எங்கும் இருட்டு ...ஒரே நிசப்தம் “ஒஹ் கரண்ட் கட் “! என்று சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்டு மெதுவாக திரும்பி பார்த்தாள் பக்கத்தில் ஏதோ அசைவதை போல இருந்தது “ஐயோ யாரது ...” மனதில் பயந்தவள் சட்டென்று திரும்பி கொண்டாள் ..”கடவுளே காப்பாத்துங்க” என்று வேண்டி கொண்டு மறுபடியும் திரும்பி பார்த்தாள் ..
காற்று சர்ர்ர் என்று வீட்டினுள் வீச மறுபடியும் யாரோ நின்று கை அசைப்பதை போல இருந்தது. வெகுவாக பயந்தவள் அந்த அசைவை பார்த்துக்கொண்டே பின்னாலேயே நடந்து தீப்பெட்டி தென் படுகிறதா என்று தேடினாள் .. கையில் அகப்பட்டது “ஹப்ப்பா” என்று நிம்மதி மூச்சு விட்டு கொண்டே அசைவது என்ன என்று முதலில் பார்க்கலாம் என்று ஒரு தீ குச்சியை பற்ற வைத்து பார்த்தாள் .சற்று முன் தன்னை இம்சை செய்தது என்று தொங்க விட்ட ஷால் “ச்சே இது தானா” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் முத்து முத்தாக வேர்த்ததை துடைத்தாள். தீ குச்சி விரல் சுட அதை கீழே போட்டவள் அடுக்களை கதவை பார்த்தாள் எங்கு பார்த்தாலும் யாரோ நிற்பது போலவே இருந்தது அவளுக்கு “கடவுளே இப்போ தான் கரென்ட் போகனுமா, என்னை தயவு செய்து சோதிக்காதிங்க நான் தாங்க மாட்டேன் “ என்று அவரிடம் கெஞ்சினாள்.
கண்ணை தேய்த்து விட்டு கொண்டு திரும்ப கடவுளை துணைக்கழைத்து மெழுகுவர்த்தியை தேடினாள் .மெழுகுவர்த்தியை ஒரு வழியாக கண்டு பிடித்து எடுத்தவள் அதை எடுத்து கொண்டு எதில் இருந்தோ தப்பிப்பது போல் அடுக்களை கதவை முதலில் மூடினாள்.
“கரென்ட் வரும் வரை அடுப்படியே திருப்பதி “ என்று தனக்குள் சொன்னவள் ஏதோ தீயும் வாடையை அப்போது தான் உணர்ந்தாள் “அச்சோ என் தோசை!” என்று அவசரமாய் வந்து அடுப்பை அணைத்து கருகிய தோசையை எடுத்து தூக்கி போட்டு விட்டு மறுபடியும் ஆரம்பித்தாள் (தோசை சுட தான்).
சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்தவள் “எப்போ தான் இந்த கரென்ட் வருமோ?” என்று சலித்த கொண்டே கண் மூடி திறந்த போது “பளிச்” என்று விளக்கு எரிந்தது, ஹாலில் கத்த விட்ட தொலைக்காட்சி அலறியது அதோட சேர்ந்து பயத்தில் சற்று மெலிதாக அலறியவள் பின் “ஹையோ கரண்ட் போகும் போது தான் பயம் என்றால் இப்போ வரும் போதே டெரர் காட்டுதே” என்றவள் அதுவா காட்டலை மகளே நீ தான் பயந்து சாகுற என்று குட்டு வைத்தும் கொண்டாள்.
மெதுவாக எழுந்து முன்னறைக்கு வந்து அமைதியாக தொலைக்காட்சியில் லயித்தாள் .
ஒரு மணி நேரம் கடந்து இருந்தது “டோம்” என்ற சத்தம் கேட்டதும் சற்ற அரண்டவள் என்ன என்று தெரியலையே என்று மனம் திக் திக் என்று அடித்து கொள்ள என்னவோ தெரியலையே என்று யோசித்தாள்.
பின் ஞாபகம் வந்தவளாக “ஐயோ மாடி கதவை மூடவே இல்லையே யாரோ நம் மொட்டை மாடியில் குதித்து இருப்பாங்களோ “ என்று திகிலாகி கண்ணை உருட்டி கொண்டு வேர்த்து வழிய மாடி படிக்கட்டு வரை சென்றாள்.
காற்றில் சருகுகள் “சர சர சர” என்று ஒலி எழுப்பியது யாரோ நடப்பதை போல இருப்பதாக கற்பனை செய்தவள் வெகுவாக பயந்தாள் .”குடு குடு” என்று ஓடி வந்து முன்னறை சோபாவில் கால் மடக்கி அமர்ந்து மூச்சு வாங்கி கொண்டே முன்னறை கதவை பார்த்தவள் மனதிற்குள் “போச்சு திருடன் வந்து என்னை கொன்னுட்டு வீட்டில் உள்ள நகை எல்லாம் எடுத்துட்டு போயிடுவானோ” என்று பயத்துடன் யோசித்தவள் நடுங்கி போனாள்.” கடவுளே முருகா “ என்று மனதிற்குள் சேவித்து கொண்டே அமர்ந்திருந்தாள் .
ஏதாவது செய் என்று மனம் சொல்ல பேசாமல் முன்னறை கதவை மூடி விடுவோம் பின் நடப்பது நடக்கட்டும் என்று யோசித்தவள் தைரியத்தை திரட்டி கொண்டு ஓடிப்போய் கதவை அறைந்து சாத்தி விட்டு வந்து ஆசுவாசமாக அமர்ந்தாள் .
“ஹப்பா இப்போவே கண்ணை கட்டுதே இன்னைக்கு சிவ ராத்திரி தான் போல சிந்து” என்று தலையில் கை வைத்து அமர்ந்த நேரம்.......” கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற சத்தம் மறுபடியும் அவளை அலற வைத்தது .
அழைப்பு மணி என்று தெரிந்ததும் அலறலை சற்று மெதுவாக வாய்க்குள் தள்ளியவள் “யாரது” என்று மெதுவாக கேட்டாள் (உன் சத்தம் உனக்கே கேக்கலை ஹி ஹி ) என்று கேலி செய்து கொண்டே சற்று வேகமாக “யாரது” என்றாள் .
மறுபடியும் “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று அழைப்பு மணி அலறவும்
“ஒஹ் நாம என்ன கத்தினாலும் தெருவில் நின்று மணி அடிப்பவருக்கு எப்படி கேட்கும்” என்று யோசித்து கொண்டே சற்று நிதானப்படுத்தி கொண்டு மெதுவாக முன்னறை கதவை திறந்து பின் உள்ள கிரில் கதவை திறந்து “யாரது” என்று சற்று பயத்துடன் கேட்டாள்.
“அம்மு அப்பாடா” என்ற சத்தம் கேட்டதும் அது வரை இருந்த கலக்கம் மறைய கண்ணில் சிறு கண்ணீர் துளி ஜனிக்க ஓடி போய் முன்னில் உள்ள கதவின் பூட்டை திறந்தாள் .
அப்பாவை பார்த்ததும் சட்டென்று கண்கள் நிறைய “வந்துடீங்களா அப்பா..” என்று சொல்லி கொண்டே அவரின் மேல் சாய்ந்தாள்.
“என்னடா அம்மு ரொம்ப பயந்துட்டியா உன் அம்மா தான் இந்த குட்டி கழுதை பேச்சு தான் பெருசா பேசுவா இராத்திரி பூரா பயந்து தூங்கவே மாட்டானு சொல்லி சாப்பிட்டதும் கிளப்பி விட்டா , அவ சொன்ன மாதிரி தான் நீ இருக்க” என்று அணைத்து கொண்டே சிரித்தார் .
“போங்க அப்பா சிரிக்காதீங்க..” என்று முதலில் சிணுங்கியவள்.
பின் ” அப்பா இனிமே நான் தனியா இருக்கேன்னு சொல்லவே மாட்டேன் ஹப்பா ஒரு நாள் பட்டதே போதும் இனி எந்த விசேஷம் என்றாலும் நான் தான் முன்னாடி நிப்பேன் பாருங்க” என்றாள்
“அதையும் பாப்போம் டா சின்ன குட்டி” என்றவர் கிண்டலாக சிரித்து கொண்டே வீட்டினுள் அழைத்து சென்றார்.
இப்போது வீட்டினுள் நுழைந்தவள் மனதில் நிம்மதியாக இருந்தது.தான் பயந்ததை நினைத்து சிரிப்பு கூட வந்தது . அப்பாவிடம் சொல்லிக்கொண்டு மாடி அறை வந்தவள் கதவு தாளிட்டு மூடி இருப்பதை கண்டு சத்தமாக சிரிக்க வேண்டும் போல இருந்தது. “தனிமை சில நேரம் தான் இனிமை பல நேரம் கொடுமை !!“என்று நினைத்து கொண்டு நிறைவுடன் அப்பா கிழே இருக்கும் தைரியத்தில் உறங்க ஆரம்பித்தாள் .
This is entry #55 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}