14. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
வரும் காலைப் பொழுதில்-என்னவர்களின்
வருங்காலத்திற்கு செய்ய வேண்டிய
திட்டங்களை எண்ணிக் கொண்டிருந்த நான்
இதை தூதுவனின்மூலம் அவர்களுக்கு
கூற வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்....
இவர்களின் நலனுக்கு – நல்ல
குணம் கொண்ட என் இனத்தவரையும்
பயன்படுத்தி காக்க வேண்டும்...
எம் இனத்தவரின் குற்றத்திற்கு- இதுவே
எங்களுக்கு வழங்கப்படும் மன்னிப்பாய் இருக்கும்...
வருங்காலம்! எங்கள் அன்பர்களுக்கு
வசந்தமாய் இருக்க வேண்டும்! என
சுளுரைத்துக்கொண்டேன்.....
வரத்தைத் தந்து சாபம் பெற்றதாய் -ஆரம்பத்தில்
வருந்திய நான்!
இப்பொழுதுதான் உண்மையை உணர்கிறேன்...
இறைவன் இவர்களுக்கு
இணையாய் பாதுகாவலனாய்
இருவரும் ஒருவருக்கொருவர்
உதவி புரிந்து வாழவே
மனிதர்களைப் படைக்க...
மனிதனோ!
முன்னவரை மதிக்காமல்
தன்னின் நலம் மட்டும் கருதி
சுயத்தை தொலைத்து
சுயநலத்துடன் வாழ தொடங்கிவிட்டான்....
மனிதர்களுக்கு பூமியில் வாழும்
வரம் தந்தான் இறைவன்...
இறைவனின் வரத்தினால்
இவர்கள் பெற்றது சாபம்....
ஆம்!
இறைவனின் வரத்தினால்
இயற்கையின் அனைத்துப் படைப்புகளும்
பெற்றது சாபம்...
சாப விமோட்சம் கிடைக்குமா?
விடை உங்களிடம்....
முற்றும்!
{kunena_discuss:1101}