வர்ஷா சொன்னதற்கு, ப்ரியா முகத்தில் பதிலாக சின்ன புன்னகை மட்டுமே தோன்றியது...!
ஆனால் அவளை அப்படி ஒதுங்கி இருக்க விடாமல் மூன்றுப் பெண்களுமாக எதையாவது பேசியப்படி இருந்தார்கள்... மாலை ஆஃபிஸில் இருந்து வந்தது முதலே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விக்கிராந்திற்கு ப்ரியாவை அனைவருடனும் கலகலப்பாக பேச வைக்க அவர்கள் முயற்சிப்பது புரிந்தது...
ஆனால் அவனுக்கு ஏனோ ப்ரியா அப்படி ஒன்றும் ஒதுங்கி இருப்பதாக எண்ணம் தோன்றவே இல்லை... முதல் நாள் பார்த்தப் போது கூட இயல்பாக தானே பேசினாள்...
அதைப் பற்றி இப்போது மீண்டும் யோசித்து பார்த்தவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது... அன்று ப்ரியா அவனிடம் முழுதாக ஒரே வரி தான் பேசினாள்... மற்றபடி அவள் முழுவதுமாக பேச அவர்கள் யாருமே அனுமதிக்கவே இல்லையே!
🌼🌸❀✿🌷
"அம்மா, காஃபி!" தூக்கமும் சோம்பலும் கலக்க கேட்ட விக்கிராந்திற்கு காஃபியை கையில் எடுத்து வந்தாள் ராஜம்!
அவளின் வழியில் எதிரே வந்த வைஜெயந்தி, "இந்த பொண்ணை என்ன செய்றது ராஜம்," என புலம்பினாள்!
அதைக் கேட்டு தலை ஆட்டிக் கொண்டே மகனிடம் வந்து காஃபியை நீட்டினாள் ராஜம். காஃபியை கையில் வாங்கிய விக்கிராந்திற்கு, என்ன விஷயம் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் எழுந்தது! வைஜெயந்தி சொன்ன 'இந்த பொண்ணு' கட்டாயம் ப்ரியா என்று தான் அவனுக்கு தோன்றியது... எனவே ராஜமை கேள்வியாகப் பார்த்தான்...!
அவன் எதிர்பார்த்ததுப் போலவே ராஜம் உடனடியாக புரிந்துக் கொண்டு அவனுக்கு பதில் சொன்னாள்!