயத்தை மாயாம்மா வீட்டில பார்க்க மாட்டாங்க!அவங்க வந்தா பெரிய பிரச்சனை ஆயிடும்!தயவுசெய்து போங்க!"-அவர்களில் ஒருவன் தன் கைப்பேசியை எடுத்து யாரிடமோ பேசினான்.
"அர்ஜூன் சார்!"
"..........."
"இல்லை சார்!மாயா மேடமை பார்க்க விட மாட்றாங்க!"
"............"
"நாங்க எவ்வளவோ சொன்னோம்!ஆபிஸ்ல போய் பார்க்க சொல்றாங்க!"
"..........."
"ஓ.கே.சார்!"-இணைப்பை துண்டித்தான் அவன்.