06. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி
ஊட்டி..
மலைப்பனியினுள் உறைந்து மயங்கிய கதிரவன்.. குளிருக்கு இறுக்கிய சிறகுகளை எடுக்க முடியாத பறவைகள்..ஓசை ஏதுமற்று வாய் கட்டிப்போன தென்றல் காற்று.. அந்தக் கொடும்பனியின் வீரியத்தை குறைக்க தோட்டத்தை ஒட்டிய சிறு ஷெட்டில் அமர்ந்து தேநீரை பருகிக் கொண்டிருந்தனர் தாத்தாவும் பாட்டியும்..
"ஏங்க..குட்டிம்மாக்கு போன் போடுங்க.."
"ப்லைட் இப்போ தான் லாண்ட் ஆயிருக்கும் சகூ.. கெஸ்ட் ஹவுஸ் போயிட்டு கால் பண்றேன்னு சொன்னாம்மா அவ.."
"நான் கேட்டப்போ எல்லாம் இதையே சொல்ரீங்க",என்றபடி தன் உதட்டை பிதுக்கினார் பாட்டி..
அவரது குழந்தைத் தனமான செயலை இரசித்தபடியே,"அவ என்ன பப்பாவா சகூ..?? போனவுடனே கூப்பிடுவா பாரு.."
சரி என்று அரைமனதாக ஒத்துக்கொண்டவர் சென்னையில் க்ரியாவிற்காக நியமிக்க பட்டிருந்த கார் டிரைவரும் சகுந்தலா பாட்டியின் தூரத்து உறவினருமான சுபேந்தரை அழைத்தார்..
"அலோ.. சொல்லுங்க சித்தி..."
"தம்பி குட்டிமா வந்துட்டாளா...??"
"இல்லைங்க சித்தி.. இப்போ தான் பிளேன் இறங்கிட்டு இருக்காம் பாப்பாவோட பி ஏ பொண்ணு சொல்லுச்சு.."
"சரிப்பா.. அவளை பத்திரமா கூட்டிட்டு போ.. கார் அவளே டிரைவ் பண்றேன்னு சொன்னா விடாத என்ன..??"
"அத நான் பார்த்துக்கறேன் சித்தி.. நீங்க கவலை படாதீங்க.."
"சரிப்பா.. பத்திரம்.. பாப்பா வந்த உடனே கூப்பிடு..வெச்சுடறேன்.."
"சரிங்க சித்தி",என்றபடி போனை அணைத்தார் சுபேந்தர் (அ) இந்தர்..
(இனி ஊட்டிக்கு இரெண்டு அல்லது மூன்று எபிசோட்கள் ப்ரேக்)
"இந்தர் பாட்டி என்ன சொன்னாங்க..??",இது க்ரியாவின் பி ஏ மிர்னா..
"வழக்கம் போல தான்.. முதலாளியம்மாக்கிட்ட ஒழுங்கா நடந்துக்க சொன்னாங்க.." , என்றார் சற்று மிடுக்காக..
ஓ.. என்றவள் பதில் பேசாது பயணிகள் ஒருவர் பின் ஒருவர் வருவதைக் கண்டு க்ரியாவை வரவேற்கும் விதமாய் ஒரு பொக்கேவுடன் விமான நிலையத்தின் வாயிலை நெருங்கினாள் மிர்னா ..
மிர்னா வை வெகு நேரம் காக்க வைக்காமல் அங்கு வந்து சேர்ந்தாள் க்ரியா..
"ஹலோ மேம்.. வெல்கம் டூ சென்னை..", என்று பொக்கே நீட்டிய மிர்னாவிடமிருந்து அதனை பெற்று கொண்டவளின் கண்கள் பின்னால் நின்றிருந்த இந்தரை கண்டதும் பளிச்சிட்டது..
"பெரியப்பா...",என்றபடியே அவரிடம் சென்றவள்,"எப்படி இருக்கீங்க..??",என்று கேட்டாள்..
"எனக்கென்ன தாயி..நான் நல்லா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க..",என்றார் வாஞ்சனையாக..
"நான் நல்லா வெயிட் போட்டு சூப்பரா இருக்கேன்..நீங்க தான் எளச்சுட்டீங்க.."
"வயசாகுதுல தாயி.. வாங்க போலாம்.." ,என்றபடி அவள் கையிலிருந்த பாகை வாங்கினார்..
பின் தங்கிய மிர்னா வை நினைவு கூர்ந்த க்ரியா பின்னால் திரும்பி,"கம் பாஸ்ட் மிர்னா ..",என்றபடி முன்னே நடக்கத் தொடங்கினாள் காரை நோக்கி..
"பி ஏ'வுக்கு எடுபுடி வேலை கொடுக்குறதும், எடுபுடிக்கு பி ஏ'வேலை கொடுக்குறதுமே இவளுக்கு வேலையா போச்சு....",மனதில் க்ரியாவை கொஞ்சிய வண்ணம் எஞ்சிய இரண்டு ட்ராலிகளை தள்ளிக் கொண்டு பின் சென்றாள் மிர்னா ..
பலதரப்பட்ட மக்களை சுமந்துகொண்டிருக்கும் இந்தியாவின் நான்காவது பெரிய மெட்ரோ சிட்டி சென்னை..
கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்களில்," சாவுகிராக்கி..படியில நிக்காம மேலவா..", பல பேர் காலையில் கேட்கும் சுப்ரபாதங்களுள் இதுவும் ஒன்று..
ஒரு பக்கம் வேலை தேடி அலையும் இளைஞர்கள் இன்னொரு பக்கம் டிப் டாப் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அளந்துவிடும் நவீன யூத்கள்..
பாரிஸ் கார்னரில் பொதுக்கூட்டம் தாம்பரத்தில் ஸ்ட்ரைக் என மக்களை பிஸியாக வைத்திருக்கும் சிங்கார சென்னை..
காரில் அமர்ந்து கொண்டு கடல் காற்றை சுவாசித்தவண்ணம் கடலை ஒட்டி அமைந்திருக்கும் பங்களாவை அடைந்தனர் மூவரும்..
ரெப்ரெஷ் செய்துவிட்டு வந்த க்ரியா,"மிர்னா ..இன்னைக்கு மீட்டிங் டைம் மதியம் இரெண்டு மணிக்குத் தானே..??"
"யெஸ் மேம்.."
"ஓ கே.. நான் உங்களுக்கு மெயில் பன்னிருந்த ஷெட்யூல் படி எல்லாத்தையும் அரேன்ஜ் பண்ணிட்டீங்களா...??"
"யெஸ் மேம்.."
"ஹம்..பி ரெடி இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்பறோம்.."
தலையாட்டி பொம்மை போல் மீண்டும் ஒரு யெஸ் மேம் போட்டவளை கண்டு சிரிப்பு வந்தாலும் அதனை தன் இதழுக்கிடையில் மறைத்தாள் க்ரியா..
அந்த முழு நாளையும் மீட்டிங் அட்டென்ட் செய்வதிலேயே கழிந்தது க்ரியாவிற்கு..