‘நான் அப்படித்தான். அப்பாங்கிற வார்த்தையிலேயே உணர்ச்சி வசப்பட்டுடுவேன் .என்னோட ஸ்ட்ராங் பாயின்டும் அவர்தான். வீக் பாயின்டும் அவர்தான். நீங்க வித்தியாசமா நினைக்காதீங்க...’ சொல்லிவிட்டு அருகில் நின்று அவனையே திகைப்புடன் பார்த்திருந்த ஸ்ரீனிவாசனை இழுத்து தனது அருகில் அமர்த்திக்கொண்டான் விவேக்..
‘இதெல்லாம் உனக்குத்தான்..’ தன் கையிலிருந்த பரிசு பொருட்களை அவனிடம் கொடுத்து, அவனிடம் ஏதேதோ பேசி தன்னை இயல்புக்கு திருப்பிக்கொண்டிருந்த விவேக்கிடமிருந்து பார்வையை அகற்றி அங்கே சற்றே தள்ளியிருந்த அந்த அலமாரியில் இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தாள் சுஹாசினி!!! இப்போதே அந்த புகைப்படத்தை எடுத்து வந்து விவேக்கிடம் காட்டி விடவேண்டுமென்று தோன்றியது அவளுக்கு!!!
‘என்ன செய்வான் இவன்???’ மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போவனா??? நிழல் படம் சரியாக வருமா??? இல்லை நிஜமே எதிரில் வந்து நிற்பதுதான் அழகா??? நிஜத்தை எப்படி இங்கே கொண்டு வர??? இல்லை நிஜம் இருக்கும் இடத்திற்கு இவனை அழைத்து சென்று விடலாமா??? அவளுக்குள்ளே பல நூறு கேள்விகள்!!!
படு சுவாரஸ்யமாக ஸ்ரீனிவாசன் ஏதோ சொல்லிகொண்டிருக்க, கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அதை விவேக் கேட்டுக்கொண்டிருக்க
‘விவேக் என்ன சாப்பிடறீங்க???’ கேட்டாள் சுஹாசினி.
‘இல்ல ஹாசினி.. நான் இன்னைக்கு எதுவும் சாப்பிட மாட்டேன்..’
‘ஏன் விரதமா???’ அவள் யோசிக்காமல் கேட்க
‘ம்??? கொஞ்சம் வறட்சி கலந்த புன்னகை அவன் உதடுகளில். ‘ம்.....அப்படிக்கூட வெச்சுக்கலாம்...’ என்றான் மெதுவாக. அவன் முக பாவம் அவளுக்கு சட்டென அந்த தினத்தை ஞாபகப்படுத்தியது.
சற்றே அதிர்ந்து போனாள். இன்று தானே!!! ஆம்!!! இன்று தானே அந்த தினம்!!! மெல்ல எல்லாம் நினைவுக்கு வந்தன அவளுக்கு.
‘ஓ!!! ஐ ஆம் சாரி விவேக். இன்னைக்கு உங்க அப்பாவோட நினைவு நாள். ஏதேதோ ஞாபகத்திலே இதை நான் மறந்திட்டேன். வெரி சாரி இன்னைக்கு இங்கே பார்ட்டிக்கு வர சொல்லி நாங்க உங்களை கஷ்ட படுத்திட்டோமோ...’ அவள் கேட்க
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை விடுங்க. நம்ம ஸ்ரீநிவாசன் சந்தோஷமா இருந்தா போதும்’ சிறுவனின் தோள் அணைத்து இவன் சொல்ல..
‘உங்களுக்கு அப்பா இல்லையா அங்கிள்..’ கொஞ்சம் திகைத்து போன குரலில் கேட்டான் ஸ்ரீநிவாசன்.
‘அதெல்லாம் இருக்காங்க. அவங்க அப்பா இங்கேதான் இருக்காங்க. நான் காமிக்கறேன் பாருங்க..’ சொல்லிக்கொண்டே அவள் நகர்ப்போன நேரத்தில் உள்ளே நுழைந்தது அந்த அதிர்வான குரல்
‘ஹாசினி!!!’
அதே நேரத்தில் வடபழனி செல்லும் பேருந்தில் வந்துக்கொண்டிருந்தார் அவர்!!! தாமோதரன்!!! காலையில் ஹரிணி சொன்ன சுஹாசினி வீட்டு முகவரி அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
பேரனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம்!!! அதே நேரத்தில் இத்தனை நாட்களாய் அவரை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அந்த வைராக்கியம் ஒரு புறம். அங்கே போவோமா??? வேண்டாமா என்கிற குழப்பம் மனமெங்கும் மேலோங்க வந்துக்கொண்டிருந்தார் அவர்.
இரண்டு பெண்களை பெற்றெடுத்த தகப்பன். பெண்களை பெற்றதற்காக என்றுமே வருத்தப்படாத தகப்பன்.. இரண்டு பெண்களும் நிரம்ப படித்திருக்கிறார்கள். சொந்தக்காலில் வேரூன்றி இருக்கிறார்கள்!!! ஆனால் அவரது மனதை பற்றி, அவரது வருத்தங்களை பற்றி என்றாவது யோசித்திருக்கிரார்களா அவர் மகள்கள்???
இந்த கேள்வி அவருக்குள்ளே எத்தனை முறை எழுந்தாலும், என்னதான் மாற்றி மாற்றி யோசிக்க முயன்றாலும் இல்லை என்ற வலிக்கொடுக்கும் பதிலே அவருக்கு கிடைக்கிறது.
“இந்த உலகத்தில் காதல் என்ற உணர்வு மிக அழகானதாமே??? கதைகளிலும், கவிதைகளிலும், சினிமாவிலும் அதை போற்றி புகழ்கிறார்கள்”
“இருக்கட்டும்!!! உலகத்தின் மிக அற்புதமான உணர்வாக காதலே இருக்கட்டும். ஆனால் தந்தை பாசம். காதல் வந்தால் தந்தை பாசம் காணாமல் போய் விடுமா என்ன???”
“என்னை விட காதலே பெரிதென என்னை பற்றி கொஞ்சமும் கவலை படாமல் பதினான்கு வருடங்களாக என்னை விட்டு விலகி இருக்கும் பெரிய மகள். இப்போது அவளுக்கு எங்கிருந்து திடீரென வருகிறதாம் என் மீது பாசம்!!!”
“நான் என்றில்லை இந்த உலகத்தில் இருக்கும் எல்லாரையும் விட தான் நினைப்பதே பெரிதென நினைக்கும் சின்ன மகள். அவளுக்கும் இன்றைக்கு ஏனோ என் மீது திடீர் பாசம். காலையில் பேருந்து நிலையம் வரை வந்து என்னை அழைத்து வந்து அவளுடன் தங்க வைத்து...” இதையெல்லாம் நினைக்க நினைக்க வலிதான் நிரம்பியது அவருக்குள்ளே.
‘இல்லை!!! நான் யாரையும் சார்ந்து இல்லை!!!’ கடைசி வரை என்னால் இப்படியே வாழ்ந்து விட முடியும்!!!’ தனக்குள் சொல்லிக்கொண்டே பேருந்தின் இருக்கையில் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார் தாமோதரன்!!!
ஆனாலும் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு ஏக்கம்!!! நிஜமான அன்புடன் சேர்ந்த ‘அப்பா..’ என்ற ஒரு அழைப்புக்கான ஒரு ஏக்கம்!!!