அது ஒரு மனநல ஆராய்ச்சிக்கான வாய்ப்பு. மிகச்சிறந்த திறமைசாலிகளுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு அது.
அன்று தன்னிடம் இதைப்பற்றி இலக்ஷ்மனன் பேசியதை நினைவு கூர்ந்தாள் ஊர்மிளா.
“ நல்ல வாய்ப்புத்தானே லக்ஸ்..போயிட்டு வாயேன்..நானும் அப்பப்போ வந்து உன் கூட இருக்கேன்”
“ப்ச்ச்ச்.. ஒரு வருஷம் நீ இல்லாமல் எப்படி இருப்பேன் மிளகாய்?”
“ ஹும்கும்.. ஒரு வருஷம் இல்லை.. பதினொரு மாசம்தான்.. நீதானே சொன்ன, இந்த ஒரு வருஷத்துல நீ எப்போ வேணும்னாலும் ஒரு மாசம் லீவ் போட்டு இங்க வரலாம்ன்னு ? முதலில் கிளம்பி போ ..வேலைய பாரு.. ஆறு மாசம் கழிச்சு லீவ் போட்டு வா.. அப்படி இல்லன்னா, வேலையை முழுமூச்சாய் முடிச்சு கொடுத்துட்டு பதினோறாவது மாசமே வந்திடேன்” என்றாள் ஊர்மிளா.
“ இதுக்கு என்ன அவசியம்டா? நல்ல வேலை, அழகான வாழ்க்கை, அருமையான பொண்டாட்டின்னு என் லைஃப் நல்லாத்தானே போகுது? எதுக்கு என்னை போக சொல்லுற ?” என்று அவன் கெஞ்சவும்,அவன் கன்னங்களில் எம்பி முத்தமிட்டவள்,
“ இது உனக்கு நல்லவாய்ப்பு லக்ஸ்..நான் உன் வாழ்க்கையில வெற்றியாக இருக்கனும்னு நினைச்சேன்..முட்டுக்கட்டையா இருக்கனும்னு நினைக்கல..இப்போ நீ எனக்காக இந்த வாய்ப்பை வேணாம்ன்னு சொன்னால், நான் உன் வாழ்க்கையில தடையா இருக்கேன்னு எனக்கு கஷ்டமாக இருக்கும். அதுவும் இல்லாமல் நாம ஜெயிக்கனும்.. நம்மளபத்தி தப்பா பேசினவங்க முன்னால வாழ்ந்து காட்டனும்டா” என்றாள். அதற்கு மேல் அவன் எதிர்த்து பேசவில்லை !
அவளுக்காக சென்றான் அவன். கடல்கள் தாண்டி, மலைகள் தாண்டி, வா என்று அழைத்தால் இமைக்கும் நேரத்தில் வரமுடியாத தூரத்திற்கு சென்றான் அவன்.அவனை அனுப்பி வைத்துவிட்டு அவள் பட்ட பாடு அவளுக்கு மட்டுமே தெரியும் !
அவ்வளவு பெரிய வீட்டில் எல்லா இடங்களிலும் நினைவாய் நிறைந்திருந்தான் இலக்ஷ்மனன். அவள் எதிர்ப்பார்த்ததைவிட கொடுமையாக இருந்தது தனிமை.
அவன் காதல் முகத்தைக் காணாமல், அவன் இறுகிய அணைப்பில் நெகிழாமல், பித்து பிடித்து போயிருந்த நாட்கள் அவை. சமைக்க மறந்து, உணவுன்னும் எண்ணம் கூட இல்லாமல் அவனது தலையணையிலும்,உடைகளிலும் அவனது வாசத்தை நுகர்ந்து அவனது அருகாமையைத் தேடி ஏங்கிய நாட்கள் அவை.
அவளுக்காவது இலக்ஷ்மனனின் நினைவுகள் என்று சொல்வதற்கு ஒரு வீடே இருந்தது! ஆனால் இலக்ஷ்மனன்? ஒவ்வொரு வினாடியும் அவளைத் தேடினான். ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து, கண்மூடி கண்திறக்கும்போது என்னவள் அருகில் இருக்க மாட்டாளா? என்று மானசீகமாய் கேட்டு ஏங்குவான்.
ஆனால், இருவருமே நல்ல நடிகர்கள். பிரிவின் துயரால் தாம் வாடுவதை ஒருவரிடம் இன்னொருவர் காட்டிவிடக் கூடாது என்பதற்காகவே காணொலி அழைப்பில் பேசும்போது மலர்ந்த முகத்துடன் நடிப்பார்கள். முதல் இரண்டு மாதங்கள் இப்படி நடிப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. அதன்பின் இதுதான் எதார்த்தம் என்பதை அவர்களின் மனம் ஏற்கத் தொடங்கியது.
மீண்டும் வாழ்க்கையை ரசித்து வாழத் தொடங்கினார்கள். ஈர முத்தமும் இடைவிடாத ஸ்பரிசமும் தான் காதல் என்ற நிலையை கடந்திருந்திருந்தார்கள். அலைப்பேசியில் உரையாடினார்கள். அந்த உரையாடலை அசைப்போட்டார்கள். கிடைக்கும் இடைவெளிகளிலெல்லாம் அந்த நேசம் பொங்கும் குரலை நினைத்துப் பார்த்துக் கொண்டாடினார்கள்.
காணொலியில் காதல் வளர்த்தார்கள். பார்வையால் பேசிக்கொள்ள கற்றுக் கொண்டார்கள். அவளுக்காக மோதிரம் வாங்கி காணொலியில் மானசீகமாய் அணிவித்தான் இலக்ஷ்மனன். அவனுக்கு பிடித்த சாக்லெட் கேக் செய்து காணொலி வழியாய் மானசீகமாய் ஊட்டி விட்டாள் ஊர்மிளா.நிறைய கொஞ்சிக் கொண்டார்கள். நிறைய சண்டை போட்டார்கள். சண்டை போட்டதைவிட அதிவேகமாய் சமாதானம் அடைந்தார்கள். காலையில் எழுந்ததுதொடங்கி இரவு உறங்கும் வேளை வரை தூரமாய் இருந்தாலும் அருகில் வாழ்ந்தார்கள்!
அவர்களுக்குள் உண்டாகிய பிணைப்பு மிகவும் வலிமையாய் இருந்தது. பிரிவென்று கண்ணீர் விடுவதற்கோ, அல்லது புலம்புவதற்கோ மூன்றாம் மனிதரை நாடவில்லை அவர்கள். வேலையைத் தாண்டி மற்ற நேரங்களில் அவர்களது உலகம் மிக சிரிதாய் மகோன்னதமாய் இருந்தது.
அப்போதுதான் அந்த நற்செய்தியை இலக்ஷ்மனனுக்கு சொன்னாள் ஊர்மிளா. வயிற்றை மறைத்திருந்த சேலைப்பகுதியை விளக்கி, “பாப்பாவுக்கும் ஹாய் சொல்லு லக்ஸ்” என்றாள் அவள். அப்படித்தான் தான் கருவுற்றிருக்கும் செய்தியை சொல்லி இருந்தாள் அவள். ஆனந்தகண்ணீர் வடித்தான் இலக்ஷ்மனன்.பஞ்சமில்லாமல் காற்றில் முத்தங்களை அனுப்பிவைத்தான் அவன்.
எப்படிப்பட்ட பெண்ணிவள்? என்னிடம் என்ன இருக்கிறது ?எதற்காக என் வாழ்வில் வந்தாள்? என் தனிமையை விரட்டி, என்னை தூக்கி நிறுத்தி, இதோ தகப்பன் என்ற பதவியையும் தந்துவிட்டாள்.!