"கையை விடாதே!கெட்டியா பிடி!"-எதிரில் தெரிந்த பிம்பம் உண்மையில் தன் கனவா என்று தோன்றியது அவளுக்கு!!
"மேலே வா!"-அவளிடமிருந்து அதிர்ச்சி விலகவில்லை.
"வா!"-நிர்பயா ஒன்றும் அவ்வளவு எடை இல்லை.அதனால் அவளை மேலே தூக்க சங்கரனுக்கு பெரும் போராட்டம் ஏற்படவில்லை.
இருவரும் ஒரு பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.இருவரும் ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை.
தனது நிலையை அவள் முன் தாழ்த்த விருப்பம் கொள்ளாதவர்,
"அதுக்குள்ள சாக முயற்சி பண்ணாதே!அதுக்கு இன்னும் நேரம் இருக்கு!"-என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.
நிர்பயா திரும்பி அப்பள்ளத்தாக்கை பார்த்தாள்.1500 அடி பள்ளத்தாக்கு அது!விழுந்தால் இறந்ததும் அடுத்தவருக்கு தெரியாது!
"எது என்னை கோழையை போல இப்பணி ஆற்ற வைத்தது?"-சிவந்த கண்களோடு எழுந்து தான் வந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அன்றிரவு அவளது தனிமை அவளை வெகுவாக வாட்டிக் கொண்டிருந்தது...
"இன்னும் என்ன தண்டனை எல்லாம் அனுபவிக்கணும்னு எனக்கு எழுதி இருக்கோ?இந்த உலகத்துல வாழுற எந்தப் பெண்ணுக்கு என்னோட நிலை வர கூடாது!"-கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவள்.கண்ணீர் தானாய் அவள் கன்னத்தை தீண்டியப்படி வழிந்தோடியது.
அப்படி மீண்டும் என்ன நேர்ந்தது இவளுக்கு???கூறுகிறேன்....
நிர்பயா தான் விரலில் அணிந்திருந்த கணையாழியை கழற்றி தூர வீசி எறிந்தாள்.
"என்ன காரியம் பண்ணண்ணா?நீ எல்லாம் மனுஷனா?"-வெறுத்துப் போய் கத்தினான் எட்வர்ட்.
"உனக்கு எப்படி இந்தக் காரியம் செய்ய மனசு வந்தது?"-ஜோசப் திரும்பி எட்வர்டை முறைத்தான்.அவனை நோக்கி தன் ஆள்காட்டி விரலை நீட்டினான்.
"நான் எப்படிப்பட்டவன்னு நீ சொல்ல தேவையில்லை!இதுல நீ தலையிடாதே!"
"ஆமாண்ணா!தலையிட கூடாது தான்!ஏன்ணா நீ என் அண்ணனே இல்லை.என் அண்ணன் எவனா இருந்தாலும் நேருக்கு நேர் நிற்பான்.நீ கோழை மாதிரி ஒரு பொண்ணோட உணர்வுகளோட விளையாடி இருக்க!அசிங்கமா இல்லை?"-அவன் கூறியது தான் தாமதம் அவனது கழுத்தை இறுக பற்றினான் ஜோசப்.அவனது பிடி மெல்ல இறுகியது.பின் என்ன நினைத்தானோ அவனை தள்ளினான்.
"எ..ஏன் நிறுத்திட்ட?கொன்னுடு!உனக்கு தம்பியா வாழுறதுக்கு நான் செத்துடுவேன்."
"எட்வர்ட்!"
"கத்தாதேண்ணா!நீன்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?உன்னை மாதிரி தைரியமா இருக்க ரொம்ப ஆசைப்பட்டேன்.இனி இல்லை...எப்போ அந்த தைரியம் ஒரு பொண்ணை அழிக்க நினைத்ததோ இனி கனவுல கூட உன்னை மாதிரி வாழ விரும்ப மாட்டேன்!"
".............."
"உன் மேலே உயிரையே வைத்திருந்தாங்களே!நன்றிக்கடன் காட்டிட்டல்ல!அவங்க உன்னை ஒதுக்குனதுனால தான் இப்போ பழி வாங்குனேன்னு சொல்லுறீயே!இதுக்கு பெயர் என்ன தெரியுமா?"
"ரொம்ப பேசுறடா நீ!"
"ஆமாண்ணா!இத்தனை நாள் உனக்கு கீழே வாழ்ந்தேன்!என் அண்ணன் தான் உலகம்னு நினைத்தேன்.அண்ணி என்ன சொல்லுவாங்க தெரியுமா?நம்ம இரண்டுப் பேரையும் ராமலக்ஷூமணன்னு சொல்லுவாங்க!இனி உன் பேச்சை கேட்கணும்னு எந்த அவசியமும் எனக்கில்லை.என் அண்ணன் செத்துட்டான்.அவன் உயிரோட இல்லை.இனி உன் நிழல் கூட என் மேலே பட விரும்பலை!"-என்றவன் தனதறைக்குள் சென்றான்.சில மணி நேரங்களில் தனது முக்கிய உடைமைகளோடு வெளி வந்தான்.
"நான் கெஸ்ட் ஹவுஸ் போறேன்.உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன் தயவுசெய்து அங்கே வந்துடுடாதே!"-என்றவன் வேகமாக முன்னேறினான்.
அப்படியென்றால்???இவனும் நிர்பயாவிற்கு நன்மையை பயக்கவில்லையா???
சலனங்கள் கொண்ட மனதிற்கு ஆறுதல் வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட உறவுகள் மூன்று..!
தாய்மை,நட்பு,மற்றும் காதல்.மூன்றும் மூன்று சகாப்தங்கள்!ஆரவாரம் கொண்ட நெஞ்சமானது தன்னை நெருங்கியவர்களின் நெஞ்சத்தில் புதைக்கவே விரும்பும்!மனதின் அச்சூழல் கொடிய நிலையானதாக இருந்த சமயத்திலும் நெஞ்சத்தில் ஆறுதல் என்பது ஔஷதமாக மாறி காயமாற்றும்!ஆனால்,சில நேரங்களில் சிலரது வாழ்விலும் நிகழ்கிறது ஔஷதமே நஞ்சாக மாறும் சூழல்!!அத்தகு சந்தர்பங்களில் மனம் திக்கற்ற நிலையில் இருப்பதாய் தோன்றும்,தேகத்தின் அங்கங்கள் எல்லாம் கொய்யப்படும் வேதனை உருவாகும்!வாழ்வை விடுக்கும் எண்ணமும் தோன்றும்.இதுபோன்ற நிலையில் ஆறுதல் கூறி ஒருவரை தேற்ற இயலாது.அச்சூழலில் இதுவும் கடந்துப்போகும் என்ற தத்துவத்தை உடைத்து இதுவும் மரத்துப் போகும் என்று எண்ணமே வெற்றி வாகை சூடி கொள்கிறது சாதனையாளர்களின் இதயத்தில்!!!