2017 போட்டி சிறுகதை 122 - கணவனின் மறுபக்கம் - ஐஷ்வா
This is entry #122 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்
எழுத்தாளர் - ஐஷ்வா
இந்த முறை இந்தியபயணம் சுமுகமாக இருக்காது என்பது ஏற்கனவே சூரஜுக்கு தெரிந்ததுதான்.. ஆனாலும் இப்படி முதல்நாளே யுத்த களத்தில் இறங்கும் நிலைமை அவன் எதிர்பாராததே! வருடாந்தர விடுமுறை மற்றும் மகனின் பிறந்தநாள் என்று குவைத்திலிருந்து மீனம்பாக்கத்திற்கு அதிகாலை வந்தவன்.. அங்கிருந்து திருச்சிக்கு மதியமெல்லாம் வந்து சேர்ந்துவிட்டான். ‘பகல் முழுக்க மவுன யுத்தம்’ என ஏற்கனவே தீர்மானித்திருந்த ரீதியாக கமலா சிறுபுன்னகை கூட வழங்காமல் இறுக்கியே வளையவந்தாள்- அதுவும் அடுக்களைக்குள்ளேயே! வாசலுக்கு வந்து வரவேற்றது.. உட்கார வைத்து ஃபேன் போட்டதெல்லாம் சூரஜின் தாய் சுந்தரிம்மாதான்!
கல்யாணமான மறுவருடமே பயணம்போய் குவைத்திலிருந்து திரும்பிய போது, மில்லி மீட்டர் இடைவெளி இன்றி மாமியார்தோளில் மோவாயை முட்டுக் கொடுத்தவளாக நாணத்தோடே “நல்லா இருக்கீங்களா?” என குசலம் விசாரித்த கமலா பிம்பம் இன்னமும் சூரஜின் மூளை மெமரியில் உள்ளதுதான். அதன்பிறகான வரவுகளில் மருமகளுக்கும் மாமியாருக்குமான இடைவெளி மில்லி மீட்டரிலிருந்து..., சென்டி மீட்டர், மீட்டர் என விரிந்து விரிந்து இன்று மாமியார் கூடத்திலும் மருமகள் அடுக்களையிலுமான பிளவு!
ஒரு சடங்குபோலத்தான் என்றாலும் மணக்க மணக்க காய்ச்சிய ஏலக்காய் தேநீரை தானே கொண்டு வந்து தராமல், பதின்மூன்று வயது மகன் ரஜத்திடம் கொடுத்தனுப்பியதிலிருந்தே... கமலாவின் கோபம் சூரஜுக்கு தெளிவாக பிடிபட்டது. “என்னடா உங்க அம்மாவுக்கு ரொம்பத்தான் கோபமோ? கிச்சனை விட்டு ஆளை காணோமே” என மகனிடம் கேட்க... அவன் மெள்ள நெருங்கிவந்து அப்பாவின் காதைக் கடித்தான்.
“அம்மாவுக்கும் பாட்டிக்கும் எப்பவுமே சண்டைதான்”
“டேய் டேய் நீ அதை எல்லாம் பெரிசு படுத்தக்கூடாது. நீ உன் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸோட சண்டை போடுவேல்ல... அது மாதிரிதான். இன்னைக்கு சண்டை போட்டுக்குவாங்க... நாளைக்கு சேர்ந்துக்குவாங்க..”
‘தனக்கு நம்பிக்கை இல்லை’ என்பதுபோல மகன் உதடு பிதுக்கி வெளியேறினான்.
மதிய சாப்பாட்டு வேளையிலும் கமலா வெளிவரவில்லை. மருமகள் என்றொருத்தி அந்த வீட்டில் இருக்கிற பாவனையே அறியாதவர் போல சுந்தரிம்மாவும்.. கமலாவை துணைக்கு அழைக்காமல்.. தானேதான் மகனுக்கு உணவு பரிமாறினார். குழம்போ கூட்டுப்பொரியலோ தேவைப்பட்டபோதுகூட அம்மாவேதான் உள்ளே போய் போய் எடுத்துவந்தார்.
உணவு முடித்து எழுந்திருக்கையில் “வாஷ்பேசின்ல தண்ணி வராது.. கிச்சனுக்கு போங்கப்பா” என ரஜத் சொல்லவே சூரஜ் சமையலறை சென்றான்.
கை கழுகி முடியும்முன்னரே கத்தி போல கேள்வி முதுகைத் தொட்டது.
“என்ன முடிவு எடுத்திருக்கீங்க?”
வலிந்துகூட்டிய புன்னகையோடு திரும்பி.. எப்போதும்போல மனைவியின் சேலைத்தலைப்பில் கைத்துடைக்க எத்தனிக்க.. கமலா சிலுப்பிக்கொண்டு பின்வாங்கினாள்.
“முதல்ல உங்க முடிவை சொல்லுங்க”
“என்ன முடிவு? “
‘என்ன விளையாடுறீங்களா? லெட்டர்ல எழுதினதுமில்லாம போன்லேயும் சொல்லியிருந்தேன்ல.. நமக்குன்னொரு வீடு வாங்கி அதுல குடி வைங்கன்னு”
“ஏன் இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? “
“இது உங்கம்மா வீடு”
“அப்படில்லாம் ஒண்ணும் இல்லை.. என் தம்பிங்க பங்குகளுக்குண்டான பணத்தை குடுத்து செட்டில் பண்ணிட்டதால இப்ப இது என் வீடுதான்”
“ஆனா உங்கம்மா பேச்சும் செயலும் அப்படி இல்லை. அவ்வளவு அதிகாரம்“
“அது எனக்கு தெரியாது. அது உண்மைன்னாகூட இப்ப என்ன கெட்டுப்போச்சு? எங்களை எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கின எங்கம்மாவுக்கு இந்த அல்ப சலுகைகூட தரக்கூடாதா? நீ கவலைப்படாதே உனக்கும் ஒரு மகன் இருக்கான்ல.. நீ மாமியாராகும்போது இதே அதிகாரத்தை காட்டலாம்”
“நான் இந்த மாதிரில்லாம் என் மருமவளை அதிகாரம் பண்ண மாட்டேன். “
சட்டென சிரித்துவிட்டான்.
“என் மனசு கிடந்து அடிச்சுக்கிறது உங்களுக்கு சிரிப்பா போச்சா?”
“அதுல்லே..காலேஜ்ல சேர்ந்த புதுசுல ‘ராகிங்க்ல நாம பட்ட பாடு போதும். அடுத்த வருஷம் ஜூனியர்ஸை நான் ராகிங் பண்ணவே மாட்டேன்’னு எவன்லாம் சொன்னானோ அவனுங்கதான் மறுவருஷம் ஜூனியர்ஸை ரொம்ப ரொம்ப கொடுமை பண்ணுனானுங்க. உங்க மாமியார் மருமகள் வன்மமும் அப்படித்தான் தொடர்ந்துட்டே இருக்குது.. ஹஹா”
“சிரிக்காதீங்க. உங்களுக்கு சாமர்த்தியம் பத்தாது.. இதுவே உங்க தம்பிங்க ரெண்டுபேரும் கல்யாணமான கையோட தனியா போய்ட்டாங்கதானே! உங்களாட்டம் அம்மா அம்மான்னு பாட்டுப்பாடவா செஞ்சாங்க? தெரியாமத்தான் கேட்கிறேன்.. உங்கம்மாவுக்கு நீங்க மட்டும்தான் பிள்ளையா?”
“மூத்தபிள்ளை எனக்குன்னு கடவுள் தந்த பொக்கிஷத்தை நான் யாருக்கும் விட்டுத்தரமாட்டேன்”