" சார் நாளைக்கு நீங்க ஒரு மீட்டிங் அட்டென் பண்ணனும் ..அதற்கான டிடைல்ஸ் இந்த பைல்ல இருக்கு "
" ஓ "
" நான் ஏற்கனவே க்ளைன்ஸ் கிட்ட பேசிட்டேன் ..சோ உங்களுக்கு அதிக வேலை இருக்காது ..இது ஜஸ்ட் ஒரு பார்மாலிடிஸ்காக தலையை காட்டினா போதும் .. "
" அப்படின்னா நீங்க நாளைக்கு மீட்டிங்கு வரலையா ?"
" நோ சார் .. நான்தான் ஒரு மாசம் முன்னாடியே லீவ் அப்பளை பண்ணேனே "
" ம்ம்ம்ம் ... என்ன ரீசன்னு தெரிஞ்சுக்கலாமா ?"
" கண்டிப்பா உங்களுக்கு தெரியனும் சார் .. ஆனா , இப்போ இல்ல ... "
" வாட் ?"
" ஐ மீன் , எல்லாம் நடந்ததும் நானே சொல்லுறேன் "
" ஓகே யுவர் விஷ் "
" சார் இன்னொரு விஷயம் "
" என்ன ?"
" இந்த மீட்டிங் கொஞ்சம் முக்கியமான மீட்டிங் .. சோ கண்டிப்பா நீங்க மட்டும்தான் போகணும் " என்று தீர்க்கமாய் சொன்னான் தேவ் என்கிற சஹாதேவன் .. துஷனும் சரியென தலையாட்ட , தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் லேசான புன்னகை கீற்றுடன் வெளியேறினான் சஹாதேவன் ... கடந்த சில வருடங்களில் அவன் சிரித்த தருணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் .. அதில் இதுவும் ஒன்று இந்த புன்னகையின் பின்னால் சந்தோசம் விட குரோதம் தான் இருந்ததோ ..?
" என்னடா இன்னமும் அவன் போன் பண்ணல ?" கோவமாய் கத்தினான் யுதீஷ் ..
" இரு இரு பண்ணுவான் " - பல்லவன்
சரியாய் நகுலின் செல்போன் சிணுங்கியது ... திரையில் " தேவ்" என்று ஒளிரவும் நண்பர்கள் மூவரும் போனை ஸ்பீகரில் போட்டு பேச தொடங்கினர் ..
" மச்சான் "- பல்லவன்
" செத்தான் டா அவன் ..... ப்ளான் சக்சஸ் .. இந்த நாளுக்காகத்தான் மச்சான் காத்திருந்தேன் .. அவன் நம்பிட்டான் டா .. என்னை மொத்தமா நம்பிட்டான் "
" நீ எங்க இருக்க சஹா " - யுதீ ..
" உங்களை பார்க்கத்தான் டா வந்துகிட்டு இருக்கேன் ..நாளைக்கு நமக்கு ரொம்ப முக்கியாமான நாள் ஆச்சே .. "
" மச்சான் வரும்போது சரக்கு வாங்கிட்டு வா " என்று விளையாட்டாய் சொன்னான் பல்லவன் .. மற்ற நண்பர்களாவது என்றாவது மது அருந்துவார்கள் ..,.ஆனால் பல்லவனுக்கோ மதுவின் வாசம் கூட பிடிக்காது .. அனைவரையும் கொஞ்சம் இயல்பாக்கத்தான் அவன் அப்படி பேசுகிறான் என்று புரிந்த கொண்ட மூவரும் மென்மையாய் புன்னகைத்தனர் ..
" மச்சி , நீயே கேட்கும்போது வாங்காமல் இருப்பேனா டா ? நினைச்சது நடக்கட்டும் உன்னை குடிக்க வைக்கிறேன் " என்று தேவ் மிரட்டவும்
" ஆளை விடுடா " என்றான் பல்லவன் .. இப்படியாய் கலகலப்பாய் பேசிவிட்டு சிறிது நேரத்தில் அவர்களோடு நேரிலேயே இணைந்து கொண்டான் தேவ் ..
தேவ் , யுதீ , பல்லவன் , நகுல் நால்வருக்குமே அன்று உறக்கமில்லா இரவுதான் .. எப்போதடா விடியும் என காத்திருந்தனர் நால்வரும் ...
மறுநாள் ..!
" எனைஎன்னசெய்தாய்வேங்குழலே ...
எனக்கும்உனக்கும்ஒருபகைஇல்லையே
நாளும்சுகராகம்தந்துஅனல்மெழுகாய்
எந்தன்இளமனம்இளகிடவே
எனைஎன்னசெய்தாய்வேங்குழலே "
அந்த அறை முழுதும் நிதயுவனியின் குரல் நிறைந்திருந்தது .. தன் முன்னே சில சிறார்கள் அமர்ந்திருக்க , வீணை மீட்டி கொண்டே இனிய குரலில் அனைவரையும் வசியப்படுத்தி கொண்டிருந்தாள் யுவனி .. ஏன் என்று புரியாமலே அவள் அன்று கலவை உணர்வில் இருந்தாள் ... ஒருபுறம் என்றுமே இல்லாத ஓர் அமைதி , இன்னொரு புறம் ஏதோ தீங்கு நடப்பது போல பதட்டம் ... துன்பமோ இன்பமோ அதை அவள் மனம் உணருகின்றதோ இல்லையோ , அவளது விரல்களும் வீணையும் அதை அறியும் ..அதனால்தான் காலையிலேயே அக்கம் பக்கம் இருக்கும் சிறார்களுக்கு வழக்கம் போல பாடம் கற்றுகொடுத்துவிட்டு இப்போது கையில் வீணையுடன் அமர்ந்துவிட்டாள் .. எது நடப்பதாய் இருந்தாலும் அது கண்ணனுக்கே சேரட்டும் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள் நிதயுவனி ..
அன்று மாலை ....
" இந்த இடம் தானே தேவ் ?"
" ஆமா டா "
" கண்டிப்பா வருவானா ? ஒருவேளை கூட யாரும் வந்தா ?" - நகுல்
" நாம நாலு பேரு இருக்கோம் .. பார்த்துக்க மாட்டோமா ? " - சஹாதேவன் ..
" இருந்தாலும் அவன் முட்டாள் டா .. ராத்திரி 9 மணிக்கு என்னடா பார்மல் மீட்டிங் இருக்கும் ? இதை கூடவா யோசிக்கல ?" - யுதீ ...
" அவனா முட்டாள் ? பொருக்கி ...வரட்டும் "
அது ஒரு அழகான வீடு .. அந்த வீட்டுக்கு உரிமையாளன் நம்ம சஹாதேவன் தான் .. ஆனா இது யாருக்கும் தெரியாது .. இதோ அந்த வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் துஷனுக்கும் தெரியவே தெரியாது ... பல வருடங்களாய் இவர்கள் பின்னிய வலையில் சிக்கினான் துஷன் .. தேவ் தந்த விவரங்கள் படி இந்த வீட்டில் தான் பேச்சுவார்த்தை போலும் ..என்று தனக்குள்ளேயே சொன்னபடி அந்த வீட்டிற்குள் நுழைந்தான் துஷன் .. காலையில் இருந்து வேலையாய் இருந்த அயர்வினாலோ, அந்த வீட்டில் யாரும் இருப்பதற்கோ அறிகுறியே இல்லையே என்பதை கூட அவன் உணரவில்லை ...
துஷன் வீட்டிற்குள் நுழைந்த நொடி அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தது ..
" ஹே " என்று துஷன் பேச ஆரம்பிக்குமுன்னே , அவன் மார்பில் எட்டி உதைத்தான் பல்லவன் .. நால்வரும் அவனை சுற்றி வளைத்து விட , யார் என்ன என்று தெரியாமலே அவர்களால் தாக்கப்பட்டான் துஷன் ..
எட்டு வருடங்களுக்கு முன்பு ..
" அம்மா, நான் போயிட்டு வரேன் .. " என்று வழக்கம் போல அன்னையிடம் ஆசிர்வாதம் வாங்கினாள் நிதயுவனி ..
" பத்திரமா போயிட்டு வா கண்ணம்மா "
" கவலையே படாதிங்க அம்மா ... ஒரு மாசம் தானே ? சீக்கிரமா ஓடிரும் .. அதுவும் நான் தனியாவா போறேன் அதான் என் நண்பன்ன்னு சொல்லி ஒரு வானர கூட்டமே இருக்கே " என்று சிரித்தாள் யுவனி ..
யுவனி , தந்தை இல்லாமல் வளர்ந்த மகள் .. தாயிடம் அதிகமான அன்பு கொண்டவள் .. பள்ளி முடிந்தால் விளையாட்டு , அதன்பின் தொலைக்காட்சி என்று சாதாரண வாழ்க்கை வாழ கூடாது என்பதில் தீவிரமாய் இருப்பவள் .. அவளைப்போலவே நினைக்கும் அஞ்சா நெஞ்சங்கள் தான் நமது தேவ் , யுதீஷ் , பல்லவன் மற்றும் சஹாதேவன் ... அடிப்படையிலேயே பொறுப்பாக சிந்திப்பதாலோ என்னவோ அவர்களுக்குள் ஆழமான நட்பு மலர்ந்தது .. ஆண் பெண் என்ற பேதமின்றி சலனமில்லாத அவர்களின் நட்புக்கு பின்னால் அவர்களது பெற்றோரும் துணை நின்றனர் ..