அவன் விழிகளில் வழிந்த ஆனந்தத்தை பார்வையால் பருகினாள் ஊர்மிளா. அவனை அணைத்துக் கொஞ்ச வேண்டுமென ஆவல் கொண்டாள்.
“ இப்போவே நான் வரேன் மிளகாய்..வேலையெல்லாம் கெடக்குது ! நான் வரேன்” உற்சாகமாய் சொன்னான் அவன்.
“ டேய்..கொன்னுடுவேன்.. நம்ம பாப்பாவுக்கு கடமைன்னா என்னனு உன்னை வெச்சுத்தான் க்லாஸ் எடுக்கனும்னு இருக்கேன்..அதற்குள்ள ஜகா வாங்குறியா? அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்..நீ கண்டிப்பா இதை விட்டுக்கொடுக்க கூடாது.. உனக்கு குட் நியூஸ் கொடுத்ததுக்காக, நீ எனக்கு தரும் கிஃப்ட் இதுதான்!” என்று திட்டவட்டமாய் கூறி இருந்தாள் ஊர்மிளா.
“ இருந்தாலும் நீ எப்படிடா இந்த நேரத்துல தனியா சமாளிப்ப? நான் வேணும்னா உன் வீட்டு ஆளுங்கக்கிட்ட பேசுறேன்டா. அவங்க உனக்கு துணையா இருக்கட்டும்” என்று அவளின் கோபத்துக்கு பயந்தபடியே மெல்லிய குரலில் சொன்னான் அவன். அவளோ மாறாக பெரிதாய் புன்னகைத்தாள்.
“நீ அவங்கக்கிட்ட பேசனும் லக்ஸ்..கண்டிப்பாக பேசனும்..ஆனா,அது இப்போ இல்லை.. இன்னும் எட்டு மாசம் கழிச்சு நாமளே அவங்களை தேடி போவோம்..உனக்கு குடும்பமில்லைன்னு சொன்னவங்கக்கிட்ட நீ உன் பொண்டாட்டி குழந்தையோடு நிக்கனும்” தீர்க்கமாய் சொன்னாள் ஊர்மிளா. அதற்குமேல் அவனால் அவளது பேச்சை மீற முடியவில்லை.
நாட்கள் மாதங்களாய் உருண்டோடியது. மசக்கையை உணர்ந்தாள்,அடிக்கடி மயங்கி விழுந்தாள் ஊர்மிளா.ஆனால், யாருடைய தயவையும் எதிர்ப்பார்க்கவில்லை. தன்னைத்தானே நன்றாக கவனித்துக் கொண்டாள் அவள். இலக்ஷ்மனனுக்கும் மனதளவில் உறுதுணையாக இருந்தாள்.
காணொலியில் நேசத்தை வளர்த்துக் கொண்டே போனார்கள். தன் வயிற்றில் வளரும் தங்களது மழலை எக்காரணம் கொண்டும் இலக்ஷ்மனின் அருகாமை இல்லாமல் ஏங்கிவிடக் கூடாது என்பதில் தீவரமாய் இருந்தாள் ஊர்மிளா.
வீட்டில் தனியாக இருக்கும்போதெல்லாம் குழந்தையிடம் பேசுவாள்.
“ பேபி, நாம இப்போ க்ரிக்கெட் பார்க்குறோம்..உங்க அப்பாவுக்கு தோனின்னா ரொம்ப பிடிக்கும்..
பேபி, இப்போ அம்மா சமைக்கிறேன்ல,இதுதான் சிக்கன். உங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்..
அப்பாவுக்கு நீலக்கலர்ன்னா ரொம்ப பிடிக்கும்.நீலம் எப்படி இருக்கும் தெரியுமா? இதோ அம்மா வானத்தை பார்க்கிறேன்ல?என் கண்வழியா உங்களுக்கு தெரியுதாடா? இதுதான் நீலம்..அம்மாவுக்கு பச்சைநிறம் ரொம்ப பிடிக்கும்..இதோ அம்மா பார்க்கிற செடி கொடி இருக்கே இந்த நிறம்தான் பச்சை..உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு தெரிஞ்சுக்க நானும் உங்க அப்பாவும் காத்திருக்கோம் செல்லம்.
பேபி, அப்பா பாருங்க வீடியோ காலில் ஹாய் சொல்லுறாங்க.. அப்பாவுக்கு லேசாய் தாடி வளர்ந்திருக்கு..க்ளீன் ஷேவ் பண்ண சொல்லுங்கடா” இப்படி ஒவ்வொரு முறையும் தன் பேச்சினில் கணவனை சேர்த்துக் கொள்வாள் ஊர்மிளா.
இலக்ஷ்மனன் மட்டுமென்ன அவளுக்கு சளைத்தவனா என்ன? ஒவ்வொரு நாளும் குழந்தைக்காகவும், அவளுக்காகவும் இணையத்தளத்தில் ஏதாவது பரிசு வாங்கி அனுப்பி அசத்துவான். தினமும் ஏதாவது குழந்தைகளுக்கான கவிதை, பாடல் கற்றுக் கொண்டு அவளுக்கு அனுப்பிவிடுவான். அதைக் கேட்டுத்தான் உறங்குவாள் ஊர்மிளா.
இப்படியாய் நாட்கள் ஓடிட,ஏழாவது மாதம் வந்தது.காணொலி அழைப்பில் மிகவும் வாட்டமுடன் காணப்பட்டான் இலக்ஷ்மனன்.
“ சொன்னால் கேளு மிளகாய்.. அவங்க பெரியவங்க.. ஏதாச்சும் தப்பா பேசினால் நாமளும் அதை பிடிச்சுகிட்டு இருக்கனுமா?”
“ஷபா..கொஞ்சநாள் நல்லாத்தானே இருந்த நீ லக்ஸ்?இப்போ என்னாச்சு? ஏன் மறுபடியும் முருங்கைமரம் ஏறுற நீ?”
“ நம்ம முதல் குழந்தைக்காக நீ மாசமாக இருக்க ! உனக்கொரு வளைகாப்புகூட செய்ய முடியல..எனக்கு கஷ்டமாய் இருக்காதாடா? உன் பிடிவாதத்தை மட்டும் பார்க்காமல் என் ஆசையை பார்க்க மாட்டியா?” என்றான் இலக்ஷ்மனன்.
வராத கோபத்தை வரவழைத்துக் கொண்டாள் ஊர்மிளா. “ உனக்கென்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா? வளைக்காப்பு எனக்கா இல்ல உனக்கா? நானே சும்மாத்தானே இருக்கேன், உனக்கென்னடா? தெரியாமல்தான் கேட்குறேன்.. இதற்கப்பறம் நாம குழந்தையே பெத்துக்க மாட்டோமா? அப்போ எனக்கு நீ வளைகாப்பு செய்ய மாட்டியா? டீல்ல விட்டுருவியா?”
“ என்னடீ லூசு மாதிரி கேட்குற?” இலக்ஷ்மனன் கடுப்பாகிட இணைப்பை துண்டித்துவிட்டாள் ஊர்மிளா. Facebook,Whatsapp, Viber,Hike,IMO, Messanger, Wechat, Telegram,இப்படி எல்லா வழிகளிலும் அவன் அவளைத் தொடர்புகொள்ள முயல, அடுத்த இரண்டு மணி நேரம் அவனுக்கு எந்த பதிலும் தரமால் அலைக்கழித்தாள் ஊர்மிளா.
அன்று மாலை,மீண்டும் காணொலி அழைப்பில் அவனை அழைத்தாள். கோபமாய் இருப்பானோ? லேசாய் பயம்தான் அவளுக்கும். பதுங்கிய பூனையாய் முகத்தை அவள் வைத்துக் கொள்ள அவனோ அப்போதுதான் மூச்சே விட்டான்