"நம்ம அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில ஒரு நாய் நாலு குட்டி போட்டிருந்தது... நேத்தைக்கு ஏதோ வண்டி இடிச்சிடுச்சு போல, அந்த அம்மா நாய் இறந்திடுச்சு... அந்த சின்ன குட்டிங்க நாலும் க்வைங் க்வைங்ன்னு கத்திட்டே இருக்குங்க... வர்ஷாவும், ப்ரியாவும் காலையிலே வாக்கிங் போனப்போ பார்த்திருக்காங்க... அதுங்களுக்கு சாப்பிடன்னு பால் கொண்டு போனா அதுங்க குடிக்க மாட்டேங்குதாம்... சொன்னா கேட்காம ப்ரியா அங்கேயே இருக்கா, அதை தான் சொல்றாங்க...!"
"ஓ! ப்ளூ க்ராஸ் இல்லன்னா வேற ஏதாவது அனிமல் ட்ரஸ்ட்க்கு சொல்லி கவனிக்க சொல்லலாம்..." என்று விக்கிராந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ப்ரியா ஒரு சின்னக் கிண்ணத்துடன் வந்தாள்.
"ப்ரியா!!! டைம் என்ன ஆச்சுன்னு பார்த்தீயா? எப்போவும் கிளம்புறதை விட அரை மணி நேரம் சீக்கிரம் கிளம்பனும்னு சொல்லிட்டு இருந்த?? இப்போ இப்படி நாய் குட்டி பின்னாடியே சுத்திட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் கிளம்பு..." என்றாள் வைஜெயந்தி ஹை பிட்சில்!
பதிலுக்கு, "சரி அத்தை..." என்று மட்டும் அவசரமாக சொல்லி விட்டு உள்ளே சென்றாள் ப்ரியா.
விக்கிராந்த் அதை எல்லாமும் கூட கவனித்துக் கொண்டு தான் இருந்தான்! அது என்னவோ ப்ரியாவை இப்படி அமைதியாக ஓரமாக இருந்து 'அப்சர்வ்' செய்து தெரிந்துக் கொள்ளும் ஆர்வக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டு இருந்தது!
ப்ரியா ஒரு பக்கம் சென்றதும், அவனும் ஆஃபீசிற்கு செல்ல தயாராக இன்னொரு பக்கம் சென்றான்!
அடுத்த ஒன்றரை மணி நேரம் பொறுமையாக தயாராகி கிளம்பிய விக்கிராந்த், ராஜம் வைஜெயந்தி கணபதியிடம் விடைப்பெற்றுக் கிளம்பினான்! ப்ரியா அவனின் கண்ணில் படவில்லை! அவள் ஏற்கனவே ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள் போலும் என யோசித்துக் கொண்டே, கையில் பைக் சாவியை சுற்றியப்படி, அவனின் பைக்கை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்தான்...!