“ஆமா, ஸ்டாடிஸ்-குள்ள ரொம்ப நேரம் வெச்சிருக்குறதும் நல்லதில்ல, கமென்ஸ் ரிவர்சல்…” மூவருமே பரபரப்பாக வேலை செய்தனர், மீண்டும் ‘சொய்ய்ய்ங்ங்ங்ங்’ ஒலி அதிகரிக்க கூண்டின் வண்ணக்கோலம் நிகழ்ந்தது, எல்லாம் அடங்கிய போது கூண்டு காலியாய் இருந்தது.
”நம்பவே முடியல பாஸ், எங்க தப்பாச்சுனே தெரியல…” வசந்தும் நி.நா-வும் மீண்டும் மீண்டும் அந்த மனிதன் கூண்டுக்குள் இருந்த காட்சியையே திரையில் அலசிக்கொண்டிருந்தனர்.
”அவ்ளோவும் வேஸ்ட்! வெரி சாரி ராஜ்!” நி.நா இலேசாய்க் கொஞ்சினாள், வசந்த் அவளைக் குரோதமாய் பார்த்தான் ‘ராஜ்’?!
”இல்ல நாம எதோ மிஸ் பண்ணிருக்கோம்… வசந்த் நாம எந்த டைம் டா குறி வெச்சோம்?”
“அவர் கடவுளைப் பார்த்துட்டு வந்த ஒரு வாரத்துக்குள்ள பாஸ்! அப்பத்தான் அவர் மெமரி புதுசா இருக்கும், நமக்கு வசதினு சொன்னீங்க… லிட்டரேச்சர் படிதான் டைம கால்குலேட் பண்ணோம் நானும் நி.நா-வும்…” வசந்த் தேவைக்கு அதிகமாகவே பதிலளித்தான், தன்னிடம் தவறில்லை என்று காட்ட, “ஒரு வேள அந்த ஆளு டுபாக்கூரா இருப்பானோ?”
ர.ரா ஆழ்ந்த சிந்தனைக்குப் போனான்… கடவுளைக் கண்டவன்… அத்தனை ஆதாரமும் பொய்யா? இப்படியா கூட்டமாக பொய் சொல்லியிருப்பார்கள்? நிச்சயம் இல்லை, பழைய ஆவணங்களில் அத்தனை பொய்யிருப்பதில்லை, வேண்டுமானால் ஆர்வத்தினால் கூட்டிக்குறைப்பார்கள், கவிதை என்று கொஞ்சம் நீட்டிமுழக்குவார்கள், ஆனால் ஆதாரமாய் பொய் சொன்னதில்லை…
“பாஸ்…” வசந்த் மெல்ல அழைத்துப் பார்த்தான், ர.ரா எதையும் பொருட்படுத்தாமல் கூண்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான், சட்டென ஏதோ பொறி தட்டியவனாய்ப் பரபரப்புடன் எழுந்து நின்றான்,
“வசந்த்…”
“பாஸ்?” இருவருமே எழுந்து நின்றனர்,
“அவர் கடவுளைப் பார்த்த தேதியை எப்படி கணிச்ச?”
”அஸ்ட்ரானமி பாஸ்! எந்த நட்சத்திர மண்டலம் எங்க இருந்துச்சு, எந்த கிரகம் எங்க இருந்துச்சுனு பாட்டுல பாடி வெச்சிருக்காங்க, இரண்டு ‘காமெட்’ சைட்டிங் கூட ரெக்கார்ட் ஆயிருக்கு பாஸ், இதெல்லாம் வெச்சுதான்…”
“மூவாயிரம் வருஷம் டா! எவ்வளவு தப்பாக வாய்ப்பிருக்கு?”
“கொஞ்சம்தான் பாஸ்…” வசந்த் சாதாரணமாக சொன்னான், ர.ரா அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தான், “ஓ.கே., ஓ.கே. ஒரு நிமிஷம்…” தன் கைக்கணினியை இயக்கினான், ”கோடில ஒரு சதவிகிதம் பாஸ்… அதாவது… பாஸ்!” வசந்த் அலறினான், இதையே எதிர்ப்பார்த்தவனைப் போல ர.ரா அவனைப் பார்த்தான்…
”ம்ம்… சொல்லு வசந்த்?”
“மூனு நாள்வரைக்கும் முன்னப் பின்ன போகலாம்!”
“அப்படினா…” நி.நா மெல்ல இழுத்தாள், ர.ரா பதில் சொன்னான்,
“கண்டதேவர் கடவுளைப் பார்க்குறதுக்கு முன்னாடியே நாம அவரை இங்க இழுத்துட்டு வந்துட்டோம்…”
”இல்ல பாஸ்… கொஞ்சம் வேற மாதிரி…”
“முன்னாலயும் இல்ல, பின்னாலயும் இல்லனா?”
“மை காட்! நிஜமாவா வசந்த்?”
வசந்த் தன் கைக்கணியை ர.ரா-விடம் நீட்டினான், அதில் கண்டதேவர் பற்றிய தகவல் பக்கம் இருந்தது, அவர் கடவுளுடன் பேசிய உரையாடல் இருந்தது, ர.ரா படித்தான், அவனால் அதை நம்பவே முடியவில்லை,
கண்டதேவரிடம் கடவுள் சொன்ன முதல் சொற்கள்…
“வந்தனம்… கடவுளைக் கண்டீரா?”