“ சாரிடா.. உன்னை ரொம்ப படுத்திட்டேன்.. உனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நான் அப்படி பேசியிருக்க கூடாது.. சாரி மிளகாய் .. இனிமேஅந்த பேச்சையே நான் எடுக்க மாட்டேன்” என்று அவன் கூறிட
“ என்னது பேச்சே எடுக்கமாட்டியா? அப்போ இதையெல்லாம் நான் என்ன பண்ணுறதாம்?” என்றபடி அருகில் இருந்த தாம்புலத்தின் பக்கம் கேமராவை திருப்பினாள் ஊர்மிளா. குங்குமம், மஞ்சள் உட்பட பல வண்ண கண்ணாடி வளையல்களை அந்த தட்டில் வைத்திருந்தாள்.
“ஹேய் மிளகாய் என்ன இது?”
“ இதையெல்லாம் வாங்கத்தான் ரெண்டு மணி நேரம் உனக்கு டிமிக்கி கொடுத்தேன் மை செல்ல புருஷா..” என்று கண்ணடித்தாள் ஊர்மிளா. மேலும்,
“ இப்போ நல்ல நேரம்தான் .. ஃபங்க்ஷன் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.
“ ஹேய் இரு..நான் சிட்டிவெஷன் சாங் போடுறேன்” என்ற இலக்ஷ்மனன், அந்த பாடல் வரிகளை தேர்ந்தெடுத்து ஒலிபரப்பினான்.
நிறைமாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடிசாயும் வாழைத் தண்டு,
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா!
அவனிடம் வளையல்களை ஒவ்வொன்றாய் காட்டிக் காட்டி தனக்குத்தானே அணிவித்துக் கொண்டாள் ஊர்மிளா. இடையிடையில் தன் குழந்தையிடமும் பேச மறக்கவில்லை அவள். அவர்களின் வாழ்வின் மிக அழகான நாளாய் அந்நாள் அமைந்தது. மறுநாளே தனக்கு தெரிந்த நண்பர் மூலமாக அவளுக்கு தங்க வளையல் அனுப்பியிருந்தான் இலக்ஷ்மனன்.
இப்படியே மேலும் இரு மாதங்கள் கடந்திட, இதோ நேற்றுத்தான் பிரசவத்திற்காக அனுமானிக்கப்பட்ட திகதியை தெரிந்து கொண்டு வந்திருந்தாள் ஊர்மிளா.
இதுதான் அவர்களின் வாழ்க்கை. தூரத்தில் வாழ்ந்தாலும் மனதால் நெருங்கியிருந்த வாழ்க்கை. இன்று சூழ்நிலை காரணமாக பல குடும்பத்தில் நடக்கும் கதைத்தான் இது. இலக்ஷ்மனனைப் போல எத்தனைப் பேர் உற்றவர்களையும் தாயகத்தையும் விட்டு பிரிந்து வாடுகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் பார்த்து வாயைப் பிளப்பவர்கள் கொஞ்சம் அவர்களின் உள்ளத்தின் கதவுகளையும் திறந்து பார்த்தால்தான் என்ன? புரியவில்லை அவளுக்கு. மனதில் இருந்த சஞ்சலங்களை தனிமையில் கொட்டி தீர்த்துவிட்டிருந்தாள் ஊர்மிளா.
மெல்ல தன் வயிற்றை வருடினாள் அவள்.
“ பாப்பா..நீங்க கூடிய சீக்கிரம் இந்த உலகத்தை பார்க்க போறிங்க.. அம்மா,அப்பா எல்லாரையும் பார்க்க போறிங்க. உங்களுக்கு அப்பாவை பார்க்கனும் போல இருக்கா? அம்மாவுக்கு அப்படித்தான் இருக்கு. உங்களை முதல்ல அப்பாவோட கையிலதான் கொடுக்கனும்னு ஆசையாக இருக்கும்மா.. அப்பாவை கூப்பிடலாமாடா? இல்ல வேணாமா? நீங்களே சொல்லுங்க..! அம்மாவுக்கு முடிவெடுக்க தெரியல கண்ணு.. அம்மாவோட மூளை சொல்லுறதை மனசு கேட்க மாட்டிங்குது டா”என்று குறைப்பட்டுக் கொண்டாள் ஊர்மிளா.
அவளின் மனம், இலக்ஷ்மனனின் அருகாமைக்காக ஏங்கியது. ஆனால் வாய்விட்டு சொல்லத்தான் தைரியமில்லை. இத்தனை மாதங்கள் பொறுத்திருந்துவிட்டு, இன்று அவன் முயற்சிகளுக்கு தடையாக இருக்க வேண்டுமா?வேண்டாமே ! என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவள், வழக்கம்போல தன் கலக்கத்தை கணவனிடம் காட்டிக் கொள்ளாமலேயே இருந்தாள். அவளின் தனிமையை உணராமல் இலக்ஷ்மனனும் அவளுடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருந்தான். முக்கியமான வேலை என்று கூறிவிட்டு அனேக நேரங்களில் அவளுடன் பேசாமல் இருந்தான் அவள்.
ஒன்பது மாதங்களை ஓரளவு சுமூகமாய் கடந்து வந்த ஊர்மிளாவிற்கு அந்த ஒன்றரை நாளை நெட்டித்தள்ள மிகவும் சிரமமாய் இருந்தது.
அன்று அதிகாலையே எழுந்துவிட்டிருந்தாள் அவள்.
“ பேபி, உங்க அப்பாவை நான் என்ன பண்ணட்டும் ? நாலு அடி கொடுக்கவா? நம்மள இப்படி தவிக்க விட்டுட்டு வேலை பார்க்கிறாராம். ஊர் உலகத்துல இல்லாத பொல்லாத வேலை!” அவனை அனுப்பி வைத்ததே அவள்தான் என்பதை மறந்துவிட்டிருந்தாள் ஊர்மிளா.
“ இருக்கட்டும் கவனிச்சுக்கிறேன்” என்று முணுமுணுத்தவள், தன் வீட்டு ஜன்னல் வெளியே ஏதோ ஒரு உருவம் தெரியவும் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டாள். மறுநிமிடமே சமையலறையில் இருந்து கத்தி ஒன்றை எடுக்க
“ அய்யோ மிளகாய், கொலையும் செய்வாள் பத்தினின்னு ப்ரூவ் பண்ணிடாதேம்மா” என்று குரல் கொடுத்தான் இலக்ஷ்மனன்.
தன் எதிரில் குறுநகையுடன் நின்ற கணவனை இமைக்காமல் பார்த்தாள் ஊர்மிளா.
“ நி… நிஜமாவே வந்துட்டியா லக்ஸ்?” காதல் ததும்பும் குரலில் கேட்டவளை ஓடி வந்து பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் அவன்.
“ஆமா மிளகாய்..நீதானே கூப்பிட்ட என்னை?”
“ நானா எப்போ?”