அவன் அண்ணியின் மூலமாக வீட்டுக்குள் வந்தது அவர்கள் திருமணபேச்சு. அப்பாவில் தொடங்கி எல்லாருமே மோகனா சொல்வதையே ஆமோதித்தனர்.
'இப்போ சொல்லுடா நம்ம ஹாஸ்பிடலுக்கு உன்னை ஒரு டைரக்ட்டரா ஆக்கிடறேன். இல்லை வேண்டாம்னா ,வேறே என்ன பிசினஸ் வேணும்னு சொல்லு ஆரம்பிச்சிடலாம்.
மோகனாவின் பார்வை அவனை துளைத்தது. பார்வையை திருப்பிக்கொண்டான பரத்.
அவனை பார்த்து சொன்னார் மோகனாவின் அப்பா. 'நாங்க உங்களை கம்பெல் பண்ணலை. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா சொல்லிடுங்க. மோகனாவோட அத்தை அவங்க பையன் பிரகாஷுக்கு மோகனவை கேட்கிறாங்க. பிரகாஷ் சாப்ட்வேர் கம்பெனி வெச்சிருக்கான். அவங்க இப்பவே கல்யாணத்துக்கு ரெடியா இருக்காங்க.' அவரின் குரலில் வியாபார தொனி ஒலித்தது.
ரெண்டு நாள் டைம் கொடுங்க என்றார் அவன் தந்தை. என் பையன் நல்ல முடிவா எடுப்பான்.
அவர்கள் சென்ற பிறகு, மோகனாவை கைப்பேசியில் அழைத்துக்கேட்டான் ஸ்ரீகாந்த் 'என்ன நினைச்சிட்டிருக்கார் மோகனா உங்கப்பா.? என்னமோ பிசினஸ் பேசறா மாதிரி பேசறார். இப்போ நான் வேலையை விடமாட்டேன்னு சொல்லிட்டா நீ உடனே பிரகாஷை கல்யாணம் பண்ணிக்குவியா என்ன?
வேற என்ன செய்ய முடியும் ஸ்ரீ? என்றாள் நிதானாமாக 'நீங்க வேலையை விட மறுத்துட்டா எனக்கு வேற வழியில்லை. என் ஸ்டேடஸுக்கு ஏத்த மாதிரி இருக்கிறவரை தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும். நீங்க அடுத்து என்கிட்டே பேசறதா இருந்தா வேலையை விட்டுட்டு வந்து ஒரு மெசேஜ் அனுப்புங்க. அதுக்கப்புறம் நான் கால் பண்றேன்.' துண்டித்தாள் அழைப்பை.
உடைந்து தான் போனான் ஸ்ரீகாந்த். எப்படி இப்படி பேச முடிகிறது அவளால்.?
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்.
கண்களை நீ மூடிக்கொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
அதன் பிறகு அவன் பலமுறை அழைத்தும் அவள் அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவளுடன் பேசாமல், அவள் இசையை கேட்காமல் எதையோ இழந்தது போலே தவித்தான் ஸ்ரீகாந்த்.
இது மாற்றமா? தடுமாற்றமா?
என் நெஞ்சிலே பனி மூட்டமா?
நீ தோழியா இல்லை எதிரியா என தினமும் போராட்டமா?
என் வேலையை விடுவதை தவிர வேறு வழி இல்லையா?
நினைவுகளிலிருந்து மீண்டவனின் மனம் திரும்பவும் அதையே கேட்டது. என் வேலையை விடுவதை தவிர வேறு வழி இல்லையா?
இரவு முழுவதும் உறக்கமின்றி மனப்போராட்டத்தில் தவித்தான். காலை விடிந்ததும் மனதை ஒரு நிலைக்கு தள்ளிக்கொண்டான். இன்று ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட வேண்டியதுதான்.
கல்லூரிக்கு கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்தான். இருபது நாள் விடுப்புக்கு பிறகு இன்று கல்லூரிக்கு செல்கிறான்.
அவன் வீட்டு வாசலில் சில குழந்தைகள் 'டீச்சர்' விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தன.
மனதிற்குள் என்ன தோன்றியதோ அவர்களின் அருகில் சென்று சொன்னான். டீச்சர் விளையாட்டு வேண்டாம். டாக்டர் விளையாட்டு விளையாடுங்க. அதுதான் வாழ்க்கைக்கு நல்லது.
எனக்கு டாக்டர் விளையாட்டு பிடிக்காதே. எனக்கு பிடிக்காத டாக்டர் விளையாட்டை நான் விளையாடினா ராங்கா விளையாடி தோத்து போயிடுவேன்' என்றது ஒரு குழந்தை..
அந்த குழந்தையின் வார்த்தைகள் ஒரு நொடி சுருக்கென்று மனதை தைத்தது.
நமக்கு விருப்பமில்லாத ஒரு வேலையை செய்யும் போது தோற்றுத்தான் போவோமோ?
சட்டென தலையை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அவனை சுழந்துக்கொண்ட மாணவர்களுடன் அளவளாவிக்கொண்டே நடந்தான்.
அத்தனை நேரம் தன் மனதை அழுத்திக்கொண்டிருந்த குழப்பங்கள் எல்லாவற்றையும் மறந்தே போனான்.
அன்றைக்கு எடுக்க வேண்டிய பாடங்களை மனதிற்குள் தயார் படுத்திக்கொண்டு, வகுப்பறைக்குள் நுழைந்தான்
ஏதோ இருபது நாள் பிரிந்திருந்த காதலியை மறுபடியும் பார்த்தது போல் ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் பிறந்தது அவனுக்குள்ளே. அப்படியே பாடங்களுக்குள் மூழ்கி, கலந்துப்போனான்..
மாலை வகுப்புகள் முடிந்ததும் staff ரூமில் சென்று அமர்ந்தவனின் மனம் ஏதோ சில மணி நேர தியானத்திலிருந்து எழுந்தது போலே தெளிவடைந்திருந்தது.
அந்த வாரக்கடைசியில் மறுபடியும் சென்னை வந்தான் ஸ்ரீகாந்த்.
அன்று மாலை அவன் பதிலுக்காக அவனை தேடி வந்தார் மோகனாவின் தந்தை.
ஹாலில் அவர் அருகிலேயே அவன் தந்தையும் அமர்ந்திருந்தார்.
சொல்லுங்க. கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க? என்றார் மோகனாவின் அப்பா.
'எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு சார்' என்றான் ஸ்ரீகாந்த்
திடுக்கிட்டு நிமிர்ந்தனர் இருவரும்.
ஆமாம் சார். நான் ஏற்கனவே என் வேலையை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டேன். அது தான் என் முதல் மனைவி, அவளை நான் விட முடியாது.
டேய்! என்னடா பைத்தியக்காரன் மாதிரி பேசறே. மோகனா நல்ல பொண்ணுடா. தனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்னு அவ நினைக்கறதிலே எந்த தப்பும் இல்லை. பேசாம வேலையை விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கோ.
இல்லைப்பா. என்றான் அழுத்தமாய். அவ நினைக்கறது எப்படி தப்பில்லையோ, அதே மாதிரி நான் நினைக்கறதும் தப்பில்லை. எனக்கு வரப்போறவ என் முதல் பொண்டாட்டியையும் சேர்த்து ஏத்துக்கறவளாகத்தான் இருக்கணும்.
மோகனாவின் தந்தையை பார்த்து கைகூப்பி சொன்னான். 'நான் உங்களை எல்லாம் ஏதாவது கஷ்டபடுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க.
மோகனா கல்யாண பத்திரிக்கை எனக்கு அனுப்பினீங்கன்னா நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவேன். மோகனாகிட்டே என் முடிவை சொல்லிடுங்க சார்' நிதானமான குரலில் சொல்லிவிட்டு தன் தந்தையின் கனல் பார்வையை கூட பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தான் ஸ்ரீகாந்த்.
திங்கட்கிழமை காலை தெளிந்த மனதுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
'vector algebra' கரும்பலகையில் கைகள் எழுத, வகுப்பை துவங்கி, தன் முதல் காதலியுடன் மகிழ்ந்து, உருகி கலக்க துவங்கினான் ஸ்ரீகாந்த்.
Manathai Thotta ragangal - 01 - Unakkenna mele nindraai
Manathai Thotta ragangal - 03 - Kathale en kathale
{kunena_discuss:748}