34. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
ரூபன் அனிக்காவின் நிச்சயம் முடிந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, ஆலயத்தில் திருப்பலியில் செபித்துக் கொண்டு இருந்தாள் அனிக்கா. அம்மாவின் அறிவுரைப்படி நிச்சயத்திற்கு பின்னர் வீட்டிலும் வெளியிலும் எங்குச் சென்றாலும் சேலைதான் அணிவது. அன்று பீச் நிற ஜொலி ஜொலிக்கும் வேலைப்பாடுள்ள சேலையில் மிளிர்ந்து கொண்டிருந்தாள் அவள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்து திருப்பலி நிறைவுறும் நேரம். அன்று தான் அவளுக்கும் ரூபனுக்குமான திருமண அறிக்கை முதன்முதலாக வாசிக்கப் படவிருக்கின்றது. ரூபன் அங்கு ஆலயத்தில் இல்லையென தெரிந்தும் கூட மனதிற்குள்ளாக அவனை அவள் மிகவும் தேடினாள்.
நிச்சயத்திற்கு அடுத்த நாள் அவன் அவள் வீட்டில் அவள் அறைக்கே வந்து பேசிச் சென்றான்தான் அதன் பின்னர் அவன் அவள் வீட்டிற்கு நாட்களில் ஹாலிலேயே இருந்துக் கொள்வான். வேலையிலிருந்து களைத்துப் போய் வருகின்றவனுக்கு ஓடி ஓடி உபசரிப்பாள் அவள். அனிக்காவை பார்க்கத்தான் வருகின்றான் என்றாலும் சும்மா எப்படி வருவதென்று காரணம் சொல்ல எப்போதும் அவளது பொருள் ஏதாவது கொண்டு வந்திருப்பான். அவளை அங்கு அவள் வீட்டில் சந்திப்பதோடு சரி. ஞாயிறுகளில் ஆலயத்தில் திருப்பலிக்கு அப்புறமாக திரும்பும் வேளைகளில் சின்ன சின்ன பார்வை பரிமாற்றங்களும், புன்னகையும் உண்டு. இருவருமே பொதுவிடத்தில் பிறர் முன்பாக தங்களுக்கென்று மரியாதையான எல்லையோடு நடந்து கொள்வார்கள், அவளை எங்கும் தன்னோடு கூட்டிச் செல்ல அவனுக்கு போதுமான நேரம் இருந்திருக்கவில்லை. அவன் வேலைப் பளு அறிந்திருந்ததால் அவளும் அது குறித்து வருந்தவில்லை. தானும் அவன் வேலையை பகிர்ந்துக் கொள்ள அவள் எண்ணினாலும் அதற்கு அவன் அனுமதிப்பதாக இல்லை.
ஏன் ஜீவா நான் ஆஃபீஸ்க்கு வந்தா இருக்கிற வேலையில கொஞ்சமாவது ஹெல்ப்பா இருக்கும்ல, சண்டே கூட மதியமே போயிடறீங்க ரெண்டு பேரும்........ உங்களுக்கு ரெஸ்ட் இல்லாம வேலை இருக்கு........ நானும் வீட்டில சும்மாதான இருக்கேன். நான் கேட்டேன் வர வேண்டான்னு சொல்லிட்டாங்க...............அத்தாண்ட சொல்லேன் என்று கேட்க,
அவனோ வேறு கதை சொன்னான். அதாவது ரூபன் அவளை பெண் கேட்டு தாமஸ் தர மறுத்திருந்த போது யாரிடமோ சொன்னாராம்.
"என் மகளை அவன் கட்டினா, அவன் ஃபேக்டரிக்கு ஃப்ரீயா வேலை செய்ய ஒரு ஆள் கிடைச்சிடும்னு நினைச்சி கேட்டிருப்பான்" என்று,
அதனைக் கேட்ட முதலாக "என்னோட காதலை மாமா ரொம்ப கொச்சைப் படுத்திட்டாருடா" என ரூபன் குமுறினானாம்
அனிக்கா இனிமே ஃபேக்டரிக்கு வராம பார்த்துக்க போறேன். என்று முடிவாக தன்னிடம் கூறியதாக சொன்னான்
அதனால் தான் அவளை அவன் ஃபேக்டரிக்கு வர வேண்டாமென்று சொல்லியிருப்பான் என்று கூறினான்.
கடைசியில் இந்த மாமனார், மருமகன் தொல்லை ரொம்ப ஆகிப் போச்சு, இவங்களால எனக்குத்தான் பிரச்சினை தாங்கலை என்று அவள் தான் சலித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
அனிக்காவின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவன் அவள் அறைக்கு செல்லாவிடினும், அவள் வீட்டினர் ரூபன் வந்ததுமே ஹாலிலிருந்து ஒதுங்கி அவர்களுக்கு பேச தனிமைக் கொடுத்து சென்று விடுவதுண்டு. அனிக்காவை தன் அருகில் அமர்த்தி அவள் உள்ளங்கையோடு தன்னுடையதையும் கோர்த்துக் கொண்டு அவளொடு சற்று நேரம் அளவளாவிக் கொண்டு அமர்ந்திருப்பான். அவளுடன் பேசியதிலேயே அவனுக்கு உற்சாகம் கூடிப்போகும் வீட்டிற்க்கு திரும்புகையில் களைப்பிலும் பொலிவாக விடை பெறுவான்.அவனாக போன் செய்தாலும் அவன் சுபாவமே அளவுக்கு அதிகமாக பேசுவதாக இல்லையென்பதால் ஓரிரு பேச்சுக்களுக்கு அப்புறமாக என்ன பேசுவது என தெரியாமல் மௌனமாகிவிடுவான். அனிக்கா தான் தொடர்ந்து அவனிடம் பேசியாக வேண்டும் அவன் அவளை பேச விட்டு கேட்டுக் கொண்டிருப்பான்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது ஆனால் கடந்த 20 நாட்களாக ஏதோ ஒரு வேலையாக வெளியூர் சென்றிருக்கின்றான், என்ன வேலை என்று எதுவும் சொல்லவும் இல்லை. அவளுக்குத்தான் சொல்லவில்லை என்றால் அவன் வீட்டினருக்கும் ஏன் அவனுடைய எல்லா வேலைகளையும் ஜீவனுடைய தலையில் சுமத்திச் சென்றவன் அவனுக்குமே சொல்லியிருக்கவில்லை.
நமக்கு இருக்கிற ரெகுலர் ஆர்டர் வேலையே சரியாயிருக்கு அனி, எங்க போயிருக்கான்னு விபரம் சொல்லலை. ஆனா, கொஞ்ச நாளா ஏதோ புது ஆர்டர் காக போன் கால்ஸ் வந்திட்டு இருந்தது. வேலை கவனத்தில நானும் எதையும் கேட்டுக்கலை.அது விஷயமா எங்கேயும் போயிருப்பானோன்னு டவுட்டா இருக்கு. இப்ப ரெகுலரா இருக்க வேலையே சரியா இருக்கு, இதில புது ஆர்ட்ர்ஸ்னா எப்படி வேலையை மேனேஜ் செய்வானோ? என்று புலம்பியதும் இன்னும் இவளை குழப்பியது.
இவளாக போன் செய்தால் அங்கு நெட்வர்க் பிரச்சினையோ என்னவோ சரியாக லைன் கிடைப்பதுமில்லை. கிடைக்கும் போதும்........... எப்படி இருக்க அனி? சாப்டியா? வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா? என்பதோடு அவன் பேச்சு முடிந்து விடும். இவளுடைய கேள்விகளுக்கு நான் வந்து சொல்றேன்மா…எனறு முடித்து விடுவான். கடந்த நான்கு நாட்களாக அவனும் இவளை தொடர்பு கொள்ளவில்லை. இவளும் கோபத்தில் போன் செய்ய முயற்சிக்கவில்லை. கடந்த வாரத்தில் அப்பா மூலமாக தெரிந்து கொண்ட விஷயம் குறித்தும் அவள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.