"இந்திரன் மகளோ - இல்லை
மலர்களின் இதழோ;
பிரம்மனின் ஓவியமோ - இல்லை
பைந்தமிழ் காவியமோ;
அழகென்ற சொல்லுக்கு அர்த்தம்தர பிறந்தாலோ - இல்லை
அழகென்றசொல் அவளுக்கு அர்த்தம்தர பிறந்ததோ!!!..."
என்று ஒரு கவிதையும் தோன்றியது.
அவள் சிறிது நேரம் என் அம்மா, அப்பா மற்றும் தம்பியிடம் பேசிவிட்டு கிளம்புவதாய் கூறி வெளியே வந்தாள்.
என்னைப் பார்த்து முகபாவனையில் "உடை எவ்வாறு இருக்கிறது" என்றாள்.
நான் பெருமூச்சு விட்டு முகபாவனையில் "வார்த்தையே வரவில்லை. அத்தனை அழகு!" என்றேன்.
அவள் சிரித்துக் கொண்டே சென்றாள். அவள் போகின்ற வரை அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
விடுமுறை முடிந்ததும் கல்லூரிக்குக் கிளம்பினோம். புகை வண்டியில் ஏறும்போது சில மிட்டாய்களை நிஷா என்னிடம் கொடுத்தாள்.
“சும்மாதான் கொடுத்தேன்” என்றாள். அவள் கொடுத்த மிட்டாய்களை எனக்கு உண்பதற்கு மனமில்லை. அதை அப்படியே பத்திரமாக வைத்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு, நிஷா எனக்கு ஒரு செய்தித்துணுக்கு அனுப்பியிருந்தாள்.
அதில் "எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். எனக்கு கல்யாணம் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது" என்று இருந்தது.
அவ்வளவுதான், அந்த செய்தித்துணுக்கை படித்தவுடன் உலகமே இருண்டதுப் போல் இருந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.காதலைச் சொல்லத் தாமதித்ததால் வந்த விளைவுதான் இது என்று என்னை நானே திட்டினேன்.
பிறகு நானே, காதலைச் சொல்லி அவள் இல்லை என்றால் அந்த பாரத்தைத் தாங்க முடியுமா?
சொல்லிப் பார்க்கலாமே?
சொன்னவுடன் அவள் இந்த எண்ணத்தில்தான் பழகினாயா இனி என்னோடு பேசாதே என்றால்?
அவள் புத்தகம் வழியாகக் காதலைச் சொன்னாளே, பின் எங்கே என்னைப் பார்த்தாலும் சிரித்தாளே, என் நண்பனிடம் என்னைப் பற்றிய விபரங்களையும், கைப்பேசி எண்ணையும் வாங்கினாளே, இரவு 1 மணிவரைக்கூட என்னோடு பேசினாளே, தாவணியில் தேவதைப்போல் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்தாளே? ஆனால் காதல் பிடிக்காது என்றாளே? இப்படியே மனம் குழப்பத்தால் வெடித்துவிடும் போல் இருந்தது. ஒருமுறை, அவள் அவளுக்கும் சேர்த்து ஊருக்குச் செல்ல பயணச்சீட்டு எடுக்கும்படி கூறினாள். அவள் கொடுத்த பணத்தை அப்படி வைத்துக்கொண்டு என் பணத்தில் பயணச்சீட்டு வாங்கினேன். இப்பவும் அவள் கொடுத்தப் பணத்தை அப்படியே வைத்திருக்கிறேன்.
ஆனால், அவள் எனக்கு மிகவும் பிடித்தமானத் தோழியும் கூட. இப்போது எனக்கு இரு வழிகளே இருந்தன.
நட்பா? காதலா?
காதலைச் சொல்லி இல்லை என அவள் கூறிவிட்டாள் என் நல்லத் தோழியை இழந்துவிடுவேன்.
அடுத்தது, அன்று இரவே தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாய் அவள் கூறினாள். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்றாள்.
அதை என்னால் தாங்க முடியவில்லை. என் குழப்பங்களே என்னை நன்றாக குழப்பின.
அவள் இன்றி என்னால் வாழ முடியுமா?
ஏன் முடியாது?
இருபது வருடங்களாக என்னை வளர்த்த தாய் தந்தையைவிட, இரண்டு வருடம் முன் தெரிந்த நிஷா பெரியவளோ?
ஆனால், காதலுக்கு எப்போதுமே வலிமை அதிகம்.
சில நாட்களில் அவள் திருமணமும் நடந்துவிட்டது. வாழ்வதே மிகவும் பாரமானது.
சிறு நத்தையின் மேல், பெரும் பாறையை வைத்ததுப்போல் கொடுமையாய் இருந்தது. நாட்கள் மிகமிக மெதுவாகவும், பாரமாகவும் நகர்ந்தன.என் வாழ்க்கையே வெறுத்தது. வாழவே பிடிக்கவில்லை. கஷ்டங்கள் தாங்காமல் தனிமையை அதிகம் விரும்பினேன்.
கடற்கரைக்கு வந்து அமர்ந்தேன். கடல் அலைக்கூட என்னவள் பெயரை அழைப்பதாய் உணர்ந்தேன்.
என்மீது படும் சிறு நகத்தளவு கீறலுக்கே கதறி அழும் தாய், கோபமாய் பேசினாலும் மறு நொடியில் மறக்கும் தந்தை. என் உயிருக்கு உயிரான செல்லத் தம்பி மற்றும் தன் உயிரைவிட என்னை பெரிதாக நினைக்கும் சரவணன் இவர்களின் நினைப்பால் என்மனம் தல்லாடியது.இருந்தாலும், காதலுக்குத்தான் வலிமை அதிகம். இப்போது என்னுள் வலியும் அதிகம்.கடலையே உற்றுப் பார்த்தேன்.
கடலினுள் சென்று விடலாமா?
இல்லை, அது தவறு. அம்மா, அப்பா, தம்பி மற்றும் நண்பன் சந்தோஷம் இழப்பார்கள்.
இருந்தாலும் நான் சந்தோஷமாக இல்லையே?
அதனால் மற்றவர்கள் சந்தோஷம் இழக்கவேண்டுமா? மறுபடியும் குழம்பினேன்.