ஒரு நண்பனாக எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதலாக மட்டும் தான் அவனால் அப்போது பேச முடிந்தது. அடிக்கடி வயிற்றில் கை வைத்து அவள் தன் வலியை பொறுப்பதைப் பார்த்து என்னவோ என்று மனம் பதைத்தாலும், ஆண் பெண்ணுக்கான வரையறைகளில் அவன் சிக்கியிருந்ததால் நாகரீகம் கருதி அவன் அதைக் கேட்கவில்லை. அதைத் தான் அவன் தற்போது மிகவும் குற்ற உணர்ச்சியாக உணர்ந்தான்.
அதற்குப் பிறகு அவளைப் பார்க்க இயலவில்லை. சில நாட்கள் கழித்து அவள் எங்கேயோ யாருடனோ ஓடி விட்டதாக அவளைப் பற்றி ஊரார் வதந்தி பரப்பியபோது அவனால் அதை நம்ப இயலவில்லை. அதையே காரணமாகச் சொல்லி அவளுடைய புகுந்த வீட்டினர் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வியுற்றான். வீட்டின் மருமகளைக் காணவில்லை அதை இப்படி அலட்சியப் படுத்துகிறார்களே, நிச்சயம் வீட்டில் ஏதோ தவறாக நடந்திருக்கிறது. அதை வெளிக் கொணர வேண்டும் என்று அவனுக்கு சினம் பொங்கியது,
ஆனால் என்னவென்று அவன் சினம் கொள்ளுவான், பெற்ற தகப்பனே கண்டுக் கொள்ளாமல் இருக்கும் போது நியாயம் கேட்டு நண்பன் என்றுச் சொல்லிச் சென்றால், ஏற்கெனவே மந்திராவை நாக்கூசாமல் தூற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு இன்னுமொரு வாய்ப்புக் கொடுத்தாகி விடுமே? அவர்கள் என்னவும் செய்துக் கொள்ளட்டும்? இன்னும் பத்து திருமணங்கள் முடிக்கட்டும், அவனுக்கு அவர்களைப் பற்றியென்ன? அவனுக்கு தெரிய வேண்டியதொன்றே……மந்திரா நலமாக இருக்கிறாளா? அப்படி இருக்கிறாளென்றாள் எங்கிருக்கிறாள்? என்பதே அது.
அவள் காணாமல் போன அன்று என்ன நடந்திருக்கும்? கணவன் வீட்டிலிருந்து அவள் எங்கே போயிருந்திருப்பாள்? ஏற்கெனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தவளுக்கு இப்போது என்ன ஆகியிருக்கும்? நலமாக இருக்கின்றாளோ என்னமோ? தன்னுடைய தேடுதல் வேட்டைக்கு பலன் கிடைக்குமா? இந்த முறையாவது அவளைப் பார்க்க கிடைக்குமா? மனதிற்க்குள் சஞ்சலம் எழுந்தது.
யோசித்தவாறே வழிக் கேட்டு கேட்டு ஒருவழியாக அங்கிருந்த “மதர் தெரசா அனாதை இல்லத்திற்கு’ வந்துச் சேர்ந்திருந்தான் அவன். வரவேற்பறையில் போய் அமர்ந்தான். சற்று நேரத்தில் வெள்ளுடுப்பு தரித்த கன்னியாஸ்திரி ஒருவர் அவனை எதிர்க் கொண்டு விசாரிக்க,
மந்திரான்னு 24 வயசு பொண்ணு உங்க ஆசிரமத்தில இருக்காங்களா? எனக்கு அவங்களைப் பார்க்கணும் என்னுடைய பெயர் ரித்விக்” என்றான். சில பல விசாரணைகளுக்கு பிறகு ஒருவர் மூலமாக அழைப்பு விடுக்க வரவேற்பறையில் தன்னை யார் அழைத்தது என்று பார்க்க வந்து நின்றது மந்திராவே தான். தன் தேடல் முடிவடைந்தது குறித்து புல்லரிப்போடு எழுந்து நின்றான் அவன்.
மந்திரா, நல்லா இருக்கியா?
அந்த ஒரு விசாரிப்புக்காகவே காத்திருந்தவள் போல அவன் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்து தன்னுடைய கைகளுக்குள் தன் முகத்தைப் புதைத்து ஓவென அழலானாள். இதுவரை எத்தனை முறைக் கேட்டும் தன்னுடைய வேதனைகளை பகிர்ந்துக் கொள்ளாதவள் புதிய ஒருவனைக் கண்டதும் அனாதரவானவள் போல அழுவதைப் பார்த்து அங்கிருந்த கன்னியாஸ்திரி அவளருகில் வந்து அவள் தோளில் தன் கரத்தைச் சுற்ரி வைத்து அவளை ஆறுதல் படுத்த முயன்றார்.
ரித்விக்கும் அவளை தலையில் வருடி அமைதியாக இருக்க கூறினான். சில நேரம் கழிந்தது அழுகை முடிந்து , தன் முகத்தைக் கழுவி அழுகையின் தடம் இல்லாதவாறு இறுக்கமாக வந்து அமைதியாக உட்கார்ந்தாள்.
நடந்த உண்மைகளை அறிந்துக் கொள்ள அவர்கள் காத்திருப்பதை அறிந்து சொல்ல தொடங்கினாள்.
"எனக்கு திருமணத்துக்கு முன்னாடியே ஒரு தடவை அப்பா ரத்தம் பரிசோதிக்க கூட்டிட்டு போனார். ஏதோ தொற்று நோய்க்காக அந்தச் சோதனைனு சொன்னதும் நான் நம்பிட்டேன். ஆனால், அதற்கு காரணம் பின்னாடி தான் தெரிஞ்சது. என்னோட கணவருக்கு பெண் தேடும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்ன கண்டிஷன் பெண்ணோட ரத்த ரிப்போர்ட் சரி வரனும்கிறது தானாம். இப்படி தேடி எத்தனையோ பெண்களை நிராகரிச்சதுக்கு அப்புறம், என்னோட ரத்தம் சரியா இருந்ததனாலே தான் என்னை மணப் பெண்ணா தேர்ந்தெடுத்தாங்களாம்."
புதிராக பார்த்துக் கொண்டிருந்தனர் சிஸ்டரும் , ரித்விக்கும். திருமணத்துக்கும் ரத்த பரிசோதனைக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாத புதிர்தானே?
"எனக்கும் இந்த விஷயம் கடைசில தான் தெரிய வந்தது. ஊரை விட்டு நான் புறப்பட்டு வந்த கடைசி நாள்ல"…….. பெருமூச்செரிந்தவள்.
"திருமணம் முடிஞ்ச நாள் முதலா யாருமே எங்கிட்ட ரொம்ப பாசமா இல்லைன்னாலும் கூட அவ்வளவா மோசமாவும் நடந்துக்கல, ஆனா நாங்க எல்லோரும் வெளியூருக்கு சுத்த போனபோது தான் ஒரு நாள் இரவு பால் அருந்திட்டு தூங்கிட்டேன் அதுக்கப்புறம் எழுந்தப்போ ஹாஸ்பிடல்ல இருந்தேன் எழுந்தது முதலா அடி வயிற்றுல ரொம்ப வலிச்சது. என்னன்னே புரியலை. எனக்கு ஏதோ உடம்பு சரியில்லைனு சொன்னாங்க என் கிட்ட விபரமா ஏதும் சொல்லவே இல்லை."