11. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha
சந்தியா வீட்டிற்குள் நுழைந்தவுடன் லக்ஷ்மி பேசுவதை நிறுத்த “என்ன டீச்சர், என் கல்யாணத்தை பத்தி பேச்சு அடிபடுது.”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உனக்கு நேரம் வரும் போது சொல்லுவோம்”
“எப்ப சொல்லுவீங்க. பொண்ணு பாக்க வர்றப்போவா? இல்லை இடுப்புல ஒன்னு கைல ஒண்ணுன்னு புள்ள குட்டியான பிறகா? சும்மா அப்பா ரேஞ்சுக்கு மிரட்ட ட்ரை பண்ணாதீங்கம்மா... உங்களுக்கு வராது. அந்த டவுசர் பாண்டிக்கு சந்தியா கேக்குதா... அந்த பீப்பா என் மாமியாரா ?”
அத்தை மகன் பாண்டியனின் பெயரை டவுசர் பாண்டி எனவும், அத்தை வடிவை (வடிவுக்கரசி) பீப்பா எனவும், பாட்டி முத்து பேச்சியை தன்டடி பாட்டி எனவும் புனை பெயரிட்டு வைத்திருந்தனர் பூமாவும் சந்தியாவும்.
“இன்னும் சரியா தெரியலடி. அதுக்குள்ள ஆட ஆரம்பிச்சிடாத. உங்க அப்பா நேரில் வந்து பேசுறேன் சொல்லிருக்காங்க. எனக்கும் தான் உங்க அத்தைக்காரிகிட்ட உன்னை கொடுக்க மனசே இல்ல. என் பேச்சை உங்கப்பா என்னைக்கு கேட்டு இருக்காரு. ஊர்ல உங்க அப்பத்தா நல்லா பிரைன் வாஷ் பண்ணி வைச்சு இருக்காங்க” என்றார் லக்ஷ்மி.
தன்ராஜ் குடும்பத்துடன் வருடமொருமுறை அவருடைய கிராமத்து கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்வார். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி கிராமத்திற்கு சென்ற போது, தோட்டத்து கிணற்றுக்கு அருகில் உள்ள பம்செட்டில் குளித்து விட்டு, கிணற்றின் மீது திண்டு போல போட பட்டிருந்த கல்லில் உட்கார்ந்து சந்தியாவும், பூமாவும் துணியை துவைத்துக் கொண்டிருந்தனர்.
சந்தியா, “இந்த கிராமத்து பேக்கிரவுண்ட்ல மார்டன் சாங்க்கு டான்ஸ் ஆடுடி பூ. “ என்று சொல்லி கொண்டே அந்த நேரம் வெளிவந்த குஷி படத்தில் உள்ள “மேகம் கருக்குது” பாட்டை பாடினாள்.
“மேகம் கருக்குது” என்று பாடி பூமா இடுப்பை ஆட்ட, “...தம்ச்சிக்கு தம் தம் ” என துணியை கும்மிக்கொண்டே சந்தியா பின்னணி இசைத்தவாறு, அந்த திண்டில் ஆடி பாடி கொண்டிருந்தனர்.
மேகம் கறுக்குது … (துணியை கும்மிக்கொண்டே சந்தியா) தம்ச்சிக்கு...தம்ச்சிக்கு
மின்னல் சிரிக்குது ….தம்ச்சிக்கு....தம்ச்சிக்கு
சாரல் அடிக்குது ...தம்ச்சிக்கு....தம்ச்சிக்கு
இதயம் பற ”
என இதயம் பறக்கவில்லை... பூமா பறந்து போய் கிணற்றில் விழுந்தாள். அங்கிருந்த சோப்பு நுரை அவள் ஆடும் பொழுது சறுக்கி விட்டு விட்டது. நீச்சல் அவர்கள் இருவருக்கும் தெரியாததால், பூமாவை சந்தியாவால் காப்பாற்ற முடியாமல் அருகில் வயலில் இருந்த பாண்டியனை அழைத்தாள்.பாண்டியன் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பூமா அதிகமாக தண்ணீரை குடித்து மயங்கி இருந்ததால், பாண்டியன் அவள் வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியேற்றினான். திரையில் நெருக்கமான காட்சிகள் வரும் போது “தப்பு” என கண்களை மூடிக் கொள்ளும் பருவம் சந்தியாவிற்கு. அவனின் அணுகுமுறை பிடிக்காவிட்டாலும் பூமா பிழைத்தால் போதும் என பேசாமல் விட்டு விட்டாள். இருந்தாலும் அவன் மீது ஏகப்பட்ட வெறுப்போடு தான் இருந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பிறகு பாண்டியனுக்கு பூமா மீது மையல் ஏற்பட்டு, அடுத்த நாளே காதல் கடிதம் ஒன்றை அவளிடம் கொடுத்தான். அப்பொழுது தான் பருவம் எய்திய பூமாவிற்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படத்தான் செய்தது. இயற்கை வினோதம் தான்... சந்தியாவிற்கும் பூமாவிற்கும் ஒரு வருட வித்தியாசம் .....ஆனால் இவர்களின் எண்ணங்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. பூமா அந்த கடிதத்தை சந்தியாவிடம் காட்டாமல் மறைத்தாள். விடுவாளா சந்தியா? அதை மோப்பம் பிடித்து, தனது அப்பா தன்ராஜிடம் போட்டு கொடுத்து, அத்துடன் நிற்காமல் அன்று கிணற்றில் இருந்து அவன் காப்பாற்றிய போது நடந்ததையும் மிகை படுத்தி கூறினாள்.
தந்தையில்லாத பாண்டியனுக்கு படிப்புக்கு பண உதவி செய்து வந்த தனக்கே துரோகம் செய்து விட்டான் என தன்ராஜ், அவனை ஊரார் முன்னிலையில் இடுப்பில் இருந்த பெல்டை கழட்டி அடித்து விட, அதுவே பெரிய தகராறாகி வடிவுக்கரசி குடும்பத்துடன் பேச்சுவார்த்தையே இல்லமால் போனது. இது தன்டட்டி பாட்டிக்கு பிடிக்கவில்லை. “இந்த பொட்டச்சி. புறந்தப்பவே கூட புறந்தவனை முழுங்கிட்டு பொறந்தா. இப்போ என் புள்ள கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் மூட்டிவுட்டி வடிவை ஆகவிடாம பண்ணிட்டா....எல்லாம் இந்த சிறுக்கி சொல்லி கொடுத்திருப்பா.. ” என எந்த நேரமும் சந்தியாவை மட்டும் அல்லாது லக்ஷ்மியையும் சேர்த்து கரித்து கொட்டிகிட்டு இருப்பார்.
அதற்கு பின், படிப்பில் முழுகவனம் செலுத்திய பாண்டியன் நன்றாக படித்து, சென்னையில் ஒரு முன்னணி பத்திரிகை நிறுவனத்தில் பணியில் அமர்ந்து, அதே நேரம் கிராமத்திலும் நன்மதிப்பு பெற்றான். அவன் வளர்ச்சியை பார்த்து தன்ராஜிற்கும் பாண்டியன் மேல் மதிப்பு உண்டாகியது. பாண்டியனும் தன்ராஜை பார்த்தால் வழிய சென்று அவரிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு செல்வான். கடந்த இரு வருடங்களாக, தண்டட்டி பாட்டி அடிக்கடி நோய்வாய்ப்பட, வடிவுக்கரசி தான் அவரை பார்த்து கொள்கிறார். இதனால் மீண்டும் இரு குடும்பங்களுக்கும் உறவு சுமுகமாக, அதை பலப்படுத்த சந்தியாவை பாண்டியனுக்கு மணமுடிக்க விரும்பினர்.
“ஏதாவது சொல்லி தட்டி கழிங்க. அவன் அப்பாகிட்ட பெல்ட்டால அடிவாங்கின பிறகும் வெக்கம் இல்லாம பொண்ணு கேட்டு வர்றானா ஏதோ காரணம் இருக்கும். “ என்றாள் சந்தியா லக்ஷ்மியிடம்.
“அப்படியெல்லாம் இருக்காதுடி. பாண்டியன் தங்கமான பையன். பூமா பிரச்சனைக்காக எத்தனை வாட்டி எங்கிட்ட மன்னிப்பு கேட்டு இருக்கான் தெரியுமா? பாசமான பய. ஊருக்கு போறப்பெல்லாம் அத்தை அத்தைன்னு உயிரா கெடப்பான்” என்றார் லஷ்மி.
“அம்மா.... ஒரு பழமொழி இருக்கு அழகிய பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்று அர்த்தம்ன்னு. நீங்க ஒன்னுக்கு நாலு பொண்ணுகளுக்கு அம்மா ….அத்தை அத்தனைன்னு சொல்லத்தான் செய்வாங்க. உங்களுக்கு எடுபிடி வேல செய்யதவுடனே நீங்க குளுந்திடுவீங்களே” என்று சந்தியா சொல்லும் போது போனில் கார்த்திக் அழைக்க அவள் அதை எடுக்காமல் மேலும் தொடர்ந்தாள். “ஐ.ஐ.டிக்கு ட்ரைன் பண்றது சாதாரண விஷயம் கிடையாது. அஜு வையும் மத்த பசங்களையும் நல்ல விதமா செட்டில் பண்ண பிறகு தான் நான் கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும்” என்றாள் சந்தியா.
“இப்போ உறுதி செய்துட்டு அடுத்த வருஷம் கல்யாணம் வச்சிக்கிலாம் தான் அப்பா சொன்னாரு” என்றார் லக்ஷ்மி.
“அதான் ஏன் அவ்வளவு அவசரம்ன்னு கேக்குறேன்? என் மேல அப்பாக்கு நம்பிக்கை இல்லையா ?” என்றாள் சந்தியா.
“இங்க பாரு சந்து. இந்த மாறி கேள்வியெல்லாம் உங்க அப்பாகிட்டவே கேட்டுக்கோ. சும்மாவே உங்க அப்பத்தாவ கடைசி காலத்தில பாத்துக்க முடியலன்ற வேதனைல என் மேல எரிஞ்சு விழுறாரு. அவுங்க கிராமத்தை விட்டு வராட்டினா நான் என்ன செய்ய? வடிவு அப்படி பாத்துக்கிறா..இப்படி பாத்துக்கிறான்னு ...ஒன்னு விட்ட தங்கச்சி மேல உங்கப்பா ஒரே பாச மழை... இப்ப என் பேச்சு எடுபடாது” என்ற லக்ஷ்மி அரட்டுவது போல ஆரம்பித்து வருத்தத்துடன் முடித்தார்.
சந்தியா “சரி விடுங்க. இன்னைக்கு அப்பா வந்து முழு விவரம் சொன்ன பிறகு பாத்துக்கலாம். எனக்கு நெறைய வேலையிருக்கு. ஒரு காபி போட்டு தாங்க” என்று சொன்னபடி மாடி படியில் ஏறினாள்.
“எதுக்கு படுக்க போற நேரத்தில் காபி? அப்புறம் தூக்கம் வராது.” என்றார் லக்ஷ்மி. “தூக்கம் வரக்கூடாதுன்னு தான் காபி கேட்டேன். வேலை நிறைய இருக்கு. காபி அடிச்சா தான் தப்பு, குடிச்சா தப்பில்ல டீச்சர். ஒன் கப் ஆப் காபி ப்ளீஸ்” என்ற சந்தியாவிடம், “சித்தி உப்பு மூட்டை” என்று யாழினி கேட்க அவளை முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றாள்.
அப்போது மீண்டும் கார்த்திக் அழைக்க, போனை எடுத்த ஸ்ரீயிடம், என்ன சொல்வதென தெரியாமல், நாளை வேலை விஷயமாக அழைத்ததாக சமாளித்தான் கார்த்திக். “அவளும் நைட் வேலை இருக்குன்னு சொல்லிட்டு தான் மாடிக்கு போனா..இருங்க ஒரு நிமிஷம் அவகிட்ட கொடுக்கிறேன்” என்றவளிடம் தான் பின்னர் அழைப்பதாக சொல்லி விட்டு, தனது வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
கார்த்திக் வீட்டில், சௌபர்ணிகா மீராவிடம் கேட்ட கேள்வியில் திகைத்த மீரா,
”அத்தை, முதல்ல நீங்க அபியை காதிக்கு கேட்டதுல என் அபிப்பிராயத்தை சொல்லிடுறேன் . உங்களுக்கே தெரியும், எனக்கு ப்ரக்னன்சில ரெம்ப சிக்கல் இருந்தது. கிட்ட தட்ட பாதி டெர்ம் பெட் ரெஸ்ட்ல இருந்தேன். அந்த சமயம் பக்கத்தில காதி இல்லன்னா நாங்க ரெம்ப கஷ்டப்பட்டிருப்போம். காதியோட பொறுப்பையும் அக்கறையும் பாத்து என் டெலிவரிக்கு வந்த அம்மாவும் அப்பாவும் அசந்து போயிட்டாங்க. அவங்களுக்கும் காதியையும் மருமகனாக்க ஆசை இருக்கு. அபிக்கு அக்காவா பாக்கிறப்போ காதி கிடச்சா அபி ரெம்ப லக்கி. “
“ஆனா இந்த வீட்டு மருமகளா பாக்கிறப்போ, சந்தியா கிடச்சா காதி மட்டும் இல்ல நாம எல்லாருமே லக்கின்னு தோணுது. சூர்யா கூட, காதி கோபத்தை சந்தியா நிதானமா ஹான்டில் பண்றான்னு ஆச்சர்யப்பட்டு போனார். இன்னைக்கு பாத்தீங்கல்ல அவ வந்து இருந்த அரை மணி நேரம் அந்த இடமே எவ்வளவு கலகலப்பா இருந்ததுன்னு. அதோட தைரியமான பொண்ணாவும் தெரியுறா. இப்போ இருக்கிற சூழ்நிலையில் மாமாக்கும் உங்களுக்கும் அந்த மாதிரி கலகலப்பா அதே நேரம் தைரியம் கொடுக்கிற பொண்ணு தான் மருமகளா வரணும். ” என்று தனது எண்ணத்தை சொல்லி முடித்தாள் மீரா.
“ம்..... நான் சந்தேகப்பட்டது சரிதான். காதிய வரச்சொல்லிட்டு நீ தூங்க போ. நான் அவன்கிட்ட பேசிக்கிறேன் .” என்று அவளை அனுப்பி வைத்தார். மீரா அவனை தேடும் நேரத்தில் கார்த்திக் வீட்டிற்குள் நுழைய “காதி உன்னை தான் அத்தை தேடுறாங்க.அவங்க சந்தியா பத்தி கேட்டா அவள லவ் பண்றேன்னு சொல்ல போறியா கார்த்திக்?” என்றாள் மீரா. “என்ன அண்ணி..அவள லவ்வா? உங்க வைட் ட்ரெஸ் போட்ட மனசாட்சி கிட்ட கேட்டு பாருங்க... அந்த பேயை லவ் பண்ணா இந்த காதி கதை என்னவாகும்ன்னு. இது என்னோட கேம். இதுல நான் ஒரு ரொமண்டிக் பெர்சநாளிட்டி. கேம் முடிஞ்சவுடனே அவளுக்கு குட் பை சொல்லிடுவேன் “ என்று சல்யூட் செய்வது போல செய்து காட்டிவிட்டு சௌபர்ணிகா இருந்த அறையை நோக்கி சென்றான் கார்த்திக்.