ஸோபாவில் பின்னால் சாய்ந்துக்கொண்டு அமர்ந்தபடி சில நொடிகள் அவள் கண்களை ஆராய்ந்தான். அதில் சின்னதாய் ஒரு தவிப்பு ஓடிக்கொண்டிருந்தது. அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் சொன்னான் வசந்த் 'குட் நைட்'
சட்டென்று கண்களில் ஏமாற்றம் பரவ 'குட் நைட்' என்று நகர்ந்தாள் அர்ச்சனா.
சில நிமிடங்கள் உதடுகளில் புன்னகை ஓட அப்படியே அமர்ந்திருந்தவன் ,எழுந்து சென்று பீரோவை திறந்தான். அந்த வாட்சை கையில் எடுத்தான் .சில நொடிகள் அதையே பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் அதை உள்ளே வைத்து மூடினான்.
அதே நேரத்தில், சரியாய் அதே நேரத்தில், சிங்கப்பூரில், அதே போன்றதொரு வாட்சை, அச்சு அசலாய் அதே போன்றதொரு வாட்சை தனது கையிலிருந்து கழற்றினான் அவன்.
'எத்தனை நாட்கள் ஒரே வாட்சை அணிவதாம்? வேறு வாட்சை எடுத்து கையில் கட்டிக்கொண்டான்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு தன் பெட்டியில் எல்லாவற்றையும் அடுக்கி கொண்டிருந்தான் அவன். அந்த பெட்டியினுள் இந்த வாட்சை வைத்தான்.
அவன், அர்ச்சனாவின் மாமா மகன், ஸ்வேதாவின் அண்ணன் 'விவேக்'.
டாக்டர் விவேக்.
தினமும் ரத்தமும், ஊசியும், மருந்தும், மாத்திரைகளும்.........
இதிலிருந்து தற்காலிக விடுதலையாய், ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு, இந்தியா வருகிறான் விவேக். அவனுடனே கிளம்புவதாக இருந்த அவன் அப்பாவும், அம்மாவும் கடைசி நேரத்தில், அப்பாவின் வேலைக்காரணமாக பயணத்தை தள்ளிப்போட்டு விட்டார்கள். நாளை இரவு சென்னைக்கு விமானம்.
இந்தியாவுக்கு சென்று தங்கை ஸ்வேதாவை பார்க்க வேண்டும். அதை விட முக்கியமாய் அர்ச்சனாவை பார்க்க வேண்டும்.
'அர்ச்சனா' தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் விவேக். 'அவள் அவனது முதல் காதலி.'
அப்படியே படுக்கையில் சாய்ந்தான் விவேக்.
'அவனது பதினேழாவது வயதில் அவன் அவளுக்கு கொடுத்த காதல் கடிதம். அதற்காக இரண்டு அப்பாக்களும் சேர்ந்து அவனை விளாசிய விளாசல்கள். இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. அப்போது எத்தனை கோபம் வந்தது எல்லார் மீதும்.
.'என் அத்தை பெண்ணை நான் லவ் பண்ணாம வேற எவன்டி லவ் பண்ணுவான்? சொல்லிட்டே இல்ல எல்லார்கிட்டேயும். இரு உனக்கு நான் யாருன்னு காட்றேன்' மிரட்டினான் அர்ச்சனாவை.
அதன் பிறகு ஏதோ மிகப்பெரிய வில்லனை பார்த்தது போல் அவனைப்பார்த்து அர்ச்சனா ஓடி ஒளிந்த நாட்கள்..............
வயது ஏற ஏற தான் செய்தது சிறுபிள்ளைத்தனம் என்று அவனுக்கே புரிந்தது.
அதன்பிறகு சிங்கப்பூர் வந்தாயிற்று.
மருத்துவப்படிப்பு. டாக்டர் தொழில். அதில் முன்னுக்குவர வேண்டிய கட்டாயம். அதனாலேயே மூன்று வருடங்களுக்கு முன்னால் அவளுடன் திருமணம் என்ற பேச்சு வந்தபோது மறுத்தான் விவேக்.
ஆனால் அவளுக்கு வசந்துடன் நிச்சியதார்த்தம் நடந்தவுடன், லேசாய் சுருக்கென்றது 'அவனுக்கு சொந்தமானதை யாரோ எடுத்துக்கொண்டதைப்போல். ஓர் உணர்வு.'
நின்றே போனது அந்தத்திருமணம். அப்போது தோன்றியது. அவள் என்னுடன் சேர்வதர்காகவே நின்றிருக்கிறது இந்த திருமணம்.
இப்போது டாக்டர் தொழிலில் முன்னேறியாகிவிட்டது. இனி அவளை எதற்காகவும் இழப்பதாக இல்லை.
வாய்விட்டு சொல்லிக்கொண்டான் விவேக் '.'என் அத்தை பெண்ணை நான் லவ் பண்ணாம வேற எவன்டி லவ் பண்ணுவான்? வரேன். நான் வரேன்'.
படுக்கையில் சென்று விழுந்தாள் அர்ச்சனா. மனம் ஓரளவு ஆறியிருந்தது. இனி கனவு பலிக்காது என்று சின்னதாய் ஏதோ ஒரு நிம்மதி. ஆனால் மனம் அப்பாவையே சுற்றியது. நாளை வெள்ளிகிழமை. சனி, ஞாயிறு விடுமுறை. அப்பாவை சென்று பார்த்துவிட்டு வந்தால் என்ன?
கிளம்பிவிட்டிருந்தாள். சனிக்கிழமை காலை 5 மணி விமானம்.
'வந்து ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ளே என்ன?' என்ற மனோவின் பேச்சை கேட்பதாக இல்லை அவள். அவளை விமானம் ஏற்றி விட வந்தவன் சொன்னான்,
'அங்கே போய் வசந்தை பத்தி எதுவும் உளறாதே. புரியுதா?'
'பார்வையை வேறு புறமாய் திருப்பிக்கொண்டு சொன்னாள் 'சொல்ல மாட்டேன். கவலை படாதே. '
'ஆஹா....... உனக்கு கூட அறிவு இருக்கே. சந்தோ......ஷம்' என்றான் மனோ.
வீட்டிற்கு வந்திறங்கினாள் அர்ச்சனா.
நான்கு முறை அழைப்பு மணியை அழுத்தியாகி விட்டது. கதவு திறக்கப்படவில்லை.
பயம் பற்றிக்கொண்டது. யோசனையுடன் வீட்டின் பக்கவாட்டில் வந்து, படுக்கையறையின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தவள் அலறியே விட்டிருந்தாள்.
அப்பா..............!
படுக்கையறையில் கட்டிலின் அருகே தரையில் விழுந்து கிடந்தார் அப்பா.
தொடரும்
Manathile oru paattu episode # 04
Manathile oru paattu episode # 06
{kunena_discuss:683}