மூங்கில் குழலானதே – 21 - புவனேஸ்வரி
எது நேசம்? நமக்கு எல்லா விதத்திலும் சாதகமாய் அமைபவரின் அருகில் இருப்பதா? நாம் கேட்க விரும்புவதை மட்டும் பேசுபவரின் அருகாமையை விரும்புவதா? நம் பேச்சிற்கு முதலிடம் கிடைக்கும் இடத்தில் மட்டும் விரும்பி உரைப்பதா?
ஏன் உறவில் கொஞ்சம் பிளவு வந்தால் என்ன?
பிரியம் குறைந்திடுமா?
ஏன் கொஞ்சம் விலகி நின்றால் என்னா?
விரிசல் நீண்டிடுமா?
வார்த்தைகள் தடித்தால்தான் என்ன? அதை
தாண்டிட அன்புக்கு தெரியாதா?
நாம் பேச நினைப்பதை அவர்கள் மறுத்தால்தான் என்ன?
அவர்கள் பேச்சையும் செவிகொடுத்து கேட்போமே?
வாழ்வின் மிக அழகான பகுதி ஒன்று தான் விட்டுக் கொடுப்பது. அன்பிற்குரியவர்களின் முன்னிலையில் தோற்கும்போது, நம்மோடு சேர்ந்து நமது உறவும் ஜெயித்துவிடுகிறது. இதை உணர்கிறோமா நாம்? சிந்திக்கிறேன் சகிதீபன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
முத்துலெட்சுமி சுப்ரமணியனின் "இவள் எந்தன் இளங்கொடி" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
வானிலவில் எதையோ தேடிக்கொண்டிருந்தான் சகிதீபன். எதை தேடுகிறான் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். அவன் மனம் பூட்டி வைத்திருந்த ரகசியங்கள் அத்தனையும் அவன் மனதில் மாயமாய் தோன்றியவளின் வார்த்தைகளினால் உடைந்து அம்பலமாகியது.
“நம்பவே மாட்டேன் கீதன்.. உங்களுக்கு வினி மேல பாசம் இல்லன்னு கடவுளே சொன்னாலும் நம்ப மாட்டேன்!” அத்தனை தீர்க்கம் எதிரொலித்தது அவள்பேச்சில். அப்படி என்ன நம்பிக்கையாம் பெண்ணவளுக்கு?
அவன் அவளுக்கு அறிமுகமாகியே சில மணி நேரங்கள் தானேகடந்திருந்தன?அதற்குள் அவனது உள்ளமெனும் சமுத்திரத்தின் ஆழத்தை தொட்டுவிட்டாளா அவள்?
பிரம்மிப்பாய் இருந்தது அவனுக்கு!
மீண்டும் நிலவினுள் அவன் பார்வை ஊடுருவல். நிலவே நீ சாட்சி. ஆம், இரவில் நிகழும் அனைத்து சம்பவங்களுக்குமேநிலவு சாட்சியாகிறது என்பதை அறிவோமா நாம்? கண்ணீரோ, காதலோ, காமமோ, கொலையோ,கொள்ளையோ எது நடந்தாலும், மென்னகையை மட்டும் சிந்தி சாட்சியாகிறது இரவும்நிலவும்! அந்த நிலவை பார்த்துக் கொண்டே வாய்விட்டு பேசினான் சகி.
“உண்மைதான் மாயா.. விஷ்வா என் உயிர்.. அவ மேல எனக்கு எப்பவுமே கோபம் இல்லை..அவள் என் செல்ல தங்கச்சி!” உணர்ச்சி பொங்க வாய்மொழிந்தான். ஆனால் அதை செவிக்குளிர கேட்கத்தான் அங்கு யாருமேஇல்லை! வான் நிலாவைத் தவிர.
பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், தனது மன போராட்டங்களிடம் தோற்றவனாய் கட்டிலில் அமர்ந்தான். கேட்க யாருமே இல்லை என்றாலும் அவன் மனம் பேச தொடங்கி விட்டிருந்தது.
“வைஷாலிகா”! அந்த குடும்பமே கொண்டாடும் வைபவமாய் திகழ்பவள். அவள் புன்னகைப்பது ஆயிரம் பூக்கள் ஒரே நேரத்தில் பூப்பது போல இருக்க, அதை கண்டே ரசித்து பழகியவர்கள், பூக்களின் நடுவில் புகைப்படமாய் சிரித்தவளை பார்த்து கதறினார்கள்.
மொத்த குடும்பமுமே வைஷாலிகாவின் பிரிவில் தவித்திருக்க, நோய்வாய்ப்பட்டிருந்தாள் விஷ்வானிகா. அன்று நீரில் தத்தலித்தவளுக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்! வைஷாலிகாவின் கடைசி ஸ்பரிசம்.
அன்றைய விபத்தில் தண்ணீரில் மூழ்கி தவித்த நொடிகளில் இருவருமே ஒருவரின் ஒருவர் கரத்தை விடாமல் பிடித்து கொண்டனர். “அப்பா, அம்மா” என்ற இறைச்சலுக்கு நடுவே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மூர்ச்சையாகினர்.
மீண்டும் விஷ்வானிகா கண்திறந்த்தும் தன் உள்ளங்கையில் கரம் பதித்திருந்த வைஷுவைத்தான் தேடினாள்.
மரணம் என்றால் என்னவென்று தெரியாத வயதும் இல்லை! மரணம் வாழ்வின் நிச்சயம் என்று புரிந்து கொள்ளும் வயதும் இல்லை! வைஷாலிகாவின் இழப்பை சரிகட்ட தெரியாத மனநிலையில் இருந்தாள் விஷ்வானிகா.
அவளின் கேள்வியெல்லாம் ஒன்றுதான்! “நானும்தான் வைஷூ கூட இருந்தேன்! நான் ஏன் சாகல? வைஷு என்னாலத்தான் மூழ்கிட்டாளா?நான் அவள்கையை பிடிச்சு இழுக்கவில்லையா?”. இதேகேள்வி அவளுக்குள் ரீங்காரமிட,அதை வாய்விட்டு கேட்கத்தான் அவளுக்கு தைரியமில்லை,
அப்படியே அவள் கேட்டுவிட்டாலும்,அதை சீர் செய்யும் நிலையில் இருந்தவர் யார்? யாருமில்லை! அருண் தாத்தாவில் தொடங்கி சகி வரை ஒவ்வொருவரும் தத்தம் வழியில் வீட்டில் சந்தோஷத்தை விதைக்க முயற்சிக்க, எல்லா பேச்சுகளின் முடிவிலும் வைஷாலிகாவே இருந்தாள்.
இப்படியே இருந்துவிட்டால் என்னாவது? மாற்றம் தானே வாழ்க்கையின் சாரதி? அந்த சாரதியின் மீது நம்பிக்கை வைத்து இப்போதைக்கு இடமாற்றமே அவசியம் என்று சென்னைக்கு குடிபெயர்ந்தனர் அனைவரும்.