மறுபடி 'ஹலோ' என்றான் வசந்த்
சுவாசத்தைக்கூட கட்டுப்படுத்திக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார் அப்பா. அடுத்ததாக சொல்ல வேண்டும் அவன். 'திஸ் இஸ் வசந்த் ஹியர்' என்று சொல்லவேண்டும் அவன். காத்திருந்தார் அப்பா.
'யாராக இருக்கும்' என்று யோசித்தபடியே கைப்பேசியை காதிலிருந்து எடுத்தான் வசந்த்.
திரையில் ஒளிர்ந்தது அந்த எண். மூளைக்குள்ளே சுரீரென்றது.
அந்த எண் அர்ச்சனா முன்பு பயன்படுத்திக்கொண்டிருந்த எண்.
அந்த எண் அவனுக்கு மனப்பாடம்.
'அப்படியென்றால் அழைப்பது அர்ச்சனாவின் அப்பாவா?'
எதற்காக அழைக்கிறாராம்? காலையில் அவளை துருவினாரே 'இது யார் எண்' என்று? என்ன தெரிந்துக்கொள்ள விரும்புகிறாராம்?
கைப்பேசியை காதில் வைத்து நிதானமாய் 'ஹலோ' என்றவன், 'ஹேளி நிமிகே யார் பேக்கு' என்றான் கன்னடத்தில். (சொல்லுங்கள் உங்களுக்கு யார் வேண்டும்)
சற்று தடுமாறிப்போனவர் 'ஹலோ' என்றார் மறுமுனையில். கேட்டது அந்தக்குரல். நீண்ட நாளைக்கு பிறகு கேட்டது அந்தக்குரல்
"ஹேளி' என்றான் மறுபடியும், 'நீவே கரி மாடிதீரல்வா. ஹேளி யார் பேக்கு நிமிகே ' (சொல்லுங்கள். நீங்கள் தானே அழைத்தீர்கள் யார் வேண்டும் உங்களுக்கு?)
அடுத்த நொடி துண்டித்துவிட்டிருந்தார் அழைப்பை. 'அவன்தானா அது. தெரிந்துக்கொண்டு விளையாடுகிறானா?
உதடுகளில் ஓடிய புன்னகையுடன் வசந்த் கைப்பேசியை கீழே வைத்த நிமிடத்தில் உள்ளே நுழைந்தான் மனோ 'யாருடா phoneலே' என்றபடியே
"ம்?' என்று நிமிர்ந்தான் வசந்த் 'என் மாமனார்'
திடுக்கென்று நிமிர்ந்தான் மனோ ' அர்ச்சனா அப்பாவா?'
'ம்' என்றான் வசந்த் 'என்னமோ சந்தேகம் அவருக்கு. phone பண்ணி ஏதோ தெரிஞ்சுக்க முயற்சிப்பண்றார்'
'அப்படியா...' என்று யோசித்தப்படியே அமர்ந்தான் மனோ. அடுத்து ஏதாவது காய் நகர்த்துவாரா?'
சிறிது நேரம் வசந்துடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் மனோ.
இரவு ஒன்பது மணி. ஒலித்தது வசந்த் வீட்டு அழைப்பு மணி.
' யாராக இருக்கும்' என்று எண்ணியபடியே கதவை திறந்தவன் அப்படியே நின்றுவிட்டிருந்தான்
'மூடியிருக்கும் ஜன்னல்களை திறந்தவுடன், சுகமான பனிக்காற்று சட்டென்று வருடும் போது, உடலும் ,மனமும் சில்லென்று விழித்தெழுமே, அதே போன்றதொரு உணர்வு அவனுக்குள்ளே.'
வாசலில் நின்றிருந்தாள் அர்ச்சனா.
'வாங்க மேடம்' என்றான் வசந்த் வாங்க, வாங்க ,வெல்கம்'
மௌனமாய் உள்ளே வந்தமர்ந்தாள் அர்ச்சனா. அவள் எதிரே அமர்ந்தான் வசந்த்.
'அவள் மனம் ஒரு நிலையிலில்லை. கண்களை மூடினால் அந்த வாட்ச் அவள் கண்முன்னே வருகிறது. நிம்மதி காணமல் போய்க்கொண்டிருக்கிறது அவனிடம் பேசுவதே உத்தமம்'
'ஒரு ஹெல்ப் வேணும்' என்றாள் தலையை குனிந்தபடியே.
'எதுவா இருந்தாலும் என் முகத்தை பார்த்து பேசணும்' என்றான் வசந்த்
மெல்ல கண்களை நிமிர்த்தினாள் அர்ச்சனா.
ஏதோ ஒரு அழகான ஓவியத்தை திரையிட்டு மறைத்தது போல் அவள் முகம் கவலையில் இருண்டிருந்தது.
'என்னாச்சுடா?' என்றான் வசந்த்
'இந்த வாட்ச்.....' என்றாள் அவன் கை மீது பார்வை பதிந்தது.
'ம்' என்றான் 'எங்கப்பாவோடது. அவர் கடைசியா கையில கட்டியிருந்த வாட்ச்..........' சில நொடிகள் அவன் மனம் எங்கோ சுழன்று திரும்பியது..
'உங்கப்பாவோடதா'? திடுக்கென நிமிர்ந்தாள் 'உனக்கு ரொம்ப சென்டிமென்டானதா'?'
மெல்ல சிரித்தான் வசந்த் 'உனக்கு என்ன வேணும் அதை சொல்லு'
'நீ இந்த வாட்சை கட்டிக்காம இருப்பியா?
புருவங்கள் உயர, அவள் முகத்தில் இருந்த தவிப்பை பார்த்தபடியே பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.
'இல்ல வசந்த். எனக்கு எங்கப்பா பத்தி ஒரு கனவு. காலைலேருந்து மனசே சரியில்லை. ரொம்ப பயம்மா இருக்கு. எனக்காக நீ இந்த வாட்சை கட்டிக்காம இருப்பியா வசந்த்?" கண்களில் நீர் சேரக்கேட்டாள் அர்ச்சனா.
அடுத்த நொடி அந்த வாட்ச் அவன் சட்டைப்பைக்குள் போய்விட்டிருந்தது.
'கனவுக்கும், வாட்சுக்கும் என்ன சம்பந்தம்?' எதுவுமே புரியவில்லைதான் அவனுக்கு.
'எனக்காக இந்த வாட்சை கட்டிக்காம இருப்பியா வசந்த்? அந்த ஒரு கேள்வியில் வாட்ச் தன்னாலே கழன்று அவன் சட்டைப்பைக்குள் போய்விட்டிருந்தது. அதன் பிறகு எதுவுமே கேட்க தோன்றவில்லை அவனுக்கு.
சட்டென்று திரை விலகி வெளியே வந்தது அந்த ஓவியம். அவள் முகம் முழுவதும் நிம்மதி பரவ இதழ்களில் புன்னகை ஓடியது. 'ரொம்ப தேங்க்ஸ் வசந்த்'
'யப்பா', 'யப்பா' என்றான் வசந்த் அவள் புன்னகையை ரசித்தப்படியே.
'வேற ஏதாவது நாலஞ்சு ஹெல்ப் வேணுமா?'
இல்லையே எதுக்கு?'
'நீ மறுபடியும் இதே மாதிரி சிரிப்பியே அதுக்குதான்' சிரித்தான் வசந்த்.
மெல்ல சிரித்தப்படியே எழுந்தாள் அர்ச்சனா.
'பார்த்தியா' என்றான் வசந்த்' வேலை முடிஞ்ச உடனே கிளம்பறியே'
'இல்லை வசந்த்' லேட்டாச்சு. இன்னொரு நாள் வரேன்' என்று நகரப்போனவள் சட்டென கேட்டாள் 'உனக்கு வேற வாட்ச் இருக்கில்ல?'
'ஆயிரம் வாட்ச் வெச்சிருக்கேன். இனிமே எப்பவுமே இந்த வாட்சை கட்ட மாட்டேன். நீ தைரியமா இரு' சிரித்தான் வசந்த்.
'தேங்க்ஸ் வசந்த்'. குட் நைட்' என்று நகரப்போனவள் மறுபடி நின்றாள்.
இரண்டு நாட்களாய் மனதின் ஏதோ ஒரு ஓரத்தை உறுத்திக்கொண்டிருக்கும் அந்த கேள்வி. அதை அவனிடம் கேட்டு விடலாமா?
சில நொடிகள் யோசித்தவள் மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அவன் முகத்தை பார்த்தாள்.
'வசந்த்'
'ம்'
'நேத்து மனோ சொன்னது நிஜமா? பொய்யா?
'என்ன சொன்னான்?'
'இல்ல, உனக்கு கல்யாணமாயிடிச்சுன்னு........'