”தெரிஞ்சேவா அவள் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டா“
”சே சே இல்லை அவளுக்கு கல்யாணம் ஆனபின்னாடிதான் தெரியும், எனக்கு கல்யாணம் வேணாம்னு பலமுறை சொல்லியும் என் அப்பா அம்மா கேட்கலை, பிடிவாதமா என்னை பவானிக்கு பேசி கல்யாணம் முடிச்சாங்க, என்னாலயும் என் குறையை மறைச்சிக்கிட்டு பொய்யா அவள்கூட வாழ முடியலை, இதான் காரணம்னு சொல்ல தயக்கம், அதனால நிவேதினியை என்னால மறக்க முடியலைன்னு சொல்லி அவளை விட்டு விலகி வாழ்ந்தேன் ஆனா, அவளுக்கு நான் ஒரு குறையும் வைக்கலை மகாராணி போல அவளை பார்த்துக்கிட்டேன் ஆனா, குழந்தையில்லைங்கற குறைதான் அவளுக்கு பெரிசா தெரிஞ்சது, ஒருநாள் என்கூட சண்டை போட்டா, அப்ப வேற வழியில்லாம நான் உண்மையை சொன்னேன்”
”அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க“
”என்ன சொல்வா வருத்தப்பட்டா, நானும் அவளை உட்காரவைச்சி வாழ்க்கையோட தத்துவத்தை எடுத்துச் சொல்லி புரிய வைச்சேன், குழந்தையில்லைன்னா என்ன ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணி அவளை கூட்டிட்டு ஆசிரமம் வரைக்கும் போனேன் ஆனா, அவளுக்கு மனசு வரலை, பரவாயில்லை, நாம இப்படியே ஒருத்தர் மேல ஒருத்தர் அன்போடு வாழ்ந்துக்கலாம்னு சொன்னா, அவள் சொன்னதை நான் ஏத்துக்கிட்டேன் ஆனா, அவளோ குழந்தையை நினைச்சி ஏங்கி ஏங்கி ஒரு நாள் தவறான முடிவெடுத்து ரயில்ல பாஞ்சி தற்கொலை செய்துக்கிட்டா அவ்வளவுதான், என் வாழ்க்கையே இருண்டு போயிடுச்சி” என சொல்லி கதறி கதறி அழுதான்
இப்போதும் அந்த அழுகை அவளுக்கு நடிப்பாகவே தெரிந்தது. அழுது முடித்து அவளைப் பார்த்தான் ஹரிணியோ இன்னும் வியப்புடனே இருந்தாள்
”சாரி ஹரிணி பவானியை நான் ஏமாத்தலை, கட்டாய கல்யாணம் அது, அதனால என் குறையை அவள்கிட்ட நான் சொல்லலை”